யாத்திராகமம் 32

32
தங்கக் கன்று
1மோசே மலையிலிருந்து இறங்கி வரத் தாமதிப்பதை மக்கள் உணர்ந்தபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “வாரும், எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காக உருவாக்கும். ஏனெனில் எங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த மோசேக்கு என்ன நடந்ததென எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்கள்.
2அப்போது ஆரோன் அவர்களுக்குப் பதிலளித்து, “உங்கள் மனைவிமாரும், மகன்மாரும், மகள்மாரும் அணிந்திருக்கும் தங்கக் காதணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். 3அவ்வாறே அனைவரும் தங்கள் காதணிகளைக் கழற்றி ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். 4அவர்கள் தன்னிடம் கொடுத்ததை அவன் எடுத்து அவற்றை உருக்கி கன்றின் வடிவில் அதை வார்ப்பித்து, ஒரு கருவியினால் அதை வடிவமைத்து ஒரு விக்கிரகமாகச் செய்தான். அப்போது அவர்கள், “இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவைகளே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன” என்று சொன்னார்கள்.
5அதைக் கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு கர்த்தருக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான். 6எனவே மறுநாள் அதிகாலையில் மக்கள் எழுந்து தகனபலிகளைப் பலியிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள். அதன் பின்னர் மக்கள் உண்பதற்கும் குடிப்பதற்கும் அமர்ந்து, முறைகேடான விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள்.
7அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ கீழே இறங்கிப் போ. ஏனெனில் எகிப்திலிருந்து நீ வெளியே கொண்டுவந்த உன் மக்கள் சீர்கெட்டுப் போனார்கள். 8நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி நடவாமல், விரைவில் வழிதவறி கன்றின் உருவமுடைய ஒரு விக்கிரகத்தைத் தங்களுக்கென செய்திருக்கின்றார்கள். அவர்கள் அதை வணங்கி, பலி செலுத்தி, ‘இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவையே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன’ என்று சொன்னார்கள்” என்றார்.
9மேலும் கர்த்தர் மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ வளைந்து கொடுக்காத கழுத்துள்ளவர்களாய்#32:9 வளைந்து கொடுக்காத கழுத்துள்ளவர்களாய் – பிடிவாதம் இருக்கின்றார்கள். 10அவர்களுக்கு எதிராக என் கோபம் பற்றி எரியும்படியும், நான் அவர்களை அழிக்கும்படியும் என்னை விட்டுவிடு; அதன் பின்னர் நான் உன்னை ஒரு பெரிய இனமாக்குவேன்” என்றார்.
11ஆனால் மோசேயோ தன் இறைவனாகிய கர்த்தரின் தயவை நாடினார். மோசே அவரிடம், “கர்த்தாவே, நீர் மகா வல்லமையாலும், பலமுள்ள கரத்தாலும், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு எதிராக உமது கோபம் ஏன் பற்றி எரிய வேண்டும்? 12‘இஸ்ரயேலரை மலைகளில் கொன்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து அவர்களை இல்லாமற் போகும்படி செய்யும் தீய நோக்கத்துடனேயே, அவர் அவர்களை வெளியே கொண்டுவந்தார்’ என எகிப்தியர் ஏன் சொல்ல வேண்டும்? ஆகவே உமது உக்கிர கோபத்தைத் தணித்து, மனமிரங்கி, மக்கள்மீது பேராபத்தைக் கொண்டு வராதிருப்பீராக. 13உமது அடியவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரை நினைவிற்கொள்வீராக. ‘நான் உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல் பெருகச் செய்து, உங்கள் சந்ததியினருக்கு வாக்குறுதியளித்த இந்த நாடு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அந்த நாடு என்றென்றும் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்’ என்று நீர் உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று மன்றாடினார். 14அப்போது கர்த்தர் மனமிரங்கி, தன் மக்கள்மீது தாம் கொண்டுவருவதாக அச்சுறுத்திய பேராபத்தைக் கொண்டுவரவில்லை.
15பின்பு மோசே திரும்பி, தனது கைகளில் இரண்டு சாட்சி கற்பலகைகளுடன் மலையிலிருந்து இறங்கிப் போனார். அந்தக் கற்பலகைகளில் முன்னும் பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தன. 16அந்தக் கற்பலகைகள் இறைவனின் கையின் வேலையாயிருந்தன; அதில் இறைவனால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
17ஆரவாரம் செய்யும் மக்களின் சத்தத்தை யோசுவா கேட்டபோது, அவன் மோசேயிடம், “முகாமில் போர் முழக்கம் கேட்கின்றது” என்றான்.
