ஆமோஸ் 2

2
1கர்த்தர் சொல்வது என்னவெனில்:
“மோவாப் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு#2:1 எபிரெய மொழியில் மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், இந்த சொற்றொடர் 4, 6 ஆகிய வசனங்களிலும் காணப்படுகின்றது.,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
ஏனெனில் அவன் ஏதோமுடைய அரசனின் எலும்புகளை
சுட்டு சாம்பலாக்கினான்.
2மோவாப்பின்மீது நெருப்பை அனுப்புவேன்.
அது கீரியோத் பட்டணத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும்
மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்துபோகும்.
3நான் அதன் ஆட்சியாளனை அழிப்பேன்.
அதன் அதிகாரிகளை அவனுடன் கொன்றுபோடுவேன்”
என்று கர்த்தர் கூறுகின்றார்.
4கர்த்தர் சொல்வது இதுவே:
“யூதா மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
அவர்கள் கர்த்தரின் சட்டத்தைப் புறக்கணித்து,
அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.
ஏனெனில் அவர்களின் முன்னோர் பின்பற்றிய
பொய்கள்#2:4 பொய்கள் அல்லது பொய்யான தெய்வங்கள் அவர்களை வழிவிலகச் செய்தன.
5ஆகையால் யூதாவின்மீது நெருப்பை அனுப்புவேன்.
அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
இஸ்ரயேலின் நியாயத்தீர்ப்பு
6கர்த்தர் சொல்வது இதுவே:
“இஸ்ரயேல் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
நீதியானவர்களை வெள்ளிக்காகவும்,
சிறுமைப்பட்டவர்களை ஒரு சோடி காலணிகளுக்காகவும் அவர்கள் விற்றார்கள்.
7தரையின் புழுதியை மிதிப்பது போன்று
ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க மறுக்கிறார்கள்.
தந்தையும் மகனும் ஒரே பெண்ணிடம் பாலுறவுகொண்டு,
என் பரிசுத்த பெயரின் தூய்மையைக் கெடுக்கின்றார்கள்.
8மக்களிடம் அடமானமாய் பெற்ற உடைகளை
ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும் விரித்துப் படுக்கிறார்கள்.
மக்களிடம் அபராதமாகப் பெற்ற திராட்சைரசத்தை
தங்கள் தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.
9“எமோரியர் கேதுரு மரங்களைப் போன்று உயரமாகவும்,
கர்வாலி மரங்களைப் போன்று வைரமாகவும் இருந்தாலும்,
அவர்களை நானே என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு முன்பாக அழித்தேன்.
மேலே அவர்களுடைய பழங்களையும்,
கீழே அவர்களுடைய வேர்களையும் நானே அழித்தேன்.
10நீங்கள் எமோரியர்களின் நாட்டை உரிமையாக்கிக் கொள்வதற்காக
எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து,
நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் உங்களை வழிநடத்தினேன்.
11“நான் உங்கள் மகன்மாரிலிருந்து இறைவாக்கினரையும்,
உங்கள் வாலிபர்களிலிருந்து நசரேயர்களையும் எழுப்பினேன்.
இஸ்ரயேல் மக்களே, இது உண்மையல்லவா?”
என கர்த்தர் அறிவிக்கின்றார்.
12“ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சைரசம் குடிக்கச் செய்தீர்கள்.
இறைவாக்குச் சொல்லக் கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
13“ஆகவே, கதிர் நிறைந்த ஒரு வண்டி நசுக்குவதைப் போன்று,
நான் உங்களை நசுக்குவேன்.
14அப்போது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்களும் தப்ப மாட்டார்கள்,
பலமுள்ளவர்கள் தங்கள் பலத்தால் செயல்பட முடியாது,
இராணுவ வீரர்களால் தமது உயிரைக் காக்க முடியாது.
15வில்வீரனும் தனது இடத்தில் நிற்க மாட்டான்,
வேகமாய் ஓடும் இராணுவ வீரனும் ஓடித்தப்ப மாட்டான்,
குதிரைவீரனும் தன் உயிரைக் காப்பாற்ற மாட்டான்.
16அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும்
நிர்வாணமாய் ஓடித்தப்புவார்கள்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆமோஸ் 2: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்