31
யாக்கோபும் லாபானும் பிரிதல்
1பின்னர் ஒருநாள், லாபானின் மகன்மார், “எங்கள் தந்தைக்கு சொந்தமான எல்லாவற்றையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அவன் எங்கள் தந்தையின் சொத்துக்களால்தான் செல்வந்தனானான்” என்று பேசிக்கொள்வதை யாக்கோபு கேள்விப்பட்டான். 2அத்துடன் முன்பு போல் லாபான் நல்மனதுடன் தன்னைப் பார்க்கவில்லை என்பதை அவனது முகத்தோற்றத்திலிருந்து யாக்கோபு கண்டுகொண்டான்.
3அப்போது கர்த்தர் யாக்கோபிடம், “நீ உன் தந்தையரின் நாட்டுக்கும் உன் உறவினரிடத்துக்கும் திரும்பிப் போ; நான் உன்னுடன் இருப்பேன்” என்றார்.
4எனவே யாக்கோபு, தனது மந்தைகள் மேய்ந்துகொண்டிருந்த பிரதேசத்துக்கு வரும்படி ராகேல் மற்றும் லேயாளுக்குச் சொல்லி அனுப்பினான். 5அவன் அவர்களிடம், “என்னைக் குறித்த உங்கள் தந்தையின் மனப்பான்மை முன்பு போல் இல்லை என்பதைக் காண்கின்றேன்; ஆனால் என் தந்தையின் இறைவன் என்னுடன் இருக்கின்றார். 6நான் உங்கள் தந்தைக்காக என் முழுப் பலத்துடனும் வேலை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 7ஆனால் உங்கள் தந்தையோ பத்து முறை என் கூலியை மாற்றி என்னை ஏமாற்றினார். அவ்வாறிருந்தும், எனக்குத் தீங்கு செய்ய இறைவன் அவரை அனுமதிக்கவில்லை. 8‘கலப்பு நிறமுள்ள ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளை ஈன்றன. ‘வரியுடைய ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளை ஈன்றன. 9இவ்விதமாக இறைவன் உங்கள் தந்தையின் கால்நடைகளை பறித்தெடுத்து அதை எனக்குக் கொடுத்து விட்டார்.
10“ஆடுகள் இணைசேரும் காலத்தில் ஒருமுறை நான் ஒரு கனவு கண்டேன்; அதில் நான் ஏறிட்டுப் பார்க்கும்போது, மந்தையிலுள்ள ஆடுகளுடன் சேர்க்கையில் ஈடுபடும் வெள்ளாட்டுக்கடாக்கள், வரியும் கலப்பு நிறமும் புள்ளிகளும் உடையனவாய் இருந்தன. 11இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னை அழைத்தார். ‘இதோ, நான் இருக்கின்றேன்’ என்று பதிலளித்தேன். 12அப்போது அவர் என்னிடம், ‘இதோ ஏறிட்டுப் பார், மந்தையிலுள்ள ஆடுகளுடன் சேர்க்கையில் ஈடுபடும் வெள்ளாட்டுக்கடாக்கள் எல்லாம் வரிகளும், கலப்பு நிறமும், புள்ளிகளும் உடையனவாய் இருக்கின்றன. ஏனெனில் உனக்கு லாபான் செய்கின்ற எல்லாவற்றையும் நான் கண்டேன். 13நீ ஒரு நினைவுத் தூணை அபிஷேகம் செய்து, என்னுடன் பொருத்தனை செய்துகொண்ட இடமான பெத்தேலில் உனக்குக் காட்சியளித்த இறைவன் நானே. எனவே எழுந்து இந்த நாட்டைவிட்டு உடனே புறப்பட்டு, உன் இனத்தாரின் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்று சொன்னார்”#31:13 ஆதி. 28:18-22 என்றான்.
14அதற்கு ராகேலும் லேயாளும் யாக்கோபிடம், “உரிமைச் சொத்து அல்லது பங்கு என எங்கள் தந்தையுடைய வீட்டில் இனி எமக்கு என்ன கிடைக்கப் போகிறது? 15அவர் எங்களை அந்நியர்களைப் போல் நடத்தவில்லையோ? எங்களை விற்றுவிட்டது மட்டுமன்றி, எங்களுக்காக செலுத்தப்பட்ட கூலியையும் அவர் செலவழித்துத் தின்றுவிட்டார். 16இறைவன் எங்கள் தந்தையிடமிருந்து பறித்தெடுத்த செல்வங்கள் எல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றை எல்லாம் செய்வீராக” என்றார்கள்.
