யாத்திராகமம் 40

40
இறைபிரசன்னக் கூடாரத்தை அமைத்தல்
1பின்பு கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 2“நீ இறைவனின் கூடாரமான இறைபிரசன்னக் கூடாரத்தை, வருடத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவ வேண்டும். 3அதில் சாட்சிப் பெட்டியை வைத்து அதை திரையினால் மறைக்க வேண்டும். 4மேசையைக் கொண்டுவந்து, அதற்குரியவற்றை மேசையின்மீது வைக்கவேண்டும். அதன் பின்னர் குத்துவிளக்குகளைக் கொண்டுவந்து அதன் அகல் விளக்குகளை வைக்கவேண்டும். 5தங்கத் தூபபீடத்தைச் சாட்சிப் பெட்டியின் முன்பாக வைத்து, இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலில் திரையைப் போடு.
6“பின்பு தகனபலிபீடத்தை இறைவனின் கூடாரமான இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வைப்பாயாக. 7தொட்டியை இறைபிரசன்னக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்று. 8அவற்றைச் சுற்றிவர முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப் போடு.
9“அதன் பின்னர் அபிஷேக எண்ணெயை எடுத்து, இறைபிரசன்னக் கூடாரத்தையும், அங்குள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய். அதையும் அதன் தளபாடங்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அது பரிசுத்தமாயிருக்கும். 10பின்பு தகனபலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து. அப்போது பலிபீடம் மகாபரிசுத்தமுள்ளதாயிருக்கும். 11பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்து, அவற்றை பரிசுத்தப்படுத்து.
12“அதன் பின்னர் ஆரோனையும், அவன் மகன்மாரையும் இறைபிரசன்னக் கூடாரத்தின் நுழைவு வாசலில் கொண்டுவந்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு. 13ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை அணிவித்து, அவன் மதகுருவாக எனக்குப் பணி செய்வதற்கு அவனை அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து. 14அவனது மகன்மாரையும் அழைத்துவந்து, அவர்களுக்கு குருத்துவ அங்கிகளை அணிவித்துக்கொள். 15அவர்கள் எனக்குக் குருத்துவப் பணி செய்யும்படி, அவர்களுடைய தந்தையை அபிஷேகம் செய்தது போலவே அவர்களையும் அபிஷேகம் செய்வாயாக. அவர்கள் பெற்ற இந்த அபிஷேகம் தலைமுறை தோறும் நீடித்திருக்கும் குருத்துவத்துக்கான அபிஷேகமாய் இருக்கும்.” 16கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தார்.
17இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைபிரசன்னக் கூடாரம் அமைக்கப்பட்டது. 18மோசே இறைபிரசன்னக் கூடாரத்தை அமைத்தபோது, அதன் அடித்தளங்களை அதனிடங்களில் பொருத்தி மரச்சட்டங்களை நிறுத்தி, அதன் குறுக்குச் சட்டங்களையும் பொருத்தி, அதன் தூண்களை நிறுத்தினார். 19கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே இறைபிரசன்னக் கூடாரத்துக்கு மேலாகக் கூடாரத்தை விரித்து, கூடாரத்தின் மேல் மூடுதிரையை இட்டார்.
20பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தார். பின்பு சுமக்கும் தடிகளைப் பெட்டியில் கொழுவி, கிருபாசனப் பெட்டியின் மேலே வைத்தார். 21இவ்வாறு மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப் பெட்டியை மறைத்தார்.
22அதன் பின்னர் மோசே, இறைபிரசன்னக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைபிரசன்னக் கூடாரத்தின் வடக்குத் திசையில் மேசையை வைத்தார். 23அவர் கர்த்தரின் கட்டளைப்படியே கர்த்தரின் முன்பாக அந்த மேசையில் அப்பங்களை வைத்தார்.
24அதன் பின்னர் மோசே குத்துவிளக்கை இறைபிரசன்னக் கூடாரத்தில், மேசைக்கு எதிரே இறைபிரசன்னக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் வைத்தார். 25கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை கர்த்தர் முன்பாக வைத்தார்.
26அதன் பின்னர் மோசே தங்கப் பலிபீடத்தைச் இறைபிரசன்னக் கூடாரத்தின் திரைக்கு முன்னால் வைத்தார். 27கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தார்.
28அதன் பின்னர் மோசே இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்க விட்டார். 29கர்த்தர் அவருக்குக் கட்டளையிட்டபடியே, இறைவனின் கூடாரமான இறைபிரசன்னக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகனபலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகனபலியையும், தானியபலியையும் செலுத்தினார்.
30பின்னர் இறைபிரசன்னக் கூடாரத்துக்கும் பீடத்துக்கும் இடையில் நீர்த் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதனுள் தண்ணீர் ஊற்றினார். 31மோசேயும், ஆரோனும், அவன் மகன்மாரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள். 32கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் நுழையும் போதெல்லாம், அல்லது பீடத்தை நெருங்கும் போதெல்லாம் தங்களை கழுவிக்கொள்வார்கள்.
33பின்பு மோசே இறைபிரசன்னக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றி முற்றத்தை அமைத்து, முற்றத்தின் வாசலில் திரையைத் தொங்க விட்டார். இவ்வாறு மோசே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார்.
கர்த்தரின் மகிமை
34அப்போது இறைபிரசன்னக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. கர்த்தரின் மகிமை இறைபிரசன்னக் கூடாரத்தை நிரப்பியது. 35மேகம் இறைபிரசன்னக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தபடியாலும், கர்த்தரின் மகிமை இறைபிரசன்னக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் நுழைய முடியாதிருந்தது.
36இஸ்ரயேலரின் அனைத்து பயணங்களிலும், இறைபிரசன்னக் கூடாரத்துக்கு மேலுள்ள மேகம் மேலே எழுகின்றபோது, அவர்கள் புறப்படுவார்கள். 37மேகம் மேலே எழாதிருந்தால், அது மேலே எழுகின்ற வரை புறப்படாதிருப்பார்கள். 38அவர்கள் பிரயாணம் செய்த காலமெல்லாம், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையிலும் பகல் வேளையில் கர்த்தரின் மேகம் இறைபிரசன்னக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவு வேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 40: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល