ஆமோஸ் 1
1
1தெக்கோவா நகரத்தின் மேய்ப்பர்களில் ஒருவனான ஆமோஸின் வார்த்தைகள்: பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் கண்ட தரிசனம் இதுவே: அக்காலத்தில் யூதா பிரதேசத்துக்கு அரசனாக உசியாவும், இஸ்ரயேல் பிரதேசத்துக்கு அரசனாக யோவாஸின் மகன் யெரொபெயாமும் இருந்தார்கள்.
2ஆமோஸ் சொன்னதாவது:
“கர்த்தர் சீயோனிலிருந்து கர்ச்சிக்கிறார்;
எருசலேமிலிருந்து முழங்குகிறார்.
மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் வரண்டு போகின்றன.
கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகின்றது.”
இஸ்ரயேலரின் அயலவர்மீது நியாயத்தீர்ப்பு
3கர்த்தர் சொல்வது இதுவே:
“தமஸ்கு பட்டண மக்கள்#1:3 மக்கள் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,#1:3 எபிரெய மொழியில் மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், இந்த சொற்றொடர் 6, 9, 11, 13 ஆகிய வசனங்களிலும் காணப்படுகின்றது.
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
ஏனெனில் அவர்கள் கீலேயாத்தை
இரும்பு பற்களுள்ள கருவிகளால் கதிரடித்தார்களே.
4அரசன் ஆசகேலின் வீட்டின்மீது நெருப்பை அனுப்புவேன்.
அந்த நெருப்பானது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களை எரித்துவிடும்.
5தமஸ்குவின் வாயிலை நான் உடைப்பேன்.
ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை#1:5 அரசனை – குடிகளை அழித்து,
பெத்-ஏதேன் பட்டணத்தில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்;
ஆராமின் மக்களை கீர் தேசத்துக்கு நாடுகடத்துவேன்”
என்று கர்த்தர் சொல்கின்றார்.
6கர்த்தர் சொல்வது இதுவே:
“காசா பட்டண மக்கள் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
ஏனெனில் அவர்கள் முழுச் சமுதாயத்தையும் சிறைப்பிடித்து
ஏதோமியரிடம் விற்றார்களே.
7காசா பட்டண மதில்களின்மீது நெருப்பை அனுப்புவேன்;
அது அதன் அரண்களை சுட்டெரிக்கும்.
8அஸ்தோத் பட்டணத்தின் அரசனை நான் அழிப்பேன்.
அஸ்கலோன் பட்டணத்தில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன்.
பெலிஸ்தியரில் இறுதியாக எஞ்சியிருப்பவன் இறக்கும் வரைக்கும்,
எக்ரோன் பட்டணத்துக்கு எதிராக என் கரத்தை நீட்டுவேன்”
என்று ஆண்டவராகிய கர்த்தர் சொல்கின்றார்.
9கர்த்தர் சொல்வது இதுவே:
“தீரு பட்டண மக்கள் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
ஏனெனில் இஸ்ரயேலுடனான#1:9 இஸ்ரயேலுடனான – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது சகோதர உடன்படிக்கையை அவர்கள் உதாசீனம்செய்து,
சிறைப்பிடிக்கப்பட்ட முழுச் சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே.
10தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
11கர்த்தர் சொல்வது இதுவே:
“ஏதோமியர் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
ஏனெனில் இரக்க உணர்வின்றி தன் உறவினனான#1:11 உறவினனான – சகோதரனான
இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே.
அத்துடன் அவன் கோபம் அடங்காமல்,
அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
12தேமான் பட்டண மதில்கள்மீது நெருப்பை அனுப்புவேன்.
அது போஸ்றா நகரத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
13கர்த்தர் சொல்வது இதுவே:
“அம்மோன் மக்கள் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
தன் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக
கீலேயாத் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களைக் கீறிப்போட்டார்களே.
14ரப்பா பட்டண மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன்.
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும்,
புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும்.
15அவர்களின் அரசனும் நாடுகடத்தப்படுவான்.
அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்பிடிக்கப்படுவார்கள்”
என்று கர்த்தர் சொல்கின்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஆமோஸ் 1: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.