17பின்பு யாக்கோபு தன் பிள்ளைகளையும் மனைவிமாரையும் ஒட்டகங்களில் ஏற்றி, 18தனக்குச் சொந்தமான கால்நடைகள் தனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்க, பதான்-அராமிலே தான் சம்பாதித்த தன்னுடைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு, கானான் நாட்டிலுள்ள தன் தந்தை ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான்.
19லாபான் தன் செம்மறியாடுகளுக்கு உரோமம் கத்தரிக்கச் சென்றிருந்தவேளை, ராகேல் தன் தந்தையின் வீட்டிலிருந்த சிலைகளைத் திருடி வைத்துக்கொண்டாள். 20மேலும், யாக்கோபு தான் ஓடிப் போவதை அரமேயனான லாபானுக்குச் சொல்லாமல் அவனை ஏமாற்றினான். 21இவ்வாறு யாக்கோபு தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு யூப்ரட்டீஸ்#31:21 யூப்ரட்டீஸ் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நதியைக் கடந்து தப்பியோடி, கீலேயாத் மலைநாட்டை நோக்கிப் போனான்.
யாக்கோபை லாபான் பின்தொடர்தல்
22யாக்கோபு தப்பியோடிய செய்தி மூன்றாம் நாளில் லாபானுக்கு தெரியவந்தது. 23அப்போது லாபான், தன் உறவினர்களோடு யாக்கோபை ஏழு நாட்களாகப் பின்தொடர்ந்து சென்று, கீலேயாத் மலையில் அவன் இருந்த இடத்தை சென்றடைந்தான். 24அன்றிரவு இறைவன் அரமேயனான லாபானின் கனவிலே தோன்றி, “நீ யாக்கோபுடன் நன்மையானதைக் குறித்தோ அல்லது தீமையானதைக் குறித்தோ எதையும் பேச வேண்டாம்” என எச்சரித்தார்.
25கீலேயாத் மலைநாட்டிலே யாக்கோபு கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தபொழுது லாபான் அவனைத் தேடிப்பிடித்தான். லாபானும் தன்னுடைய உறவினர்களுடன் அங்கேயே முகாம் அமைத்துத் தங்கினான். 26அப்போது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்மாரை போரில் கைப்பற்றப்பட்டவர்களைப் போன்று கொண்டுசென்றாயே! 27எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? எனக்கு ஏன் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளத்துடனும் யாழிசையுடனும் பாடல் இசைத்து உன்னை மகிழ்ச்சியாய் வழியனுப்பி வைத்திருப்பேனே. 28என் பேரப் பிள்ளைகளையும் மகள்மாரையும் முத்தமிட்டு அவர்களை வழியனுப்பக்கூட நீ விடவில்லையே. நீ புத்தியீனமாய் நடந்துகொண்டாய். 29உனக்குத் தீங்கு செய்ய என்னால் முடியும்; ஆனால், கடந்த இரவு உன் தந்தையின் இறைவன் ‘நீ யாக்கோபுடன் நன்மையானதைக் குறித்தோ அல்லது தீமையானதைக் குறித்தோ எதையும் பேச வேண்டாம்’ என்று எனக்குச் சொன்னார். 30நீ உன் தந்தையின் வீட்டுக்குப் போக ஆவலாக இருந்ததால்தான் இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், என் தெய்வங்களை ஏன் திருடினாய்?” என்று கேட்டான்.
31அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்மாரை என்னிடமிருந்து பலவந்தமாய் எடுத்துக்கொள்வீர் என்று பயந்ததாலேயே உமக்குச் சொல்லாமல் புறப்பட்டு வந்தேன். 32ஆனால் உம்முடைய தெய்வத்தின் சிலைகளை வைத்திருக்கும் எவரையாவது நீர் எனது குழுவில்#31:32 எனது குழுவில் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடித்தால், அவர் உயிர் வாழக் கூடாது. உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்தில் இருக்கின்றதா என்று நீர் எமது உறவினர்கள் முன்பாகச் சோதித்துப் பாரும்; அவ்வாறிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் தெய்வச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறிந்திருக்கவில்லை.
33அப்போது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் சென்று தேடிப்பார்த்தும் அங்கு எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின்னர் ராகேலின் கூடாரத்துக்குள் போனான். 34அங்கு ராகேல், லாபானின் தெய்வச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்துக்குள் வைத்து அதன்மீது உட்கார்ந்திருந்தாள். கூடாரம் முழுதும் தேடிப்பார்த்தும் லாபானால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
35ராகேல் தன் தந்தையிடம், “என் ஆண்டவனே, உமக்கு முன்பாக நான் எழுந்திருக்காததைக் குறித்து கோபம்கொள்ள வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிலக்குக்கு நான் உள்ளாகியுள்ளேன்” என்றாள். ஆகவே அவன் தேடிப்பார்த்தும் அவனால் தெய்வச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36அப்போது யாக்கோபு, லாபானுடன் கோபம்கொண்டு தனது குற்றமின்மையை வாதிட்டுச் சொன்னதாவது: “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன? 37இப்போது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவ்வாறு இருந்தால் அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களாய் இருக்கும் இவர்கள் முன்பாக இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும்.
