15
காணாமற்போன செம்மறியாடு
1இயேசு சொல்வதைக் கேட்பதற்காக வரி சேகரிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். 2அப்போது பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முணுமுணுத்தார்கள்.
3அப்போது இயேசு அவர்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: 4“உங்களில் ஒருவனிடம் நூறு செம்மறியாடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமற் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் பாதுகாப்பான ஒரு வெளியிடத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன செம்மறியாட்டைக் கண்டுபிடிக்கும் வரைக்கும், அதைத் தேடிப் போவான் அல்லவா? 5அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் அதைத் தனது தோளில் போட்டுக்கொள்வான். 6அவன் வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் ஒன்றுகூட்டி, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமற்போன எனது செம்மறியாட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். 7நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகின்ற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே மனமகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.
காணாமற்போன நாணயம்
8“ஒரு பெண்ணிடம், பத்து திராக்மா#15:8 பத்து திராக்மா – ஒரு திராக்மா வெள்ளி நாணயம் சுமார் ஒருவருடைய ஒரு நாட் சம்பளத்துக்குச் சமனானது. வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமற் போனால், அவள் அதைக் கண்டுபிடிக்கும் வரை ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ? 9அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் ஒன்றுகூட்டி, ‘என்னுடனே மகிழ்ச்சிகொள்ளுங்கள்; காணாமற்போன எனது நாணயத்தை நான் கண்டெடுத்துவிட்டேன்’ என்று சொல்வாள் அல்லவா? 10நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவ்விதமாகவே மனந்திரும்புகின்ற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் மனமகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.
மனந்திரும்பிய மகனும், அன்பின் தந்தையும்
11இயேசு தொடர்ந்தும் சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு மகன்மார் இருந்தார்கள். 12அவர்களில் இளையவன் தனது தந்தையிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாருங்கள்’ என்று கேட்டான். எனவே தந்தை, தனது சொத்தை இருவருக்குமாக பிரித்துக் கொடுத்தான்.
13“சில நாட்களுக்குள்ளாகவே, இளைய மகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தொலைவிலுள்ள ஒரு நாட்டுக்குச் சென்றான். அங்கே அவன் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் அழித்துவிட்டான். 14அவன் எல்லாவற்றையும் செலவு செய்து முடித்த பின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் உண்டானது, அதனால் அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. 15எனவே அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் வேலைக்குச் சேர்ந்தான். அங்கு பன்றிகளை மேய்க்கும்படி அவன் வயலுக்கு அனுப்பப்பட்டான். 16அப்போது அவன், பன்றிகள் உண்ணுகின்ற தவிட்டினால் தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு எதையும் கொடுக்கவில்லை.
17“தனது புத்தி தெளிவடைந்தபோது அவன், ‘எனது தந்தையிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கின்றார்கள். நானோ இங்கே பட்டினியில் சாகின்றேன். 18நான் புறப்பட்டு என் தந்தையிடம் திரும்பிப் போய், அவரிடம், அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் பாவம் செய்திருக்கின்றேன். 19நான் இனிமேலும் உங்களுடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உங்கள் கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளுங்கள் என்பேன்’ என்று சொல்லிகொண்டு, 20எழுந்து தன் தந்தையிடம் சென்றான்.
“அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தந்தை அவனைக் கண்டு, மனமுருகினான்; தந்தை ஓடிப் போய் தனது மகனை ஆரத்தழுவி முத்தமிட்டான்.
21“மகனோ தன் தந்தையிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும் உங்களுடைய மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான்.
22“ஆனால் அவனுடைய தந்தையோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், உள்ளவற்றில் முதற் தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு அணிவியுங்கள். இவனது கைவிரலில் மோதிரமும் கால்களில் காலணியும் அணியுங்கள். 23உடனே மிகச் சிறப்பான விருந்தை#15:23 சிறப்பான விருந்தை என்பது கொழுத்த கன்றுக் குட்டியை சமைத்தலைக் குறிக்கிறது. ஏற்பாடு செய்யுங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். 24ஏனெனில், எனது இந்த மகன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, திரும்பவும் உயிர் பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ இவன் எனக்குக் கிடைத்துவிட்டான்’ என்றான். எனவே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25“இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது. 26எனவே அவன் வேலைக்காரரில் ஒருவனை அழைத்து, ‘என்ன நடக்கின்றது?’ என்று விசாரித்தான். 27அதற்கு அவன், ‘உமது சகோதரன் வந்துவிட்டார். அவர் சுகநலத்துடன் தன்னிடம் திரும்பவும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிகச் சிறப்பான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்’ என்றான்.
28“ஆனால் அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக மறுத்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக் கேட்டான். 29அவனோ தன் தந்தையிடம், ‘இதோ! இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். நான் ஒருபோதும் உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அவ்வாறிருந்தும், நான் எனது நண்பர்களுடன் விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையேனும் தரவில்லை. 30ஆனால் உங்கள் சொத்தை, விலைமாதர்களுடன் செலவழித்து வீணடித்த உங்களது இந்த மகன் வீட்டுக்கு வந்தபோதோ, அவனுக்காக நீங்கள் மிக சிறப்பான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்’ என்றான்.
31“அப்போது தந்தை, ‘என் மகனே! நீ எப்போதும் என்னுடனே இருக்கின்றாய். உனக்குரியவையே எல்லாம் உனக்குரியவைகளே. 32ஆனால் உனது சகோதரனான இவனோ இறந்து போயிருந்தான்; இப்போது திரும்பவும் உயிர் பெற்றிருக்கிறான். காணாமற் போயிருந்தான்; திரும்பவும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால் நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”