திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 2 நாள்

தேவன் தரும் சமாதானம்



வேதாகமத்தில் தேவன் ஒரு காரியத்தை விளக்கும் முறையை கவனித்திருக்கிறீர்களா? எப்போதும்
முற்றிலும் முரண்பாடான இரண்டு விஷயங்களை ஒப்புமைப்படுத்தியே விளக்குவார். நீங்கள் வேதத்தை சீரான முறையில் வாசிக்கும் பழக்கம் உடையவரானால் நிச்சயம் இதனை கவனித்திருப்பீர்கள். உதாரணத்திற்கு, ஐஸ்வரியாவான் - ஏழை, ஞானி - மூடன், இருள் - வெளிச்சம் என்றவாறு முரண்பாடான காரியங்களை ஒப்புமைப்படுத்தி இருக்க காண்பீர்கள். நாம் படித்துக்கொண்டிருக்கிற தலைப்பிலும் கூட, உலகம் தருகிற சமாதானத்தையும், தாம் தருகிற சமாதானத்தையும் முரண்படுத்தி காண்பித்திருப்பார். "... என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை..." (யோவான் 14:27).



தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு தாம் அருளுகிற சமாதானத்திற்கும் உலகத்திற்குரிய சமாதானத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை திட்டவட்டமாக இயேசு விளக்கி சொல்லியிருக்கிறார். உலகம் என்று அவர் சொன்ன வார்த்தையிலே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமுதாயம், கலாச்சாரம் அனைத்தும் அடங்கும்.



கொந்தளிக்கும் பேரலைகளுக்கு நடுவே கடலிலே பயணித்திருக்கிறீர்களா? எனக்கு அப்படிப்பட்ட சில அனுபவங்கள் உண்டு. அப்படிப்பட்ட அனுபவங்களை என் வாழ்வில் மறுபடியும் பெற நான் துளியும் விரும்பவில்லை. அடித்துக்கொட்டும் மழை, கண்ணைப்பறிக்கும் மின்னல்கள், திகிலூட்டும் கொடூர இடி முழக்கங்கள் இவைகளோடு கூட மணிக்கு 40, 60, 100 கி.மீ அளவில் புயல் அடித்துக்கொண்டிருக்கும். 20, 30 சில நேரங்களில் 50 அடி வரையிலும் பேரலைகள் எழும்பும். பெரிய படகையும் கைப்பொம்மை போல் புரட்டிப்போடக்கூடிய வலு கொண்டது அப்படிப்பட்ட புயல். இப்படிப்பட்ட சூழலால் காணாமல் போன படகுகள், கப்பல்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த ஆரவாரம், கொந்தளிப்பு எல்லாம் கடலின் மேற்பரப்பில் மட்டுமே. கடலின் 100 அடி ஆழத்தில் புயலை காணமுடியாது. அங்கே ஒரு சலசலப்பும் இருக்காது. பேரமைதியை பார்க்கமுடியும். மேற்பரப்பில் நடக்கும் கொந்தளிப்பிற்கான ஒரு அறிகுறியையும் நம்மால் ஆழத்தில் காண முடியாது.



தம்முடைய சமாதானத்தையே நமக்காக வைத்துப்போகிறேன் என்று இயேசு சொன்ன வார்த்தைகளை வாசிக்கும்பொழுது என் நினைவில் வந்த காரியமும் இது தான். பெரும்புயலிலும் ஆழத்தின் பேரமைதி! இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு இப்படிப்பட்ட சமாதானம் தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகில் உபத்திரவங்கள் நம் அனைவருக்கும் உண்டு. இயேசுவே அதை சொல்லிருக்கிறார். என் நாமத்தினால் உங்களை பகைத்து, துன்புறுத்துவார்கள் என்றும் சொல்லிருக்கிறார். இவைகளின் மத்தியிலும், அவர் உலகத்தின் முடிவுப்பரியந்தம் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று நமக்கு வாக்குபண்ணிருக்கிறார். நம்மோடு கூட இருக்கும் அந்த பிரசன்னமே நமக்கு அந்த இளைப்பாறுதலை தரும்.  



நம் வாழ்வில் பயங்கள், அங்கலாய்ப்புகள், பிரச்சனைகள் எழும்பும்போது, நீங்கள் தேவ சமாதானத்தை குறித்து நினைவில் கொள்ளவேண்டியவை...



· சூழ்நிலைகளை மீறும் சமாதானம் சாதாரண நாட்களை விட, பிரச்சனைகளின் மத்தியில் நாம் கடந்து செல்லும்போது தான் தேவ சமாதானத்தை நாம் அதிகம் உணரவோ அனுபவிக்கவோ முடியும். நீங்கள் எப்பேர்ப்பட்ட சூழலை கடந்து சென்றுகொண்டிருந்தாலும், தேவ சமாதானம் உங்களுக்கு உண்டு என்பதை விசுவாசியுங்கள்.

· எல்லா புத்திக்கு மேலான சமாதானம் தேவன் தருகிற சமாதானம் என்பது நம் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது. நமக்கு எளிதில் கிட்டும் சமாதானம் தான். அதை நம்மால் அனுபவிக்க முடியுமே தவிர, ஆராய்ந்து புரிந்து கொள்ளவோ, முழுமையாக மற்றவர்க்கு விளக்கவோ முடியாது.

· அவரைப்பின்பற்றும் அனைவருக்கும் கிட்டும் ஒன்று. இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தன் வாழ்வை முற்றிலும் அவருக்கு அர்ப்பணித்து, அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, பரிசுத்த ஆவியானவருடைய வழிகாட்டுதலின்படி நடக்கிற யாவருக்கும் கிடைக்க கூடிய ஒன்று தான் இந்த தேவ சமாதானம்.

· நிலைத்திருக்கும் தன்மை கொண்ட சமாதானம் . என்றென்றும் நம்மோடு கூட இருக்கும் பரிசுத்த ஆவியானவர், அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சகல பிரச்சனைகளிலும் நமக்கு உதவி செய்து, அவைகளின் மத்தியிலும், மனஅமைதியையும் தேவன் தரும் சமாதானத்தையும் நம்மை அனுபவிக்க செய்கிறவர்.

உங்கள் வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு பகுதியிலும், இந்த புத்திக்கெட்டாத பூரண சமாதானத்தை விசுவாசித்து, வாஞ்சித்து பெற்றுக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை உள்ளடக்கிய தேவ சமாதானத்தையே நீங்கள் பெற்று அனுபவிக்க பிதாவானவர் விரும்புகிறார்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்