லூக்கா 23
23
1அப்பொழுது அங்கு கூடியிருந்தோர் அனைவரும் எழுந்து, அவரைப் பிலாத்துவிடம் கொண்டுபோனார்கள். 2அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்ப்பதோடு, தானே மேசியாவாகிய அரசன் என்றும் சொல்லிக்கொள்கின்றான்” என அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.
3எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதர்களுடைய அரசனா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நீர் அவ்வாறு சொல்கின்றீர்” என்றார்.
4பிலாத்து, பிரதான மதகுருக்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதுவுமே எனக்குத் தென்படவில்லை” என்றான்.
5ஆனால் அவர்களோ, “இவன் கலிலேயாவில் ஆரம்பித்து, இப்பொழுது இங்கே யூதேயா முழுவதிலும், தனது போதனையினாலே மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
6அதைக் கேட்ட பிலாத்து, “இவன் ஒரு கலிலேயனா?” என்றான். 7இயேசு, ஏரோதுவின் நீதிச்சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் அவரை ஏரோதுவிடம் அனுப்பி வைத்தான். அவ்வேளையில் ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான்.
8ஏரோது நீண்ட காலமாக இயேசுவைப் பார்க்க விரும்பியிருந்ததனால், அவன் இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான்; ஏனெனில், அவன் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்ததனால், அவர் ஏதாவதொரு அற்புத அடையாளத்தை செய்வதை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தான். 9அவன் அவரிடம், அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. 10பிரதான மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் அங்கே நின்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்கள். 11அப்போது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு அலங்காரமான ஒரு மேலாடையை அணிவித்து, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். 12அன்று முதல், ஏரோதுவும் பிலாத்துவும் நண்பர்கள் ஆனார்கள். அதற்கு முன்னர் அவர்கள் இருவரும் பகைவர்களாய் இருந்தார்கள்.
13பிலாத்து, பிரதான மதகுருக்களையும் ஆளுநர்களையும் மக்களையும் ஒன்றாக அழைத்து, 14அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவன் எனக் கூறி என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே இவனை விசாரித்தேன். ஆனால், இவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதுவுமே எனக்குத் தென்படவில்லை. 15ஏரோதுவும் இவன்மேல் குற்றம் எதையும் காணவில்லை. ஏனெனில், அவர் இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரணதண்டனை பெறுவதற்குரிய குற்றம் எதையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. 16எனவே நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். 17ஏனெனில், பண்டிகையின்போது அவர்களுக்காக அவன் ஒரு கைதியை விடுதலை செய்ய வேண்டியிருந்தது.#23:17 சில மூலப்பிரதிகளில் இவ்வசனம் காணப்படவில்லை மத். 27:15; மாற். 15:6
18அவர்களோ ஒருமித்த குரலில், “இவன் வேண்டாம்! பரபாசை எங்களுக்கு விடுதலையாக்குவீராக” என்று சத்தமிட்டார்கள். 19பரபாஸ் என்பவன், பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலை செய்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
20பிலாத்து, இயேசுவை விடுதலை செய்ய விரும்பி, திரும்பவும் அவர்களுடன் இடைப்பட்டுப் பேசினான். 21ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறைவீராக! அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று சத்தமிட்டார்கள்.
22மூன்றாவது தடவையாகவும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான குற்றத்துக்கேற்ற ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
23ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேலோங்கியது. 24எனவே பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான். 25எனவே, அவர்கள் கேட்டுக் கொண்டபடி, கிளர்ச்சி செய்ததற்காகவும் கொலை செய்ததற்காகவும் சிறையில் இடப்பட்டிருந்த பரபாஸ் என்பவனை விடுதலை செய்தான்; இயேசுவை அவர்களுடைய விருப்பப்படி செய்யக் கையளித்தான்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
26அவர்கள் இயேசுவை அழைத்துக்கொண்டு போகையில், நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவன் வந்து கொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மீது வைத்து, இயேசுவுக்குப் பின்னால் அதைச் சுமந்து போகும்படி செய்தார்கள். 27மக்கள் பெரும் கூட்டமாய் அவருக்குப் பின்னே போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தில், அவருக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். 28இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்து, “எருசலேமின் பெண்களே,#23:28 பெண்களே – கிரேக்க மொழியில் மகள்மாரே எனக்காக அழ வேண்டாம்; மாறாக, நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29ஏனெனில், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும், குழந்தையை பெறாத பெண்களும், பாலூட்டாத பெண்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.
