ஆதியாகமம் 13
13
ஆபிராமும் லோத்தும் பிரிதல்
1ஆபிராம் தன் மனைவியுடனும் தன் அனைத்து உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப்#13:1 நெகேப்புக்கு – கானானின் தெற்குப் பகுதியான பாலைவனப் பிரதேசம். போனார்; லோத்தும் அவருடன் போனான். 2ஆபிராம் கால்நடைகளையும், தங்கத்தையும், வெள்ளியையும் கொண்ட பெரிய செல்வந்தனாக இருந்தார்.
3பின்னர், அவர் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் அமைத்திருந்த இடத்துக்கு வந்து, 4தான் முன்னர் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்றார். ஆபிராம் அங்கே கர்த்தரின் பெயரைக் கூறி வழிபட்டார்.
5ஆபிராமுடன் பயணம் செய்த லோத்துக்கும் ஆடு மாடுகள் இருந்தன, அத்துடன் அவனுக்குரிய மக்களும்#13:5 அவனுக்குரிய மக்களும் – எபிரேய மொழியில் கூடாரங்களும் என்றுள்ளது இருந்தனர். 6அவர்கள் இருவரது உடைமைகளும் ஏராளமாய் இருந்தபடியால், அவர்கள் சேர்ந்து வாழ அங்கிருந்த நிலவளம் போதாமல் இருந்தது. 7அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள்.
8இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும், எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையில் சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள். 9இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கின்றது அல்லவா? நீ என்னைவிட்டு பிரிந்து செல்லலாம். நீ இடதுபக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடதுபக்கம் போவேன்” என்றார்.
10லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டார்; அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் முற்றாக அழிப்பதற்கு முன்னதாக அது அவ்வாறு இருந்தது. 11எனவே லோத்து, யோர்தான் சமபூமி முழுவதையும் தனக்காகத் தேர்ந்தெடுத்து, கிழக்குப் பக்கமாகப் போனான். அவர்கள் இருவரும், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தார்கள். 12ஆபிராம் கானான் நாட்டில் குடியிருந்தார், லோத்து யோர்தான் சமபூமியின் பட்டணங்கள் நடுவில் குடியிருந்து, சோதோம் வரை சென்று அங்கே முகாமிட்டான். 13சோதோமின் மனிதர்கள் கொடியவர்களும், கர்த்தருக்கு விரோதமான பெரும் பாவிகளுமாய் இருந்தார்கள்.
14லோத்து ஆபிராமை விட்டுப் பிரிந்த பின்னர் கர்த்தர் ஆபிராமிடம், “நீ இருக்கின்ற இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் சுற்றிப் பார். 15நீ காண்கின்ற இடம் முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் நான் என்றென்றும் கொடுப்பேன். 16நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப் போல் எண்ணற்ற அளவாகப் பெருகச் செய்வேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம். 17இப்போது, நீ எழுந்து நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அதுவரை நடந்து செல், ஏனெனில் நான் அதை உனக்குத் தருவேன்” என்றார்.
18எனவே, ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் உள்ள மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றார். அங்கே அவர் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 13: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.