38“நான் கடந்த இருபது வருடங்கள் உம்முடன் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் கருச்சிதைவு அடையவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் உண்ணவுமில்லை. 39காட்டுமிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த நட்டத்தை நானே பொறுப்பெடுத்தேன்; ஆனால் நீரோ இரவிலோ அல்லது பகலிலோ உமது மந்தைகள் திருட்டுப்போன அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த நட்டஈட்டை என்னிடமிருந்தே கேட்டு பெற்றுக் கொண்டீர். 40பகலில் வெப்பமும் இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது. 41இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்களாக இருந்தேன். உமது இரு மகள்மாருக்காக பதினான்கு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலை செய்தேன். நீரோ என் கூலியை பத்து முறை மாற்றினீர். 42என் தந்தையின் இறைவனும் ஆபிரகாமின் இறைவனும் ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும் என் கரங்களால் ஆற்றப்பட்ட வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான்.
43அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்மார், இந்தப் பிள்ளைகள் என் பேரப்பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவை எல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்மாருக்காகவும், அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காகவும் இன்று நான் என்ன செய்ய முடியும்? 44வா! இப்போது நானும் நீயும் முறையான ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான்.
45எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினான். 46அதன்பின், அவன் தன் உறவினரிடம், “கற்களைக் குவியுங்கள்” என்றான்; அவ்வாறே அவர்கள் கற்களை எடுத்து ஒரு குவியலாய்க் குவித்து, அதனருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள். 47லாபான் அந்த இடத்துக்கு ஜெகர் சகதூதா#31:47 ஜெகர் சகதூதா – அரமேய மொழியில் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான். யாக்கோபு அதற்கு கலயெத்#31:47 கலயெத் – எபிரேய மொழியில், சாட்சிக் குவியல் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான்.
48அப்போது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கின்றது” என்றான். அதனாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது. 49அது மிஸ்பா#31:49 மிஸ்பா – கண்காணித்தல் என்று அர்த்தம். என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அவன் யாக்கோபிடம், “நாம் ஒருவரையொருவர் விட்டுத் தூரமாய் போகும்போது, கர்த்தரே என்னையும் உன்னையும் கண்காணிக்கட்டும். 50நீ என் மகள்மாரை துன்பப்படுத்தினாலோ அல்லது அவர்களைவிட்டு வேறு பெண்களைத் திருமணம் செய்தாலோ, அதற்கு வேறு யாரும் சாட்சியாக இல்லாவிட்டாலும், உனக்கும் எனக்கும் இடையில் இறைவனே சாட்சி என்பதை நினைவில் வைத்துக்கொள்” என்றான்.
51மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ, எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த இந்த கற்குவியலும், தூணும் இங்கே இருக்கின்றன. 52நான் உனக்குத் தீங்கு செய்ய இந்த குவியலைக் கடந்து உன் பக்கம் வர மாட்டேன் என்பதற்கும், அதேபோல நீயும் எனக்குத் தீங்கு செய்ய இந்த குவியலையும் தூணையும் கடந்து என் பக்கம் வர மாட்டாய் என்பதற்கும் இக்குவியல் ஒரு சாட்சி; இந்தத் தூணும் ஒரு சாட்சி. 53ஆபிரகாமின் இறைவனும் நாகோரின் இறைவனும் அவர்களது தந்தையின் இறைவனுமாய் இருக்கின்றவர் நமக்கிடையில் நியாயம் தீர்ப்பாராக” என்றான்.
அவ்வாறே யாக்கோபும் தன் தந்தையாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவரின்#31:53 பயபக்திக்குரியவரின் – கர்த்தரின் பெயரால் என்று பொருள் பெயரால் சத்தியம் செய்துகொண்டான். 54பின்பு யாக்கோபு அந்த மலைநாட்டில் பலி செலுத்தி, உணவு அருந்தும்படி தன் உறவினர்களை அழைத்தான். அவர்கள் சாப்பிட்ட பின்னர் அன்றிரவு அந்த இடத்தில் தங்கினார்கள்.
55மறுநாள் காலை லாபான் தன் பேரப் பிள்ளைகளையும் மகள்மாரையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின்பு அவன் புறப்பட்டு தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.