ஆதியாகமம் 45

45
யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல்
1யூதா கூறியவற்றைக் கேட்டதும்,#45:1 யூதா கூறியவற்றைக் கேட்டதும் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு நின்ற தன் பணியாளர்கள் அனைவருக்கும் முன்னால் யோசேப்பினால் அதற்குமேலும் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் அவர்களிடம், “என் முன்னிலையில் இருந்து எல்லோரையும் போகச் செய்யுங்கள்” என்று சத்தமிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, வேறு ஒருவரும் அவனோடு இருக்கவில்லை. 2அவன் மிகச் சத்தமிட்டு அழுததனால் அது வெளியே நின்ற எகிப்தியருக்குக் கேட்டது; பார்வோனின் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
3யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கின்றாரா?” என்று கேட்டான். ஆனால் அவனது சகோதரர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் முன்னிலையில் அவர்கள் திகிலடைந்திருந்தார்கள்.
4யோசேப்பு தன் சகோதரர்களிடம், “என் அருகே வாருங்கள்” என்றான். அவர்கள் வந்தவுடன் அவன் அவர்களிடம், “எகிப்துக்குப் போகின்றவர்களிடத்தில் நீங்கள் விற்ற உங்கள் சகோதரன் யோசேப்பு நான்தான்! 5என்னை விற்பனை செய்ததற்காக நீங்கள் இப்போது கலங்க வேண்டாம், அதற்காக உங்கள்மேல் நீங்கள் கோபம்கொள்ளவும் வேண்டாம். ஏனெனில், உயிர்களைப் பாதுகாப்பதற்காக இறைவன் உங்களுக்கு முன்பாக என்னை இங்கு அனுப்பினார். 6இரண்டு வருடங்களாக நாடெங்கும் பஞ்சம் உண்டாயிருக்கிறது; உழுதலும், அறுவடை செய்தலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இருக்காது. 7பூமியில் எஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களை ஒரு மாபெரும் மீட்பினால் காப்பாற்றவுமே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார்.
8“ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்கு முதன்மை ஆலோசகராகவும்,#45:8 முதன்மை ஆலோசகராகவும் – எபிரேய மொழியில் தந்தை என உள்ளது. அவனது குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தினார். 9நீங்கள் என் தந்தையிடம் விரைவாகத் திரும்பிப் போய் இவ்வாறாகச் சொல்லுங்கள், ‘உமது மகன் யோசேப்பு சொல்வது இதுவே: இறைவன் என்னை எகிப்து முழுவதற்கும் தலைவனாக்கி இருக்கின்றார். புறப்பட்டு என்னிடம் வாருங்கள். தாமதிக்க வேண்டாம். 10நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், உங்களுடைய ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளோடும், உங்களுக்குரிய எல்லாவற்றோடும் எனக்கு அருகிலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம். 11இன்னும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து பஞ்சம் நீடிக்கப் போகின்றது. உங்களுக்குத் தேவையானவற்றை நான் தருவேன். அவ்வாறு இல்லாவிட்டால், நீங்களும் உங்கள் வீட்டாரும், உங்களுக்குரிய எல்லோரும் ஆதரவு அற்றவர்களாகி விடுவீர்கள்.’ ”
12மேலும் யோசேப்பு அவர்களிடம், “உங்களுடன் பேசுகிறவன் உண்மையாகவே நானே என்பதை, நீங்களும் என் தம்பி பென்யமீனும் காண்கின்றீர்கள். 13எகிப்திலே எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தந்தைக்குச் சொல்லுங்கள். நீங்கள் விரைவாகப் போய் என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான்.
14பின்பு தன் தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதான், அவ்வாறே பென்யமீனும் யோசேப்பைக் கட்டிப்பிடித்து அழுதான். 15பின்பு அவன் தன் சகோதரர் எல்லோரையும் முத்தமிட்டு அழுதான். அதன் பின்னர் அவனது சகோதரர்களும் அவனுடன் பேசினார்கள்.
16யோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி பார்வோனின் அரண்மனைக்கு எட்டியபோது, அவனும் அவனுடைய அதிகாரிகள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 17அப்போது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: “நீ உன் சகோதரர்களிடம், ‘நீங்கள் உங்கள் மிருகங்களில் பொதிகளை ஏற்றிக்கொண்டு கானானுக்குத் திரும்பிப் போங்கள், 18அங்கிருந்து உங்கள் தந்தையையும் உங்கள் குடும்பங்களையும் இங்கே என்னிடம் அழைத்து வாருங்கள். நான் எகிப்து நாட்டின் சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பேன்; நீங்கள் நாட்டின் செழிப்பை அனுபவிக்கலாம்.’ என்று சொல்.”
19“மேலும், நீ அவர்களுக்கு அறிவுறுத்திச் சொல்ல வேண்டியதாவது: ‘எகிப்திலிருந்து சில வண்டிகளைக் கொண்டுபோய் உங்கள் பிள்ளைகளையும், மனைவிமாரையும், உங்கள் தந்தையுடனே இங்கே அழைத்து வாருங்கள். 20உங்களுக்குள்ள உடைமைகளைக் குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில், எகிப்தின் சிறந்த பொருட்களெல்லாம் உங்களுடையதாகும்’ என்று சொல்” என்றான்.
21இஸ்ரயேலின் மகன்மார் அவ்வாறே செய்தார்கள். பார்வோன் கட்டளையிட்டபடியே யோசேப்பு அவர்களுக்கு வண்டிகளையும், அவர்களுடைய பயணத்துக்குத் தேவையான உணவையும் கொடுத்தான். 22அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய உடைகளையும் கொடுத்தான், பென்யமீனுக்கோ முந்நூறு சேக்கல்#45:22 முந்நூறு சேக்கல் சுமார் 3.5 கிலோ கிராம். வெள்ளியையும், ஐந்து உடைகளையும் கொடுத்தான். 23யோசேப்பு தன் தந்தைக்கு பத்துக் கழுதைகளின்மீது எகிப்தின் சிறந்த பொருட்கள், பத்துப் பெண் கழுதைகளின்மீது தானியம், அப்பம் மற்றும் அவருடைய பயணத்துக்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பினான். 24அதன் பின்னர் அவன் தன் சகோதரர்களை வழியனுப்பி வைத்தான். அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்களிடம், “நீங்கள் வழியில் வாக்குவாதம் செய்ய வேண்டாம்!” என்றான்.
25அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள். 26அவர்கள் தங்கள் தந்தையிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்! உண்மையில், அவனே எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் இருக்கின்றான்” என்றார்கள். அதைக் கேட்டதும் யாக்கோபு திகைத்துப் போனான்; அவன் அவர்களை நம்பவில்லை. 27ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்ன எல்லாவற்றையும் தங்கள் தந்தைக்குச் சொன்னதும், அத்துடன் யாக்கோபை எகிப்துக்கு அழைத்துச் செல்வதற்காக யோசேப்பு அனுப்பிய வண்டிகளைக் கண்டதும் அவனுடைய ஆவி புத்துயிர் பெற்றது. 28அப்போது இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கின்றான் என்பதை இப்போது நான் நம்புகிறேன்! நான் இறப்பதற்கு முன்னர் அவனைப் போய் பார்ப்பேன்” என்றான்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 45: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល