44
சாக்கில் கண்டெடுத்த வெள்ளிக்கிண்ணம்
  1அவர்கள் விருந்துண்ட பின்னர்#44:1 அவர்கள் விருந்துண்ட பின்னர் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இந்த ஆட்களின் சாக்குகளை அவர்கள் தூக்கிச் சுமக்கக்கூடிய அளவு தானியத்தால் நிரப்பி, ஒவ்வொருவரின் சாக்குகளின் வாயில் பகுதிகளிலும் அவரவர் செலுத்திய வெள்ளிப்பணத்தை வைத்துவிடு. 2இளையவன் பென்யமீனுடைய சாக்கின் வாயில் பகுதியிலே என் வெள்ளிக்கிண்ணத்தையும் தானியத்துக்காக அவன் செலுத்திய வெள்ளிப்பணத்தையும் வைத்துவிடு” என்று கட்டளையிட்டான். யோசேப்பு சொன்னபடியே வீட்டு மேற்பார்வையாளன்#44:2 வீட்டு மேற்பார்வையாளன் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது செய்தான்.
  3மறுநாள் பொழுது விடிந்ததும், அவர்கள் தங்களது கழுதைகளுடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர். 4அவர்கள் பட்டணத்திலிருந்து அதிக தூரம் செல்வதற்கு முன்னதாக யோசேப்பு தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “நீ உடனே அவர்களைப் பின்தொடர்ந்து போ; அவர்களைப் பிடித்தவுடன் அவர்களிடம், ‘நீங்கள் நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்தது ஏன்? 5இது என் எஜமான் பானம் அருந்துவதற்கும், விடயங்களை குறிபார்த்துக் கணிப்பிடுவதற்கும் பயன்படுத்துவதல்லவா? நீங்கள் செய்திருப்பது தீய செயல்’ என்று சொல்வாயாக” என்றான்.
  6அவ்விதமாக அவர்களைச் சென்றடைந்த மேற்பார்வையாளன், அந்த வார்த்தைகளை அவ்வாறே சொன்னான். 7ஆனால் அவர்கள் அவனிடம், “ஏன் ஆண்டவனே இவ்வாறானவற்றைச் சொல்கின்றீர்? இவ்வாறான ஒரு காரியத்தைச் செய்ய உமது அடியவராகிய நாங்கள் எண்ணியும் பார்க்கவில்லை! 8முன்பு எங்கள் சாக்குகளின் வாயில் பகுதியில் நாங்கள் கண்டெடுத்த பணத்தைக்கூட கானானிலிருந்து மீண்டும் கொண்டுவந்தோம். அவ்வாறிருக்கையில், உமது எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ நாங்கள் ஏன் திருட வேண்டும்? 9உமது அடியவரில் எவராவது அதை வைத்திருப்பதை நீர் கண்டால் அவன் உயிரிழக்க வேண்டும்; மற்றவர்கள் என் எஜமானின் அடிமைகளாவோம்” என்றார்கள்.
  10அதற்கு அவன், “நல்லது, அவ்வாறானால் நீங்கள் சொன்னபடியே ஆகட்டும். உங்களில் எவனுடைய சாக்கில் அந்த வெள்ளிக்கிண்ணம் இருக்கின்றதோ, அவன் எனக்கு அடிமையாவான்; மற்றவர்கள் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்” என்றான்.
  11அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது சாக்கை நிலத்தில் இறக்கி, அதை அவிழ்த்தார்கள். 12அப்போது மேற்பார்வையாளன், மூத்தவன் முதற்கொண்டு இளையவன் வரை அனைவரது சாக்குகளையும் பரிசோதனையிடத் தொடங்கினான். அப்போது அந்தக் கிண்ணம் பென்யமீனுடைய சாக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 13அதைக் கண்டவுடனே அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக் கொண்டார்கள். பின்பு, அவர்கள் எல்லோரும் தங்கள் சுமைகளை மீண்டும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு பட்டணத்துக்குத் திரும்பி வந்தார்கள்.
  14யூதாவும் அவனது சகோதரர்களும் திரும்பி வரும்வரை, யோசேப்பு தனது வீட்டில் இருந்தான். அவர்கள் யோசேப்பின் முன் தலைதாழ்த்தி தரையில் விழுந்தார்கள். 15யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் செய்திருப்பது என்ன? என்னைப் போன்ற ஒருவன், விடயங்களை குறிபார்த்து கணித்துவிடுவான் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
  16அதற்கு யூதா, “ஆண்டவனே, உமக்கு நாங்கள் என்ன பதில் சொல்லக் கூடும்? நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எவ்வாறு நிரூபிப்போம்? இறைவன் உமது அடியவர்கள் செய்த குற்றத்தை வெளிப்படுத்தி விட்டார். நாங்களும் உமது கிண்ணத்தை வைத்திருப்பவனும் இப்போது என் எஜமானுக்கு அடிமைகள்” என்றான்.
  17ஆனால் யோசேப்போ, “இல்லை, அத்தகைய முறையற்ற ஒரு செயலை நான் செய்வதை என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியாது! யாரிடத்தில் கிண்ணம் இருந்ததோ அவன் மட்டுமே எனக்கு அடிமையாவான். மற்றவர்கள் உங்கள் தந்தையிடம் சமாதானத்துடன் திரும்பிப் போங்கள்” என்றான்.
  18யூதா, யோசேப்பிடம் சென்று, “ஆண்டவனே, உமது அடியவனாகிய நான் உம்மிடம் தனியாக ஒருசில வார்த்தைகளைப் பேச அனுமதி தந்தருள்வீராக! நீர் பார்வோனுக்கு நிகராக இருக்கின்றபோதிலும், உமது அடியவன்மேல் கோபிக்க வேண்டாம். 19ஆண்டவனே, நீர் உமது அடியவர்களிடம், ‘உங்களுக்குத் தந்தையாவது சகோதரராவது இருக்கின்றார்களா?’ என்று முன்னர் கேட்டீர். 20அதற்கு நாங்கள் எங்கள் ஆண்டவனிடம், ‘ஆம், எங்களுக்கு வயதுசென்ற தந்தையும், அவருக்கு முதிர்வயதில் பிறந்த ஒரு இளைய மகனும் இருக்கின்றார்கள். அந்த இளைய மகனுடைய தாயின் பிள்ளைகளில், இவன் ஒருவனே உயிரோடிருக்கின்றான்; இவனுடைய சகோதரன் மரணித்துவிட்டான். இவனுடைய தந்தை இவனை நேசிக்கிறார்’ என்று சொன்னோம்.
  21“அப்போது நீர் உமது அடியவரிடம், ‘நான் அவனைப் பார்ப்பதற்காக அவனை என்னிடம் இங்கு கீழே கொண்டுவாருங்கள்’ என்றீர். 22அதற்கு நாங்கள் என் ஆண்டவனாகிய உம்மிடம், ‘அவன், தனது தந்தையை விட்டுவர முடியாது; அவ்வாறு அவன் பிரிந்துவந்தால், அவனுடைய தந்தை மரணித்து விடுவார்’ என்றோம். 23ஆனால் நீரோ, ‘உங்கள் இளைய சகோதரன் உங்களுடன் இங்கு கீழே வராவிட்டால், மீண்டும் என் முகத்தை உங்களால் பார்க்க முடியாது’ என்று உமது அடியவராகிய எங்களிடம் சொன்னீர். 24உமது அடியவனாகிய எங்கள் தந்தையிடம் நாங்கள் திரும்பிச் சென்றபோது, என் ஆண்டவனே, நீர் சொல்லியிருந்தவற்றை அவரிடம் சொன்னோம்.
  25“பின்னர் எங்கள் தந்தை, ‘நீங்கள் மறுபடியும் போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள்’ என்றார். 26அப்போது நாங்கள் அவரிடம், ‘நாங்கள் அங்கே இறங்கிப் போக முடியாது; எங்கள் இளைய சகோதரன் எங்களுடன் வந்தால் மட்டுமே நாங்கள் அங்கே இறங்கிப் போவோம். எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனின் முகத்தைப் பார்ப்பது இயலாத காரியம்’ என்று சொன்னோம்.
  27“அப்போது உமது அடியவனாகிய எனது தந்தை எங்களிடம், ‘என் மனைவி எனக்கு இரண்டு மகன்மாரைப் பெற்றெடுத்தாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 28அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான், “நிச்சயமாய் அவனை ஒரு கொடிய மிருகம் கிழித்துக் கொன்றிருக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன். அன்றிலிருந்து அவனை நான் காணவேயில்லை. 29நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்கு விபத்து ஏதும் ஏற்பட்டுவிட்டால், நரைத்த என் தலை மரணித்தோரின் இடத்துக்குப் பெருந்துயருடன் இறங்கிச் செல்லும்படி செய்வீர்கள்’ என்றார்.
  30“இந்த சிறுவனது உயிருடன் என் தந்தையின் உயிர் ஒன்றிணைந்து இருக்கின்றது. அதனால் இப்போது நான் உமது அடியவனாகிய என் தந்தையிடம் திரும்பிச் செல்லும்போது, 31இந்த சிறுவன் இல்லாததைக் கண்டால், அவர் மரணித்து விடுவார். அதனால் உமது அடியவராகிய நாங்கள், எங்கள் தந்தையின் நரைத்த தலை மரணித்தோரின் இடத்துக்கு கவலையுடன் இறங்கிச் செல்லும்படி செய்வோம். 32உமது அடியவனாகிய நானே இந்த சிறுவனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தேன். நான் என் தந்தையிடம், ‘என் தந்தையே, இவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவராவிட்டால், உமக்கு முன்பாக என் வாழ்நாளெல்லாம் அந்தப் பழியை நானே சுமப்பேன்’ என்றும் சொல்லியிருக்கின்றேன்.
  33“ஆகையால், இப்போது இந்த சிறுவனுக்குப் பதிலாக, உமது அடியவனாகிய நான் என் ஆண்டவனின் அடிமையாக இங்கே இருப்பதனை ஏற்றுக்கொள்வீராக. இந்தச் சிறுவன் தன் சகோதரர்களுடன் திரும்பிச் செல்ல விடுவீராக. 34இவன் என்னுடன் இல்லாவிட்டால், நான் எப்படித் திரும்பிச் செல்ல முடியும்? முடியாது! என் தந்தைக்கு நேரும் அவலத்தை என் கண்களால் பார்க்க முடியாது” என்று சொன்னான்.