லூக்கா 4

4
இயேசுவின் சோதனை
1இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராய், யோர்தான் நதியிலிருந்து திரும்புகையில் ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார். 2அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில், அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் முடிந்தவுடன், அவர் பசியுடன் இருந்தார்.
3பிசாசு அவரிடம், “நீர் இறைவனின் மகனெனில், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி கட்டளையிடுவீராக!” என்றான்.
4அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் வாழ்வதில்லை’ என்று எழுதியிருக்கிறதே”#4:4 உபா. 8:3 எனப் பதிலளித்தார்.
5பிசாசு அவரை உயரமான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, ஒரு நொடியில் உலகத்தின் அனைத்து இராச்சியங்களையும் அவருக்குக் காண்பித்தான். 6பிசாசு அவரிடம், “இவை எல்லாவற்றினது அதிகாரத்தையும், மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன். ஏனெனில் இவை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் விரும்பினால் இவற்றை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும். 7எனவே நீர் என்னை ஆராதித்தால், இவையெல்லாம் உமக்குச் சொந்தமாகும்” என்றான்.
8அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்று எழுதியிருக்கின்றதே”#4:8 உபா. 6:13 என்று பதிலளித்தார்.
9பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்கு அழைத்துச் சென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, “நீர் இறைவனின் மகனெனில், இங்கிருந்து கீழே குதித்திடுவீராக. 10ஏனெனில்,
“ ‘உம்மை கவனமாய் பாதுகாக்கும்படி,
இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்;
11உமது பாதம் கல்லின்மீது மோதாதபடி,
அவர்கள் உம்மைத் தமது கைகளினால் தாங்கிக்கொள்வார்கள்’
என்று எழுதப்பட்டிருக்கின்றதே”#4:11 சங். 91:11,12 என்றான்.
12அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே”#4:12 உபா. 6:16 என்றார்.
13பிசாசு இவ்விதமாக அனைத்து சோதனைகளையும் முடித்த பின்பு, ஒரு சரியான தருணம் கிடைக்கும் வரை இயேசுவைவிட்டு விலகிச் சென்றான்.
இயேசு நாசரேத்தில் புறக்கணிக்கப்படுதல்
14இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன், கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். அவரைப்பற்றிய செய்தி சுற்றுப்புற பிரதேசம் முழுவதிலும் பரவியது. 15அவர் அவர்களுடைய யூத மன்றாடும் ஆலயங்களில்#4:15 யூத மன்றாடும் ஆலயங்களில் சினகோக் போதித்தார். எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.
16அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்குச் சென்றார். ஓய்வுநாளிலே, தமது வழக்கத்தின்படி அவர் யூத மன்றாடும் ஆலயத்துக்குப் போய், அங்கே வேதவசனத்தை வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 17அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச் சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை விரித்து, பின்வரும் பகுதி எழுதப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்து வாசித்ததாவது:
18“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கின்றார்.
ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,
அவர் என்னை அபிஷேகம் செய்தார்.
கைதிகளுக்கு விடுதலை,
பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வை என்று பிரசித்தப்படுத்தவும்,
ஒடுக்கப்பட்டவர்களை விடுவித்து அனுப்பவும்,
19கர்த்தருடைய தயவு நிறைந்த வருடத்தைப் பிரசித்தப்படுத்தவும்
அவர் என்னை அனுப்பினார்.”#4:19 ஏசா. 61:1,2; ஏசா. 58:6
20வாசித்த பின் அவர் அந்தப் புத்தகச் சுருளைச் சுருட்டி, பணியாளனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அமர்ந்தார். யூத மன்றாடும் ஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. 21அப்போது அவர் தமது உரையை ஆரம்பித்து, “நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறியது” என்றார்.
22எல்லோரும் அவரைக் குறித்து நன்றாகப் பேசி, அவருடைய உதடுகளிலிருந்து வந்த கருணை நிறைந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஆனாலும் அவர்கள், “இவன் யோசேப்பின் மகன் அல்லவா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
23இயேசு அவர்களிடம், “ ‘வைத்தியனே உன்னையே குணமாக்கிக் கொள்!’ என்ற பழமொழியை நிச்சயமாக நீங்கள் எனக்குச் சொல்வீர்கள். ‘கப்பர்நகூமில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதை, உனது சொந்த ஊராகிய இங்கேயும் செய்’ என்றும் சொல்வீர்கள்” என்றார்.
24பின்பு அவர்களிடம், “ஆயினும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எந்த இறைவாக்கினனும் தனது சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. 25எலியாவின் காலத்தில் மூன்றரை வருடங்களாக மழை பெய்யாமல் வானம் அடைபட்டு, இஸ்ரயேல் எங்கும் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அங்கே கணவனை இழந்த அநேக பெண்கள் இருந்தார்கள் என்ற உண்மையைச் சொல்கின்றேன். 26ஆயினும் இஸ்ரயேலில் உள்ள அந்த விதவைகள் எவரிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. ஆனால் சீதோன் நாட்டிலுள்ள சாரிபாத் ஊரிலிருந்த கணவனை இழந்த பெண்ணிடமே அனுப்பப்பட்டார். 27இறைவாக்கினன் எலிசாவின் காலத்தில், இஸ்ரயேலில் பல தொழுநோயாளிகள் இருந்தார்கள். ஆயினும் அவர்களில் ஒருவனும் அதிலிருந்து எலிசாவினால் குணமாக்கப்படவில்லை; மாறாக சீரியாவைச் சேர்ந்த நாகமான் மட்டுமே குணமாக்கப்பட்டான்” என்றார்.
28இதைக் கேட்டபோது, யூத மன்றாடும் ஆலயத்திலிருந்த அனைத்து மக்களும் கடுங் கோபமடைந்தார்கள். 29அவர்கள் எழுந்து பட்டணத்தைவிட்டு அவரைத் துரத்தி, அந்தப் பட்டணம் கட்டப்பட்டிருந்த மலையிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிடுவதற்காக, மலையுச்சியின் ஓரத்திற்கு அவரைக் கொண்டுபோனார்கள். 30ஆனால் அவரோ, மக்கள் நடுவே நடந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
இயேசு தீய ஆவியைத் துரத்துதல்
31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்துக்கு போய், ஓய்வுநாளில் அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். 32அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையனவாய் இருந்தன.
33யூத மன்றாடும் ஆலயத்தில் தீய ஆவியான பேயால் பீடிக்கப்பட்ட ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமிட்டு அழைத்து, 34“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே போய்விடும்; எங்களோடு உமக்கு என்ன வேலை? எங்களை அழிப்பதற்காகவா வந்திருக்கின்றீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும். நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
35அதற்கு இயேசு, “பேசாதே! அவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டினார். அப்போது அந்த தீய ஆவி, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனைக் கீழே தள்ளிவிட்டு, அவனுக்கு காயம் எதுவும் உண்டாக்காமல் அவனைவிட்டு வெளியேறியது.
36அப்போது அனைத்து மக்களும் வியப்படைந்து, “இவை எவ்வாறான வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும், வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார். அவையும் வெளியேறுகின்றனவே!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 37அவரைப்பற்றிய இந்தச் செய்தி சுற்றுப்புற பிரதேசம் எங்கும் பரவியது.
இயேசு அநேகரைக் குணமாக்குதல்
38இயேசு யூத மன்றாடும் ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டுக்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமி கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு உதவி செய்யும்படி, அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். 39இயேசு அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலை விலகும்படி அதட்டினார். அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
40சூரியன் மறையும் வேளை வந்தபோது, மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் தமது கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார். 41அத்துடன், பலரில் இருந்த பேய்களும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பேய்கள் அவரே மேசியா என்று அறிந்திருந்தன. ஆகையால் அவை பேசுவதற்கு இடங்கொடாமல், அவர் அவற்றை அதட்டினார்.
42அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு, ஒரு தனிமையான இடமொன்றுக்குச் சென்றார். மக்கள் அவரைத் தேடிக்கொண்டு, அவர் இருந்த இடத்துக்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாதபடி, அவரைத் தங்களுடன் வைத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். 43ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்றைய பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய இராச்சியத்தின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். 44எனவே அவர் யூதேயாவிலுள்ள#4:44 யூதேயாவிலுள்ள – சில பிரதிகளில் கலிலேயாவிலுள்ள என்றுள்ளது யூத மன்றாடும் ஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்தும் நற்செய்தியைப் போதித்தார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

லூக்கா 4: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល