லூக்கா 20

20
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிய கேள்வி
1ஒருநாள் இயேசு ஆலயத்தில்#20:1 ஆலயத்தில் ஆலய வளாகத்திற்குள் என்று பொருள் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டும் இருந்தபோது பிரதான மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களுடன் ஒன்றுசேர்ந்து அவரிடம் வந்து, 2“நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
3அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். 4யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார்.
5இதைக் குறித்து அவர்கள் தங்களுக்குள்ளே கலந்து பேசி, “ ‘அது பரலோகத்திலிருந்து வந்தது’ என்று நாம் சொல்வோமானால், ‘அவ்வாறாயின் நீங்கள் ஏன் அவரை விசுவாசிக்கவில்லை?’ என்று இவர் நம்மைக் கேட்பார். 6‘மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் எல்லோரும் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்பதில் அவர்கள் உறுதியாய் இருக்கின்றார்கள்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
7எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.
8அதற்கு இயேசு அவர்களிடம், “இவற்றை எந்த அதிகாரத்தினால் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
பொல்லாத குத்தகைக்காரர்களின் உவமை
9இயேசு தொடர்ந்து, மக்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்துக்கு ஒரு பயணம் சென்றான். 10அறுவடைக் காலத்தின்போது திராட்சைத் தோட்டத்திலிருந்து தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை குத்தகைக்காரர்களிடம் அனுப்பினான். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். 11தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். 12மூன்றாவது முறையும் வேறொருவனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
13“அப்போது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கின்ற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
14“ஆனால் குத்தகைக்காரர்கள், மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளனின் வாரிசு, இவனைக் கொலை செய்வோம்; அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 15அவ்வாறே, அவர்கள் அவனைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி, கொலை செய்தார்கள்.
“அவ்வாறானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்? 16அவன் வந்து, அந்த குத்தகைக்காரர்களைக் கொலை செய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார்.
மக்கள் இதைக் கேட்டபோது, “ஐயோ! அவ்வாறு ஒருபோதும் நடக்கவே கூடாது!” என்றார்கள்.
17அப்போது இயேசு அவர்களை உற்று நோக்கி, “அவ்வாறானால்,
“ ‘கட்டடம் நிர்மாணிப்பவர்கள் வேண்டாம் என்று நிராகரித்த கல்தான்,
கட்டடத்தின் மிக முக்கியமான கல்#20:17 முக்கியமான கல் – கிரேக்க மொழியில் மூலைக்குத் தலைக்கல் என்றுள்ளது. ஆயிற்று’#20:17 சங். 118:22
என்று, எழுதியிருப்பதன் அர்த்தம் என்ன? 18அந்தக் கல்லின் மேல் விழுகின்ற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொருங்கிப் போவான். இந்தக் கல் எவன் மேலாவது விழுந்தால், அது அவனை நசுக்கிவிடும்” என்றார்.
19அவர் இந்த உவமையை தங்களுக்கு எதிராகவே சொன்னார் என்று நீதிச்சட்ட ஆசிரியர்களும், பிரதான மதகுருக்களும் அறிந்து, அவரை உடனே கைதுசெய்ய வழி தேடினார்கள். ஆனாலும், அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
ரோம பேரரசனுக்கு வரி
20எனவே, இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், நீதிமான்களைப் போல் பாசாங்கு செய்யும் ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசு சொல்லும் வார்த்தையினால் அவரைக் குற்றம் சாட்டி, ரோம ஆளுநரின் சட்ட வரையறைக்குள்ளான அதிகாரத்திற்கு ஒப்படைக்க நினைத்தார்கள். 21எனவே அந்த ஒற்றர்கள் அவரிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகின்றீர் என்றும், போதிக்கின்றீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை நீர் உண்மையின்படி போதிக்கின்றீர் என்றும் அறிவோம். 22நாங்கள், சீசருக்கு#20:22 சீசருக்கு – இது ரோம பேரரசருக்கான பொதுவான பெயராகும். வரி செலுத்துவது சரியானதா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
23அவர் அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம், 24“ஒரு தினாரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள். இந்த நாணயத்தில் இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார்.
அவர்கள், “சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
25அவர் அவர்களிடம், “அவ்வாறானால் சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
26மக்களுக்கு முன்பாக அவர் சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவர்மீது குற்றம் காண முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் கேட்டு, வியப்புற்று மௌனமானார்கள்.
உயிர்த்தெழுதலும் திருமணமும்
27உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்பதற்காக வந்தார்கள். 28அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் மரணித்துப்போவான் எனில், மரணித்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியை உருவாக்க வேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். 29இவ்வாறாக, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் மரணித்துவிட்டான். 30இரண்டாவது சகோதரனும், 31அதன் பின்னர் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக மரணித்துவிட்டார்கள். அவ்வாறே ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் மரணித்துவிட்டார்கள். 32இறுதியில் அந்தப் பெண்ணும் மரணித்துவிட்டாள். 33அவ்வாறெனின், மரணித்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அந்த ஏழுபேரில் யாருக்கு அவள் மனைவியாய் இருப்பாள்? ஏனெனில் அந்த ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
34இயேசு அதற்கு அவர்களிடம், “இவ்வுலக வாழ்வில் மக்கள் திருமணம் செய்கின்றார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். 35ஆனால் வரப்போகின்ற காலத்தையும் இறந்தோரின் உயிர்த்தெழுதலையும் அடைந்து, அதை அனுபவிக்க தகுதியுள்ளவர்களாய் கருதப்படுகின்றவர்களோ, அப்போது திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை. 36அவர்கள் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள். ஆதலால் அவர்கள் இனி மரணிக்க மாட்டார்கள். 37மரணித்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப் பற்றிய அவரது பதிவிலே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவர் கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கின்றார்.#20:37 யாத். 3:6 38அவர் மரணித்தவர்களின் இறைவனல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கின்றார். ஏனெனில், இறைவனைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் உயிருள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்” என்றார்.
39நீதிச்சட்ட ஆசிரியர்களில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள். 40அதன் பின்னர், ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
மேசியா யாருடைய மகன்
41இயேசு அவர்களிடம், “மேசியாவை தாவீதின் மகன் என்று சொல்கின்றார்களே, அது எப்படி? 42சங்கீதப் புத்தகத்தில்,
“கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னதாவது:
‘நீர் எனது வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பீராக,
43நான் உமது பகைவரை உமது கால்களுக்கு
பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திருப்பீராக’#20:43 சங். 110:1 என்று தாவீதுதாமே கூறியுள்ளாரே.
44தாவீது மேசியாவை#20:44 மேசியாவை – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டவர் என்று அழைக்கின்றபடியால், அவர் எவ்வாறு தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்றார்.
எச்சரிக்கைகள்
45மக்கள் அனைவரும் அவர் சொல்பவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது, இயேசு தமது சீடர்களிடம், 46“நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துகளைப் பெறுவதையும் விரும்புகின்றார்கள். யூத மன்றாடும் ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகின்றார்கள். 47அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றையவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட ஜெபம்செய்கின்றார்கள். இவ்வாறானவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

லூக்கா 20: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល