யாத்திராகமம் 12

12
பஸ்கா மற்றும் புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகை
1கர்த்தர் எகிப்திலே மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: 2“இம்மாதம் உங்களுக்கு முதலாம் மாதம், உங்கள் வருடத்தின் முதலாம் மாதம். 3இந்த மாதத்தின் பத்தாம் நாள், ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தத்தமது குடும்பத்துக்காக, வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று முழு இஸ்ரயேல் சமூகத்துக்கும் நீங்கள் சொல்லுங்கள். 4ஒரு ஆட்டுக்குட்டி ஒரு குடும்பத்துக்கு அதிகமாக இருந்தால், அவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அயல் வீட்டாருடன் சேர்ந்து, தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அக்குட்டியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டியின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். 5நீ தெரிந்தெடுக்கும் ஆட்டுக்குட்டி ஒரு வயதையுடைய, குறைபாடற்ற கடாக்களாக இருக்கவேண்டும். அவற்றைச் செம்மறியாடுகளிலிருந்தோ, வெள்ளாடுகளிலிருந்தோ தெரிந்தெடுக்கலாம். 6மாதத்தின் பதினான்காம் திகதிவரை அவற்றை வீட்டில் கவனமாகப் பராமரித்து, பொழுதுசாயும் வேளையில் இஸ்ரயேல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியைக் கொல்ல வேண்டும். 7அதன் பின்னர் அவர்கள் அதன் இரத்தத்தில் சிறிதளவை எடுத்து, அந்த ஆட்டுக்குட்டியை உண்பவர்களின் வீட்டுக் கதவின் நிலைக்கால் இரண்டிலும், மேற்சட்டத்திலும் பூச வேண்டும். 8அன்று இரவு கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின் இறைச்சியை நெருப்பில் சுட்டு, புளிப்பூட்டப்படாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும். 9இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது நீரில் அவித்தோ சாப்பிடக் கூடாது. அதன் தலை, கால்கள், உள்ளுறுப்புகள் ஆகிய எல்லாவற்றையும் நெருப்பில் சுட்டே சாப்பிட வேண்டும். 10அவற்றில் எதையும் மறுநாள் காலைவரை மீதியாக வைக்க வேண்டாம்; காலைவரை ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றை நெருப்பில் எரிக்க வேண்டும். 11நீங்கள் உங்கள் மேலாடைகளை இடைப்பட்டியால் கட்டி, காலணிகளைப் போட்டு, கோலைக் கையில் பிடித்தபடி, அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். இது கர்த்தரின் பஸ்கா.
12“அதே இரவில் நான் எகிப்து நாடெங்கும் சென்று, அங்குள்ள மக்களதும் மிருகங்களினதும் முதற்பேறுகளை அழிப்பேன். மேலும், எகிப்திய தெய்வங்கள் அனைத்தின்மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே கர்த்தர். 13நீங்கள் வசிக்கும் வீடுகளின்மீதுள்ள இந்த இரத்தம் உங்களுக்கான ஒரு அடையாளமாய் இருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்து செல்வேன்; நான் எகிப்தை அழிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொட மாட்டாது.
14“இது தலைமுறை தோறும் நீங்கள் கர்த்தருக்குரிய பண்டிகையாக கொண்டாடி நினைவுகூர வேண்டிய ஒருநாள்; இது ஒரு நிரந்தரமான நியமம். 15புளிப்பூட்டப்படாத அப்பங்களை ஏழு நாட்களுக்கு நீங்கள் சாப்பிட வேண்டும். முதலாம் நாளில் புளிப்பூட்டப்பட்டதை உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். ஏனெனில், முதலாம் நாள் தொடங்கி, ஏழாம் நாள்வரை புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடுகிறவன் எவனோ, அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்பட வேண்டும். 16வாரத்தின் முதலாம் நாளில் ஒரு பரிசுத்த சபைக் கூட்டத்தையும், ஏழாம் நாளில் இன்னொரு பரிசுத்த சபைக் கூட்டத்தையும் ஒன்றுகூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக் கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம்.
17“புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனெனில், அந்த நாளிலேயே நான் உங்களை அணியணியாக எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். தலைமுறை தோறும் நிலையான கட்டளையாக நீங்கள் இதை செய்யவேண்டும். 18முதலாம் மாதத்தின் பதினான்காம் நாள் மாலைமுதல், அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலைவரை புளிப்பூட்டப்படாத அப்பத்தை நீங்கள் சாப்பிட வேண்டும். 19புளிப்பூட்டும் பொருட்கள் எதுவும் ஏழு நாட்களுக்கு உங்கள் வீடுகளில் காணப்படக் கூடாது. புளிப்பூட்டப்பட்ட எதையாவது உண்ணும் எவனும், அவன் அந்நியனானாலும், சொந்த நாட்டினனானாலும் இஸ்ரயேல் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 20புளிப்பூட்டப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிட வேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் புளிப்பூட்டப்படாத அப்பத்தையே சாப்பிட வேண்டும்” என்றார்.
21அப்போது மோசே இஸ்ரயேலின் மூப்பர்கள் யாவரையும் அழைப்பித்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனே போய் உங்கள் குடும்பங்களுக்கான ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொண்டு பஸ்காவாக அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். 22பின்பு ஒரு கட்டு ஈசோப்பை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக் கூடாது. 23கர்த்தர் எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்து செல்வார்; அப்போது உங்கள் கதவின் மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் உள்ள இரத்தத்தைக் கண்டு, அவர் அந்த வாசலைக் கடந்து போவார். அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
24“உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்குமான இந்த அறிவுறுத்தல்களை நிலையாகக் கைக்கொள்ளுங்கள். 25கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பதாக வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த நாட்டுக்குள் நீங்கள் செல்லும்போது, இந்த ஆராதனையை கைக்கொள்ளுங்கள். 26உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘இந்த ஆராதனையின் அர்த்தம் என்ன’ என்று கேட்டால், 27அப்போது நீங்கள் அவர்களிடம், ‘கர்த்தர் எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்து சென்று எங்கள் வீடுகளைத் தப்புவித்தார். எனவே இது கர்த்தருடைய பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னார். அப்போது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள். 28கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.