18அதற்கு மோசே,
“அது வெற்றியின் முழக்கமும் அல்ல;
தோல்வியின் அழுகையும் அல்ல;
நாம் கேட்பது பாடலின் சத்தம்”
என்றார்.
19மோசே முகாமுக்கு அருகே வந்தபோது, கன்றையும் மக்களின் நடனத்தையும் கண்டார். அதைக் கண்ட மோசேக்கு கோபம் பற்றி எரிந்து, தன் கையில் இருந்த கற்பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து, துண்டுகளாக உடைத்தார். 20அத்துடன் அவர்கள் செய்து வைத்திருந்த கன்றை எடுத்து, அதை நெருப்பில் போட்டு எரித்தார். பின்னர் அதைத் தூளாக அரைத்து, தண்ணீரின் மேல் தூவி, இஸ்ரயேலரைக் குடிக்கச் செய்தார்.
21அதன் பின்னர் மோசே ஆரோனிடம், “நீ இவ்வளவு பெரிய பாவத்தை இந்த மக்கள்மீது சுமத்துவதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?” என்று கேட்டார்.
22அதற்கு ஆரோன், “என் ஆண்டவனே, கோபம்கொள்ள வேண்டாம். இந்த மக்கள் எவ்வளவாய் தீமையின் பக்கம் சாய்கின்றவர்கள் என்பதை நீர் அறிவீர்! 23அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்களை வழிநடத்த எங்களுக்கு தெய்வங்களை உருவாக்கிக் கொடும்’ என்றார்கள். 24ஆகவே நான் அவர்களிடம், ‘தங்க நகைகள் இருப்பவர்கள் அதைக் கழற்றுங்கள்’ என்றேன். அவ்வாறே அவர்கள் அந்தத் தங்க நகைகளை என்னிடம் கொடுத்தார்கள், நான் அதை நெருப்பில் போட்டபோது அதிலிருந்து இந்த கன்று வெளியே வந்தது” என்றான்.
25மக்கள் கட்டுக்கடங்காமல் திரிவதையும், தமது பகைவர்களுக்கு முன்பாக தாம் சிரிப்புக்கிடமாகும்படி, ஆரோன் அவர்களைக் கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதையும் மோசே கண்டார். 26அப்போது மோசே முகாமின் வாசலில் நின்று, “கர்த்தருடைய பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாருங்கள்” என்றார். லேவியர் எல்லோரும் அவரிடம் வந்து சேர்ந்தார்கள்.
27மோசே அந்த லேவியரிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தர் சொல்வது இதுவே: ‘ஒவ்வொருவரும் உங்கள் இடுப்பில் ஒரு வாளைக் கட்டிக்கொள்ளுங்கள். முகாமெங்கும் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை அங்குமிங்குமாகச் சென்று, ஒவ்வொருவனும் தத்தமது சகோதரனையும், நண்பனையும், அயலவனையும் கொல்லுங்கள்’ ” என்றார். 28லேவியர்கள் மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்று மக்களில் சுமார் மூவாயிரம் பேர் மரணித்தார்கள். 29அப்போது மோசே அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது சொந்த மகன்மாருக்கும், சகோதரர்களுக்கும் விரோதமாய் இருந்தபடியால், இன்று நீங்கள் கர்த்தருடைய பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றீர்கள். கர்த்தர் இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்திருக்கின்றார்” என்றார்.
30மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரும்பாவம் செய்திருக்கின்றீர்கள். இப்போது நான் மலையில் ஏறி கர்த்தரிடம் போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்துக்காக நான் பாவநிவர்த்தி செய்யலாம்” என்றார்.
31அவ்வாறே மோசே மீண்டும் கர்த்தரிடம் போய், “இந்த மக்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கென தங்கத்தினால் தெய்வங்களைச் செய்திருக்கின்றார்கள். 32ஆனாலும் அவர்களுடைய பாவத்தை இப்போது மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதிய புத்தகத்திலிருந்து எனது பெயரை அழிந்துவிடுவீராக” என்று மன்றாடினார்.
33அப்போது கர்த்தர் மோசேயிடம், “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரையே என் புத்தகத்திலிருந்து அழிப்பேன். 34இப்போது நீ போய் நான் உனக்கு சொன்ன இடத்துக்கு மக்களை வழிநடத்திக் கொண்டுபோ. இதோ! என் தூதன் உனக்கு முன்பாகச் செல்வான். ஆயினும், நான் தண்டிக்கும் காலம் வரும்போது, அவர்களுடைய பாவத்துக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.
35அதன் பின்னர் ஆரோன் உருவாக்கிக் கொடுத்த கன்றை வணங்கியதற்காக, கர்த்தர் மக்கள்மீது கொள்ளைநோயை அனுப்பினார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 32: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល