25
இறைபிரசன்னக் கூடார காணிக்கைகள்
1மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 2“எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். கொடுப்பதற்கு ஆர்வமுள்ள உள்ளம்கொண்ட ஒவ்வொருவனிடமிருந்தும் நீ எனக்காக காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3“நீ அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவைகளே:
“தங்கம், வெள்ளி, வெண்கலம்;
4நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல், மென்பட்டுத் துணி;
வெள்ளாட்டு உரோமம்,
5சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக்கடாவின் தோல், கடற்பசுவின் தோல்;
சித்தீம் மரம்;
6விளக்கிற்கான ஒலிவ எண்ணெய்;
அபிஷேக எண்ணெய்க்கும் நறுமணத்தூளுக்குமான நறுமணப் பொருட்கள்;
7ஏபோத்திலும்#25:7 ஏபோத்திலும் – தலைமை மதகுரு அணியும் ஒரு கவச ஆடை. யாத். 28:6-14 இல் விபரிக்கப்பட்டுள்ளது, மார்பணியிலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள்; மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.
8“அதன் பின்னர், நான் அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அவர்கள் அமைக்கட்டும். 9இந்தக் கூடாரத்தையும், அதன் எல்லாத் தளபாடங்களையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்.
உடன்படிக்கைப் பெட்டி
10“அவர்கள் சித்தீம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யவேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாய் இருக்கவேண்டும். 11நீ அந்தப் பெட்டியை, உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடு. அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான வார்ப்படம் ஒன்றைச் செய் 12தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவை ஒரு பக்கத்தில் இரண்டாகவும், மறுபக்கத்தில் இரண்டாகவும் பொருத்தப்பட வேண்டும். 13சித்தீம் மரத்தினால் தடிகளைச் செய்து, அவற்றைச் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடு. 14பெட்டியைச் சுமக்கும்படி, அந்தத் தடிகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் கொழுவி வை. 15பெட்டியின் வளையங்களில் அந்தத் தடிகள் இருக்கவேண்டும். அவை அகற்றப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும். 16நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டிக்குள் வை.
17“சுத்தத் தங்கத்தினால் ஒரு கிருபாசனத்தைச் செய். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருக்க வேண்டும். 18அதன் இரு முனைகளிலும் அடித்த தங்கத்தால் இரு கேருபீன்களைச் செய். 19ஒரு பக்கத்தில் ஒரு கேருபீனையும், மறுபக்கத்தில் இன்னொரு கேருபீனையும் அமைத்து, அவை கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் ஒரே தகடாய் இருக்கும்படி செய்யவேண்டும். 20அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியவாறு மேல் நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கவேண்டும். 21கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வைப்பாயாக. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பிரமாணத்தை#25:21 சாட்சிப் பிரமாணத்தை அல்லது இரண்டு கற்பலகைகள் பெட்டியினுள் வைப்பாயாக. 22அங்கே கிருபாசனத்தின்மேலும் சாட்சிப் பெட்டியின் மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லாக் கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.
மேசை
23“சித்தீம் மரத்தினால் ஒரு மேசையைச் செய். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருக்கவேண்டும். 24அதைச் சுத்தமான தங்கத் தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும், தங்கத்தினாலான வார்ப்படம் ஒன்றைச் செய். 25அத்துடன் அதைச் சுற்றிலும் விரற்கடை#25:25 விரற்கடை – சுமார் 3 அங்குலம் அல்லது 7.5 சென்ரிமீற்றர் அளவு ஒரு சுற்றுச் சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்கத்தினாலான ஒரு வார்ப்படத்தை இணை. 26மேசைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்து. 27மேசையைச் சுமப்பதற்காகப் பாவிக்கப்படும் தடிகளைப் பிடிக்கும்படி, அந்த வளையங்கள் வார்ப்புச் சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். 28அத்தடிகளை சித்தீம் மரத்தால் செய்து, தங்கத் தகட்டால் மூடு. அவற்றினால் இந்த மேசையைச் சுமக்க வேண்டும். 29மேசையின் தட்டுகளையும், கிண்ணங்களையும் சுத்தத் தங்கத்தினால் செய். அத்துடன் பானபலிகளை ஊற்றுவதற்கான சாடிகளையும் கிண்ணங்களையும், தங்கத் தகட்டினால் செய். 30இறைபிரசன்ன அப்பம் எப்போதும் எனக்கு முன்னாக இருக்கும்படி அதை இந்த மேசையின் மேல் வை.
குத்துவிளக்கு
31“சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய். அதன் அடிப்பாகம், தண்டு, பூ வடிவமான கிண்ணங்கள், மொட்டுகள், பூக்கள், அனைத்தும் ஒரே சுத்தத் தங்கத்தை அடித்து செய்யப்பட வேண்டும். 32ஆறு கிளைகள் குத்துவிளக்கின் பக்கங்களிலிருந்து விரிந்து தோன்ற வேண்டும். மூன்று கிளைகள் ஒரு பக்கத்திலும், மூன்று கிளைகள் மறுபக்கத்திலும் இருக்கவேண்டும். 33ஒரு கிளையில் வாதுமை பூக்கள் வடிவமான மூன்று கிண்ணங்கள் அதன் மொட்டுக்களுடனும், மலர்களுடனும் இருக்கவேண்டும். அவ்வாறே அடுத்த கிளையிலும் மூன்று கிண்ணங்கள் இருக்கவேண்டும். இவ்விதமாக அந்த குத்துவிளக்கிலிருந்து விரிந்துபோகும் ஆறு கிளைகளிலும் இருக்கவேண்டும். 34குத்துவிளக்கின் உச்சியில் வாதுமைப் பூக்களைப் போன்ற நான்கு கிண்ணங்கள் அவற்றின் மொட்டுக்களோடும், மலர்களோடும் இருக்கவேண்டும். 35குத்துவிளக்கிலிருந்து விரியும் முதல் சோடிக் கிளைகளுக்குக் கீழே, முதலாவது மொட்டு இருக்கவேண்டும். இரண்டாவது சோடிக் கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டு இருக்கவேண்டும். மூன்றாவது சோடிக் கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டு இருக்கவேண்டும். எல்லாமாக ஆறு கிளைகள் இருக்கவேண்டும். 36மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் சுத்தத் தங்கத்தின் ஒரே தகட்டிலிருந்து அடித்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.
37“பின்பு அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்து, குத்துவிளக்கின் முன் பக்கத்தில் வெளிச்சம் தரக்கூடியதாக, அவற்றை குத்துவிளக்கின் மேல் வை. 38திரிவெட்டிகளும், தட்டுக்களும் சுத்த தங்கத்தினால் செய்யப்பட வேண்டும். 39குத்துவிளக்கையும், அதற்குரிய உபகரணங்கள் யாவற்றையும் செய்ய ஒரு தாலந்து#25:39 ஒரு தாலந்து – சுமார் 34 கிலோ கிராம். சுத்தத் தங்கம் பயன்படுத்தப்பட வேண்டும். 40இங்கே மலைமீது உனக்குக் காண்பிக்கப்பட்ட அதேவிதமாக இவற்றையெல்லாம் செய்யும்படி நீ கவனமாயிரு.