29அன்று நள்ளிரவு எகிப்திலுள்ள முதல் பிறந்த அனைத்தையும் கர்த்தர் அழித்தார்; அரியணையில் அமர்ந்திருந்த பார்வோனின் தலைமகனில் இருந்து, காவற் கிடங்கிலிருந்த கைதியின் தலைமகன் வரை முதல் பிறந்தவை அனைத்தையும், மிருகங்களின் முதற்பேறுகளையும் அழித்தார். 30பார்வோனும், அவனது அனைத்து அலுவலர்களும், எகிப்தியர் அனைவரும் அன்றிரவில் விழித்து எழுந்தனர். எகிப்தில் ஒரு பெரிய அழுகுரல் உண்டாயிற்று. ஏனெனில் மரணம் நிகழாத ஒரு வீடும் இருக்கவில்லை.
இஸ்ரயேலர் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்
31அன்று இரவே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து அவர்களிடம், “எழுந்திருங்கள்! என் மக்களை விட்டு வெளியேறி, நீங்களும் இஸ்ரயேலரும் நீங்கள் கேட்டுக்கொண்டபடியே போய் கர்த்தரை வழிபடுங்கள். 32நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான்.
33“நாங்கள் எல்லோரும் இறந்து விடுவோம்!” என்று கூறி, இஸ்ரயேலரை நாட்டைவிட்டு விரைவாக வெளியேறும்படி எகிப்தியர் அவசரப்படுத்தினார்கள். 34மக்கள் புளிப்பூட்டப்படாத பிசைந்த மாவையும், மா பிசைகின்ற பாத்திரங்களையும் துணிகளில் சுற்றி, தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு போனார்கள். 35மோசே அறிவுறுத்தியபடியே இஸ்ரயேல் மக்கள் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும், உடைகளையும் எகிப்தியரிடம் கேட்டு வாங்கினார்கள். 36கர்த்தர் அவர்களுக்கு எகிப்தியரிடத்தில் தயவு கிடைக்கும்படி செய்ததால், இஸ்ரயேலர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர் கொடுத்தார்கள். இவ்விதமாக அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
37இஸ்ரயேல் மக்கள் ராமசேஸ் பட்டணத்தைவிட்டு சுக்கோத் பட்டணத்துக்குப் பயணம் செய்தார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மாத்திரம் அறுநூறாயிரம் பேர் இருந்தார்கள். 38அவர்களுடன் அநேக வேறு இன மக்களும் போனார்கள்; ஏராளமான ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் அவர்களுடன் சென்றன. 39எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பூட்டப்படாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மா புளிப்பற்றதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.
40இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் நானூற்று முப்பது வருடங்களாகும். 41நானூற்று முப்பதாவது வருடம் முடிந்த அந்தநாளிலே, கர்த்தரின் மக்கள் கூட்டம் எகிப்தைவிட்டு வெளியேறியது. 42எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவதற்காக, அந்த இரவு கர்த்தர் அவர்களைக் கண்காணித்துக்#12:42 கண்காணித்து பாதுகாத்து கொண்டிருந்தபடியால், கர்த்தரை மகிமைப்படுத்தும்படி, இந்த இரவில் தலைமுறை தோறும் இஸ்ரயேலர் விழித்திருக்க வேண்டும்.
பஸ்காவின் கட்டுப்பாடுகள்
43கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது: “பஸ்கா உணவுக்கான விதிமுறைகள் இவையே:
“பிறநாட்டவன் ஒருவனும் அதை உண்ணக் கூடாது. 44எனினும், நீ விலைக்கு வாங்கிய எந்த அடிமையும் விருத்தசேதனம் செய்யப்பட்ட பின்னர் அதை உண்ணலாம். 45தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதைச் உண்ணக் கூடாது.
46“அது ஒரு வீட்டுக்கு உள்ளே உண்ண வேண்டும்; அந்த இறைச்சியில் சிறிதளவைக்கூட வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக் கூடாது. அதன் எலும்புகளில் எதையாவது முறிக்கவும் கூடாது. 47முழு இஸ்ரயேல் சமூகமும் அதைக் கொண்டாட வேண்டும்.
48“கர்த்தரின் பஸ்காவைக் கொண்டாட விரும்பும் உங்களுடன் வாழும் அந்நியன், பஸ்காவைக் கொண்டாட விரும்பினால், அவன் தன் வீட்டிலுள்ள அனைத்து ஆண்களையும் விருத்தசேதனம் செய்யவேண்டும்; அதன் பின்னர் அந்நாட்டில் குடிமகனாக, அதில் பங்குபற்றலாம். ஆனால் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஒரு ஆணும் அதை உண்ணக் கூடாது. 49சொந்த நாட்டில் பிறந்தவனுக்கும், உங்களிடையே குடியிருக்கும் அந்நியனுக்கும் ஒரே சட்டம் இருக்கவேண்டும்.”
50கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கட்டளையிட்டபடி இஸ்ரயேலர் எல்லோரும் செய்தார்கள். 51கர்த்தர் அந்த நாளிலேயே இஸ்ரயேலரை அவர்களின் பிரிவுகளின்படியே எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 12: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល