யாத்திராகமம் 13

13
முதற்பேறுக்கான அர்ப்பணம்
1கர்த்தர் மோசேயிடம், 2“இஸ்ரயேலருக்குள் மனிதனானாலும் மிருகமானாலும் கருப்பையின் ஒவ்வொரு முதற்பேறும் எனக்குரியது. எனவே முதற்பேறான அனைத்து ஆண்களையும் எனக்காக அர்ப்பணி” என்றார்.
3பின்பு மோசே மக்களிடம் சொன்னதாவது: “நீங்கள் அடிமைத்தன வீடான எகிப்திலிருந்து வெளியே வந்த இந்த நாளை நினைவுபடுத்திக் கொண்டாடுங்கள். ஏனெனில் கர்த்தர் தமது வல்லமையான கரத்தினால் அந்த இடத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்தார். இந்த நாளில் புளிப்பூட்டப்பட்ட எதையும் உண்ண வேண்டாம். 4ஆபீப்#13:4 ஆபீப் – எபிரேய நாட்காட்டியின் முதல் மாதம். பின்னர் நிசான் என பெயர் மாற்றப்பட்டது. மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்படுகின்றீர்கள். 5கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்ட, பாலும் தேனும் வழிந்தோடும் செழிப்பான நாடான கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய நாட்டுக்குக் கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அப்போது வருடந்தோறும் இதே மாதத்தில் நீங்கள் இந்த ஆராதனையைச் செய்யவேண்டும். 6புளிப்பூட்டப்படாத அப்பத்தை ஏழு நாட்களுக்கு உட்கொண்டு, ஏழாவது நாள் கர்த்தரை மகிமைப்படுத்த பண்டிகையைக் கொண்டாடுங்கள். 7ஏழு நாட்களும் புளிப்பூட்டப்படாத அப்பத்தை உண்ண வேண்டும்; உங்கள் வீட்டிலோ, அல்லது நாட்டின் எல்லைக்குள்ளோ புளிப்பூட்டப்பட்ட யாதொன்றும் காணப்படக் கூடாது. 8அன்றைய தினம்#13:8 அன்றைய தினம் – பண்டிகையின் ஏழாவது நாளில் நீங்கள் உங்கள் பிள்ளையிடம், ‘நாங்கள் எகிப்திலிருந்து வந்தபோது கர்த்தர் எங்களுக்குச் செய்ததற்காக இதைச் செய்கின்றோம்’ என்று சொல்லுங்கள். 9கர்த்தரின் கட்டளைகள் உங்கள் வாயில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த கொண்டாட்டம் உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச் சின்னம் போலவும் இருக்கும். ஏனெனில், கர்த்தர் தன் பலத்த கரத்தால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். 10ஆதலால் நீங்கள் வருடந்தோறும், குறித்த காலத்தில் இந்த நியமத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
11“கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுப்பேன் என்று வாக்குறுதியளித்தபடி, கானானியருடைய நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்து, அதை உங்களுக்குக் கொடுத்த பின்பு, 12ஒவ்வொரு கருப்பையின் முதற்பேறானவனையும் நீங்கள் கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். உங்கள் கால்நடைகளில் ஆண் தலைப்பேறுக்களெல்லாம் கர்த்தருக்கு உரியவை. 13கழுதையின் தலையீற்றுக்களையெல்லாம் ஒரு செம்மறியாட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்ள வேண்டும்; மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறித்துப் போடுங்கள். உங்கள் மகன்மாருக்குள் முதற்பேறானவனை மீட்டுக்கொள்ள வேண்டும்.
14“பிற்காலத்தில் உங்கள் பிள்ளை உங்களிடம் ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்கும்போது அவனிடம், ‘கர்த்தர் தமது பலத்த கரத்தினால் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். 15பார்வோன் எங்களைப் போகவிடாமல் பிடிவாதமாய் மறுத்தபோது, கர்த்தர் எகிப்தியரின் மனிதனதும் மிருகத்தினதும் ஒவ்வொரு முதற்பேற்றையும் கொன்றுவிட்டார். அதனால் நானும் ஒவ்வொரு கருப்பையின் முதற்பேறான ஆணையும் கர்த்தருக்குப் பலியிட்டு, என் முதற்பேறான மகன்மாரை மீட்டுக்கொள்கிறேன்.’ 16கர்த்தர் தமது பலத்த கரத்தினால் எங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதற்கு, இது உங்கள் கையில் ஒரு அடையாளமாகவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச் சின்னமாகவும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றார்.
செங்கடலைக் கடத்தல்
17பார்வோன் இஸ்ரயேலரைப் போக விட்டபின், பெலிஸ்திய நாட்டின் வழியே செல்வது குறுகிய தூரமாயிருந்தபோதிலும், இறைவன் அவர்களை அதன் வழியாக நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “அவர்கள் யுத்தத்தை எதிர்கொண்டால், தங்கள் மனதை மாற்றி எகிப்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்” என இறைவன் நினைத்தார். 18அதனால் இறைவன் இஸ்ரயேலரை பாலைவனப் பாதை வழியே சுற்றி, செங்கடலை#13:18 செங்கடலை அல்லது நாணற்கடல் நோக்கி வழிநடத்தினார். இஸ்ரயேலர் அணியணியாக எகிப்திலிருந்து புறப்பட்டனர்.
19மோசே, யோசேப்பின் எலும்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றார். ஏனெனில், யோசேப்பு இஸ்ரயேலின் மகன்மாரிடம் இவ்வாறு செய்யும்படி சத்தியம் வாங்கியிருந்தான். அவன் அவர்களிடம், “இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவிக்கு வருவார்; அப்போது நீங்கள் எனது எலும்புகளை இந்த இடத்திலிருந்து உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்#13:19 ஆதி. 50:25” என்று சொல்லியிருந்தான்.
20அவர்கள் சுக்கோத்திலிருந்து வெளியேறிய பின்னர், பாலைவனத்தின் எல்லையிலுள்ள ஏத்தாம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்கள். 21பகலில் அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு வழிகாட்ட, கர்த்தர் ஒரு மேகத் தூணாய் அவர்களுக்கு முன் சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக நெருப்புத் தூணாய் அவர்களுக்கு முன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. 22பகலில் மேகத் தூணாவது, இரவில் நெருப்புத் தூணாவது மக்களுக்கு முன்பாக தமது இடத்தைவிட்டு விலகவில்லை.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 13: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល