லேவியராகமம் 7

7
குற்றநிவாரணபலி
1குற்றநிவாரணபலிக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகாபரிசுத்தமானது. 2தகனபலி மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே, குற்றநிவாரணபலிக்கான மிருகமும் வெட்டிக் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தின் இரத்தம் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்கப்பட வேண்டும். 3அதன் கொழுப்பு முழுவதும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். கொழுப்புள்ள வாலும், உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். 4இடுப்புக்குக் கீழ்ப் புறமாக இருக்கின்ற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சூழவுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். 5மதகுரு அவற்றைக் கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்படும் பலியாக பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். இது குற்றநிவாரணபலி. 6மதகுருவின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதை உண்ணலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்தில் உண்ண வேண்டும். அது மகாபரிசுத்தமானது.
7பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் ஒரே விதிமுறைப்படியே செய்யவேண்டும். அவற்றைக்கொண்டு பாவநிவர்த்தி செய்யும் மதகுருவுக்கே அவை சொந்தமாகும். 8ஒருவரின் தகனபலியைச் செலுத்தும் மதகுரு அந்தப் பலியின் தோலை தனக்காக எடுத்துக்கொள்ளலாம். 9அடுப்பில் தயாரிக்கப்பட்டதும், சட்டியில் சமைக்கப்பட்டதும், இரும்பு வலைத் தட்டில் சுடப்பட்டதுமான தானியபலிகளெல்லாம் அவற்றைச் செலுத்தும் மதகுருக்களுக்கே உரியன. 10எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும் தானியபலி எல்லாம் ஆரோனின் மகன்மார் அனைவருக்கும் சம உரித்துடையதாகும்.
சமாதானபலி
11ஒருவன் கர்த்தருக்குக் கொடுக்கும் சமாதானபலியின் ஒழுங்குமுறைகள் இவையே:
12அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாயின், இந்த நன்றிபலியுடன், புளிப்பூட்டப்படாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், மெல்லிய மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்த வேண்டும். 13நன்றி செலுத்துவதற்கான தன் சமாதானபலியுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் பலியாகச் செலுத்த வேண்டும். 14அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை கர்த்தருக்கு அன்பளிப்பான பலியாகக் கொண்டுவர வேண்டும். சமாதானபலியின் இரத்தத்தைத் தெளிக்கும் மதகுருவுக்கே இது உரியது. 15நன்றி செலுத்தும் சமாதானபலியின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக் கூடாது.
16எனினும் அவனுடைய பலி ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பபலியாகவோ இருந்தால், அவன் பலி செலுத்தும் நாளில் அதை உண்ண வேண்டும். ஆனால் ஏதாவது மீதியிருந்தால் அடுத்தநாள் உண்ணலாம். 17ஆனாலும், மூன்றாம் நாள்வரை மீதியாய் இருக்கும் பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்பட வேண்டும். 18சமாதானபலியின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது பலி செலுத்துபவருக்கு பலன் தராது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பாளியாவான்.
19“அசுத்தமான எதிலாவது இறைச்சி பட்டுவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடக் கூடாது. அது எரிக்கப்பட வேண்டும். மற்றைய இறைச்சியைப் பொறுத்தமட்டில், அதை சுத்தமாய் இருப்பவன் எவனும் சாப்பிடலாம். 20ஆனால் கர்த்தருக்குச் சொந்தமான சமாதானபலியின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கின்ற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும். 21மனித அசுத்தம், அல்லது அசுத்த மிருகம், அல்லது அசுத்த உயிரினம் ஆகிய இவ்வாறான அசுத்தமும் கறைப்பட்டதுமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு கர்த்தருக்குரிய சமாதானபலியின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.
கொழுப்பு மற்றும் இரத்தம் சாப்பிடத் தடை
22கர்த்தர் மோசேயிடம், 23“நீ இஸ்ரயேலருக்குச் சொல்ல வேண்டியதாவது: மாடுகளின் கொழுப்பையோ, செம்மறியாட்டின் கொழுப்பையோ, வெள்ளாட்டின் கொழுப்பையோ சாப்பிட வேண்டாம். 24இறந்து கிடக்கக் காணப்பட்ட ஒரு மிருகத்தின் கொழுப்பையோ, அல்லது காட்டுமிருகங்களால் கிழித்துப் போடப்பட்ட மிருகத்தின் கொழுப்பையோ வேறு ஏதாவது தேவைக்குப் பயன்படுத்தலாம்; ஆனால் நீங்கள் அதைச் சாப்பிடக் கூடாது. 25கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்படும் பலிக்கான மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். 26நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், பறவையின் இரத்தத்தையோ மிருகத்தின் இரத்தத்தையோ சாப்பிடக் கூடாது. 27யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால் அவன் தன் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.
மதகுருக்களின் பங்கு
28கர்த்தர் மோசேயிடம், 29“நீ இஸ்ரயேலருக்குச் சொல்ல வேண்டியதாவது: கர்த்தருக்குச் சமாதானபலி கொண்டுவரும் எவனும், அதன் ஒரு பங்கைத் தனது பலியாக கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். 30நெருப்பினால் கர்த்தருக்குச் செலுத்தப்படும் பலியைத் தன் சொந்தக் கைகளினால் கொண்டுவர வேண்டும். அதன் நெஞ்சுப் பகுதியுடன் அதன் கொழுப்பையும் கொண்டுவந்து, நெஞ்சுப் பகுதியை கர்த்தருக்கு முன் அசைவாட்டும்பலியாக அசைவாட்ட வேண்டும். 31மதகுரு கொழுப்பை பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். ஆனால் நெஞ்சுப் பகுதியோ ஆரோனுக்கும் அவன் மகன்மாருக்கும் உரியது. 32நீங்கள் சமாதானபலி மிருகத்தின் வலது தொடையை மதகுருவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும். 33சமாதானபலி மிருகத்தின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்தும் ஆரோனின் மகன், மிருகத்தின் வலது தொடையை தனது பங்காக எடுக்க வேண்டும். 34இஸ்ரயேலரின் சமாதானபலியிலிருந்து அசைவாட்டப்பட்ட நெஞ்சுப் பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் அவற்றை இஸ்ரயேலரிடமிருந்து மதகுரு ஆரோனுக்கும் அவன் மகன்மாருக்கும் நிரந்தரமான பங்காகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
35நெருப்பினால் கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட பலியின் இப்பங்கு, ஆரோனுக்கும் அவன் மகன்மாருக்கும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் மதகுருக்களாக கர்த்தருக்குப் பணிசெய்ய ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளிலேயே, இப்பங்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. 36அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட அந்தநாளிலே, “தலைமுறை தோறும் இஸ்ரயேலர் தங்களுடைய ஒழுங்கான பங்காக இதை மதகுருக்களுக்குக் கொடுக்க வேண்டும்” என கர்த்தர் கட்டளையிட்டிருந்தார்.
37தகனபலி, தானியபலி, பாவநிவாரணபலி, குற்றநிவாரணபலி, திருநிலைப்படுத்தும்பலி, சமாதானபலி ஆகியவற்றுக்கான ஒழுங்குமுறைகள் இவையே. 38இஸ்ரயேலர் கர்த்தருக்குக் காணிக்கைகள் கொண்டுவர வேண்டுமென, கர்த்தர் சீனாய் பாலைவனத்தில் கட்டளையிட்ட நாளிலே, அவர் சீனாய் மலையில் இந்த ஒழுங்குமுறைகளை மோசேக்குக் கொடுத்தார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

லேவியராகமம் 7: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល