யாத்திராகமம் 33
33
1பின்பு கர்த்தர் மோசேயிடம், “நீயும், எகிப்திலிருந்து நீ அழைத்து வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, ‘நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன்’ என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு நான் ஆணையிட்டு வாக்குக் கொடுத்த நாட்டுக்கு செல்லுங்கள். 2நான் உங்களுக்கு முன் ஒரு தூதனை அனுப்பி கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை வெளியே துரத்திவிடுவேன். 3நீங்கள் பாலும் தேனும் வழிந்தோடும்#33:3 பாலும் தேனும் வழிந்தோடும் – செழிப்பான நாடு நாட்டுக்குச் செல்லுங்கள். ஆனால் நானோ உங்களோடு வர மாட்டேன். ஏனெனில், நீங்கள் வளைந்து கொடுக்காத கழுத்துடைய மக்களானதால், நான் உங்களை வழியில் அழித்துவிட நேரிடலாம்” என்றார்.
4துயரமான இந்த வார்த்தைகளை மக்கள் கேட்டவுடன், அவர்கள் தங்கள் ஆபரணங்களை அணிந்துகொள்ளாமல் துக்கம் அனுஷ்டிக்கத் தொடங்கினார்கள். 5ஏனெனில் கர்த்தர் மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘நீங்கள் வளைந்து கொடுக்காத கழுத்துடைய மக்களாகையால், நான் உங்களுடன் ஒரு நொடிப்பொழுது வந்தாலும்கூட உங்களை அழித்துவிட நேரிடும். இப்போது உங்கள் ஆபரணங்களைக் கழற்றுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமெனத் தீர்மானிப்பேன்’ என சொல்” என்று சொல்லியிருந்தார். 6ஆகவே இஸ்ரயேலர் ஓரேப்#33:6 ஓரேப் – சீனாய் மலையில் தங்கள் ஆபரணங்களைக் கழற்றி, பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இறைபிரசன்னக் கூடாரம்
7இஸ்ரயேல் மக்கள் முகாமிடும் போதெல்லாம், மோசே பரிசுத்த கூடாரத்தை எடுத்துக்கொண்டு போய் முகாமுக்கு வெளியே சற்றுத் தொலைவில் அதை அமைப்பது வழக்கம். அதை அவர் இறைபிரசன்னக் கூடாரம் என அழைத்தார். கர்த்தரிடம் விசாரித்து அறியவரும் எவரும், முகாமுக்கு வெளியே அந்தக் கூடாரத்துக்குப் போவார்கள். 8மோசே வெளியே அந்த இறைபிரசன்னக் கூடாரத்துக்கு செல்லும் போதெல்லாம், அனைத்து மக்களும் தங்களுடைய கூடார வாசலில் எழுந்து, மோசே கூடாரத்துக்குள் செல்லும்வரை பார்த்துக்கொண்டு நிற்பார்கள். 9மோசே கூடாரத்துக்குள் சென்றதும், மேகத் தூண் கீழே இறங்கி, வாசலில் வந்து நிற்கும். அப்போது கர்த்தர் மோசேயுடன் பேசுவார். 10மேகத் தூண் கூடார வாசலில் நிற்பதை மக்கள் காணும்போதெல்லாம், அவர்கள் எல்லோரும் தத்தமது கூடார வாசலில் நின்று வழிபடுவார்கள். 11ஒரு மனிதன் தன் நண்பனோடு பேசுவதைப் போல் கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக பேசுவார். அதன் பின்னர் மோசே திரும்பி முகாமுக்கு வருவார். ஆனால் மோசேயின் பணியாளனான நூனின் மகன் யோசுவா என்ற வாலிபன், கூடாரத்தைவிட்டு#33:11 கூடாரத்தைவிட்டு – இறைபிரசன்னக் கூடாரம் செல்வதில்லை.
மோசேயும் கர்த்தரின் மகிமையும்
12மோசே கர்த்தரிடம் சொன்னதாவது, “ ‘நீ இந்த மக்களை வழிநடத்து’ என்று நீர் என்னிடம் சொல்லி வருகின்றீர். ஆயினும் என்னோடு யாரை அனுப்புவீர் என்று எனக்கு சொல்லவில்லை. ‘நான் உன்னைப் பெயராலே அறிந்திருக்கின்றேன்; நீ என்னிடம் தயவு பெற்றிருக்கிறாய்’ என்றும் நீர் சொல்லியிருந்தீர். 13அவ்வாறு உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால், நான் உம்மை இன்னும் அதிகம் அறிவதற்கும், உம்முடைய கண்களில் தொடர்ந்து தயவைப் பெற்றுக்கொள்வதற்கும் உம்முடைய வழிகளை எனக்குக் கற்பிப்பீராக. இந்த இனம் உம்முடைய மக்கள் என்பதையும் நினைவிற்கொள்வீராக” என்றார்.
14அதற்குக் கர்த்தர், “எனது பிரசன்னம் உன்னோடு வரும்; நான் உனக்கு ஓய்வைத் தருவேன்” என்றார்.
15அப்போது மோசே கர்த்தரிடம், “உமது பிரசன்னம் எங்களுடன் வராவிட்டால் எங்களை இந்த இடத்திலிருந்து அனுப்ப வேண்டாம். 16நீர் எங்களுடன் வராவிட்டால், என்மீதும் உம்முடைய மக்கள்மீதும் நீர் பிரியமாயிருக்கிறீர் என்பதை எவ்வாறு அறிவது? பூமியின் மேற்பரப்பில் இருக்கும் மக்களிலிருந்து உமது மக்களை எவ்விதம் வேறுபடுத்திக் காட்டுவது?” என்று கேட்டார்.
17அதற்கு கர்த்தர் மோசேயிடம், “நீ கேட்டுக்கொண்ட இந்தக் காரியத்தையே நான் செய்வேன். ஏனெனில் நான் உன்னிடம் பிரியமாய் இருக்கின்றேன். நான் உன்னைப் பெயராலே அறிந்திருக்கின்றேன்” என்றார்.
18அப்போது மோசே, “உம்முடைய மகிமையை எனக்குக் காட்டுவீராக” என்றார்.
19அதற்கு கர்த்தர், “நான் என் முழு நற்குணத்தையும்#33:19 நற்குணத்தையும் அல்லது மகிமை உனக்கு முன்பாகக் கடந்து போகச் செய்வேன். கர்த்தர் என்ற என் பெயரை உனக்கு முன்பாக பிரசித்தப்படுத்தி, நான் யார்மேல் இரக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது இரக்கமாயிருப்பேன். நான் யார்மேல் மன உருக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது மன உருக்கமாயிருப்பேன். 20ஆனால், என்னுடைய முகத்தை உன்னால் காண முடியாது; ஏனெனில் என் முகத்தைக் கண்டு ஒருவனும் உயிரோடிருக்க இயலாது” என்றார்.
21தொடர்ந்தும் கர்த்தர், “எனக்கு அருகே இருக்கும் மலைப்பாறையின்மேல் நில். 22எனது மகிமை கடந்து செல்லும்போது, நான் உன்னைக் மலைப்பாறை வெடிப்பில் வைத்து, நான் கடந்து செல்லும்வரை என் கரத்தால் உன்னை மூடுவேன். 23அதன் பின்னர் நான் என் கரத்தை விலக்குவேன், நீ என் பின்புறத்தைப் பார்ப்பாய்; ஆனால் என் முகமோ பார்க்கப்படக் கூடாது” என்றார்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 33: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.