30“அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்கள்மேல் விழுங்கள்!’ என்றும்,
குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மூடுங்கள்!’ என்றும் சொல்வார்கள்.#23:30 ஓசி. 10:8
31ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்ன நடக்கப் போகின்றதோ?” என்றார்.
32குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும், மரணதண்டனைக்காக அவருடனேகூட கொண்டுபோகப்பட்டார்கள். 33அவர்கள் மண்டையோடு எனப்பட்ட இடத்துக்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடதுபக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்போது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னிப்பீராக! தாங்கள் செய்வது எதுவென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்களோ, அவருடைய ஆடைகளைச் சீட்டுக்குலுக்கிப் போட்டு, பங்கிட்டுக் கொண்டார்கள்.
35இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு நின்றபோது, ஆட்சியாளர்களோ அவரை ஏளனம் செய்து, “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிவுசெய்யப்பட்ட அவருடைய மேசியாவாக இருந்தால், தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.
36இராணுவ வீரர்களும் அவரைக் கேலி செய்து, அவருக்கு புளித்த திராட்சைரசத்தைக் கொடுத்து, 37“நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
38அவருக்கு மேலாக இருந்த ஒரு அறிவிப்புப் பலகையில்,
“இவன் யூதருடைய அரசன்”
என்று எழுதப்பட்டிருந்தது.
39அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீ மேசியா அல்லவா? உன்னையும், எங்களையும் காப்பாற்று” என்று அவரைத் தூஷண வார்த்தைகளால் பழித்துரைத்தான்.
40ஆனால் மற்றைய குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. 41நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். ஆனால் இவரோ, எந்தத் தவறும் செய்யவில்லை” என்றான்.
42பின்பு அவன், இயேசுவிடம், “இயேசுவே, உமது இராச்சியத்தில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்வீராக!” என்றான்.
43அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இன்றைய தினமே நீ என்னுடன்கூட பரதீசில்#23:43 பரதீசில் – இதை இறைவனின் மக்களாகிய நீதிமான்களின் மகிமையான இருப்பிடம் அல்லது அழகிய தோட்டம் என்றும் அர்த்தம்கொள்ளலாம். இருப்பாய்” என்றார்.
இயேசுவின் மரணம்
44அப்போது நடுப்பகல் வேளையாயிருந்தது, பிற்பகல் மூன்று மணி வரை#23:44 மூன்று மணி வரை – கிரேக்க மொழியில் ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம்வரை பூமி முழுவதையும் இருள் மூடியிருந்தது. 45சூரியன் ஒளி கொடுக்கவில்லை. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கின்றேன்”#23:46 சங். 31:5 என்று சத்தமிட்டு அழைத்தார். இதைச் சொல்லிவிட்டு, அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.
47நூற்றுக்குத் தளபதி நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நிரபராதியான நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். 48இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் எல்லோரும் அங்கு நடந்ததைக் கண்டபோது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள். 49ஆனால் அவரை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும் தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படல்
50நியாயசபையின் உறுப்பினர்களில் ஒருவனான, யோசேப்பு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானுமாய் இருந்தான். 51யூதேயாவிலுள்ள பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்த அவன் இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களின்#23:51 இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களின் – கிரேக்க மொழியில் அவர்களின் தீர்மானத்திற்கோ, செயலுக்கோ உடன்படாதவனும், இறைவனுடைய இராச்சியத்துக்காகக் காத்திருப்பவனுமாக இருந்தான். 52அவன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டு, 53அதைக் கீழே இறக்கி ஒரு விலையுயர்ந்த மெல்லிய துணியில் சுற்றி, இதுவரையும் எவருடைய உடலும் வைக்கப்பட்டிராததும் மலைப்பாறையில் குடையப்பட்டிருந்ததுமான ஒரு கல்லறையில் வைத்தான். 54அது சபத் ஓய்வுநாளுக்கு முன்னைய ஆயத்த நாளாயிருந்து, ஓய்வுநாள் தொடங்கவிருந்தது.
55கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னே சென்று, கல்லறையையும் அதில் அவருடைய உடல் கிடத்தப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள். 56பின்பு அவர்கள் வீட்டுக்குப் போய், நறுமணப் பொருட்களையும், வாசனைத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள்.#23:56 வாசனைத் தைலங்களையும் – மரணித்த உடலின் துர்நாற்றத்தைப் போக்க, யூத முறைமையின்படி இயேசுவின் உடலுக்குப் பூச இவற்றை ஆயத்தம் செய்தார்கள். ஆனால், ஓய்வுநாள் ஆரம்பித்ததும், யூத நீதிச்சட்ட கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் ஓய்வெடுத்தார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
லூக்கா 23: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.