மீகா 1
1
1யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் யூதாவின் அரசர்களாக அவரவர் ஆட்சி செய்த காலப்பகுதிகளில், மோரேசேத் ஊரைச் சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுவே. சமாரியா மற்றும் எருசலேம் பட்டணங்கள் குறித்து அவன் கண்ட தரிசனம்:
2மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்,
பூமியே, அதில் வாழ்கின்றவர்களே, செவிசாயுங்கள்.
ஆண்டவராகிய கர்த்தர் உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகின்றார்,
கர்த்தர் பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகின்றார்.
சமாரியா மற்றும் எருசலேமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
3இதோ, கர்த்தர் தமது உறைவிடத்திலிருந்து வருகின்றார்.
அவர் இறங்கி பூமியின் உயரமான இடங்களை மிதிப்பார்.
4நெருப்பின் முன் மெழுகு போலவும்,
மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும்
மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன.
பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன.
5யாக்கோபின் மீறுதல்களினாலும்,
இஸ்ரயேல் மக்களின் பாவங்களினாலுமே இவை எல்லாம் இடம்பெறுகின்றன.
யாக்கோபின் மீறுதல் என்ன?
சமாரியா அல்லவா?
யூதாவின் உயரமான இடம் எது?
எருசலேம் அல்லவா?
6“எனவே கர்த்தர் சொல்கின்றதாவது:
நான் சமாரியாவை ஒரு திறந்த வெளியில் மண் குவியலாக்கி,
அதை திராட்சைத் தோட்ட நிலமாக மாற்றுவேன்.
அவற்றின் கற்களைப் பள்ளத்தாக்கில் கொட்டி,
அத்திவாரங்களை வெறுமையாக்குவேன்.
7சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும்
துண்டுகளாய் நொறுக்கப்படும்;
அவளது ஆலயத்திலுள்ள அன்பளிப்புகளெல்லாம்
நெருப்பில் சுட்டெரிக்கப்படும்;
அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன்.
அவள் தன் அன்பளிப்புகளை கோயில் விலைமாதர்களின் கூலியிலிருந்து
ஒன்றுசேர்த்தபடியால்,
பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் விலைமாதர்களின் கூலியாகவே
பயன்படுத்துவார்கள்.”
மீகாவின் அழுகையும் புலம்பலும்
8இதன் பொருட்டு#1:8 இதன் பொருட்டு – சமாரியாவுக்கு ஏற்பட்ட தண்டனையின் அழிவின் பொருட்டு. நான் அழுது புலம்புவேன்;
வெறுங்காலுடனும் ஆடையின்றியும் நடந்து திரிவேன்.
நரியைப் போல் ஊளையிட்டு,
ஆந்தையைப் போல்#1:8 ஆந்தையைப் போல் அல்லது தீக்கோழி அலறுவேன்.
9ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது;
அது யூதா வரை பரவியுள்ளது.
அது எனது மக்களின் வாயில் வரை,
எருசலேம் வரை எட்டியுள்ளது.
10அதைக் காத் பட்டணத்தில் சொல்ல வேண்டாம்;
கொஞ்சமும் அழவே வேண்டாம்.
பெத்-ஒப்பிராவிலே
புழுதியில் வீழ்ந்து புரளுங்கள்.
11சாப்பீரில் வாழ்கின்றவர்களே, ஆடையின்றியும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள்.
சாயனா நகரத்தில் வாழ்கிறவர்கள்
வெளியே வரமாட்டார்கள்.
பெத்-ஏசேல் நகரம் துக்கம் அனுஷ்டிக்கின்றது.
அதற்குரிய பாதுகாப்பு
உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
12மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து,
விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், கர்த்தரிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது.
அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது.
13லாகீஸ் நகரில் வாழ்கிறவர்களே,
குதிரைகளைத் தேரில் பூட்டுங்கள்!
சீயோன் மக்கள்#1:13 மக்கள் – மகள் பாவம் செய்ய ஆரம்பித்தது உங்களால் தான்.
ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன.
14ஆதலால் யூதாவின் மக்களே,
நீங்கள் மோர்ஷேத்-காத் நகரத்துக்குப் பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள்.
அக்சீப் பட்டணம்
இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும்.
15மரேஷா நகரத்தில் வாழ்கிறவர்களே,
உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனைக் கர்த்தர் கொண்டுவருவார்.
இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள்
அதுல்லாம் குகையில் ஒளிந்து கொள்வார்கள்.
16நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கம் அனுஷ்டித்து,
உங்கள் தலையை மொட்டையடியுங்கள்;
அவர்கள் உங்களைவிட்டு தூர நாட்டுக்கு நாடுகடத்தப்படப் போவதால்,
கழுகின் தலையைப் போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மீகா 1: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.