Biểu trưng YouVersion
Biểu tượng Tìm kiếm

The Chosen - தமிழில் (பாகம் 3)Bài mẫu

The Chosen - தமிழில் (பாகம் 3)

NGÀY 4 TRONG 5

நான் ஆத்துமாக்களை இரட்சிக்க வந்துள்ளேன்...

பின்வரும் கதை நான் பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல, ஆனால் இது உங்கள் மனதுடன் பேசக்கூடும் என்பதால் இதை நான் பகிர்வது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறன்..

யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையில் கசப்பு இருந்தது உங்களுக்குத் தெரியும். உண்மையில், எனக்கும் என் சகோதரன் யோவானுக்கும் அவர்கள் மீது எப்போதும் கடுமையான வெறுப்பும் பகையும் இருந்து வந்தது. இயேசு சமாரியாவில் பிரசங்கிக்கவும் நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும் சென்றபோது, ​​​​அவர் சமாரியர்களுக்காக தனது பொன்னான நேரத்தையும் ஆற்றலையும் ஏன் வீணாக்குகிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அவ்வளவு வெறுக்கத்தக்க மனிதர்கள்… எங்களுக்கு விளங்கவே இல்லை! மெலேக்கின் வயல்களில் வேலை செய்யும்படி இயேசு எங்களைக் கட்டளையிட்டபோது, ​​அதற்குப் பின்னால் உள்ள அவருடைய காரணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நாங்கள் இன்னும் சமாரியாவில் இருந்தோம், எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சித்தோம், ஒரு நாள், சில சமாரியர்கள் எங்களை அவமதித்து துப்பினார்கள் - எங்களை மட்டுமல்ல, இயேசுவையும்! எங்கள் இருதயங்கள் கோபத்தால் எரிந்தன, இந்த தகுதியற்ற மக்களை அழிக்க வானத்திலிருந்து அக்கினியை அனுப்பும்படி இயேசுவிடம் கெஞ்சினோம் (லூக்கா 9:51-56). நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம், சமாரியாவுக்கு வருவதற்கான யோசனை ஒரு மோசமான தவறு என்று அவருக்குத் தெரிவிக்கவும் நாங்கள் துணிந்தோம்.

மிகுந்த பொறுமையுடனும் அதிகாரத்துடனும் இயேசு எங்களைத் திருத்தினார், அப்போதுதான் நாங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தோம். கிணற்றுக்கு அருகில் ஃபோட்டீனா என்ற பெண்ணுடன் நடந்த உரையாடல்கள் மற்றும் அவள் இயேசுவைப் பற்றி பலரிடம் சொன்ன விதம் இன்னும் பல தலைமுறைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. நாங்கள் மிகவும் வெறுத்த அந்த சமாரியர்கள், பெரிய அற்புதங்களைக் கூட பார்க்காமல் இயேசுவை நம்பத் தயாராக இருந்தனர்.

யூதர்களாகிய நாங்கள் எப்போதும் சமாரியர்களை விட சிறந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டோம், ஆனால் அன்றைய தினம், நாங்கள் அப்படி இல்லை என்பதை உணர்ந்தோம். இயேசு நம்மை மற்றவர்களை நியாயந்தீர்க்க அழைக்கவில்லை, மாறாக அன்போடும் பணிவோடும் அவர்களுக்கு சேவை செய்யவே அழைத்தார்.

நாங்கள் முன்பு பேசியதை எண்ணி வருந்தினோம், எப்படி அவ்வாறு பேசுவதற்கு துணிந்தோம் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை! என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? நாங்கள் மிகவும் வெட்கப்பட்டோம்… இயேசு எங்களை ஊக்கப்படுத்தினார், மீண்டும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மன்னிக்கப்பட்டதாக உணர்ந்தோம். ஆனால் அன்று "இடிமுழக்க மக்கள்" என்ற அடைமொழியை சம்பாதித்தோம்… கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்கு இது ஒரு நல்ல வழிதான்! :-)

என் பெயர் யாக்கோபு, என் தவறுகளின் நிமித்தம் நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்புள்ள நண்பரே, நீ எப்போதாவது தேவன் அல்லது பிறர் முன்னிலையில் கொதித்தெழுந்து பின்னர் வருந்தியிருக்கிறாயா? ஆண்டவர் உன் சுபாவத்தை மாற்ற கிரியை செய்கிறார், மேலும் ஒவ்வொரு நாளும் உன்னை மென்மேலும் தூய்மைப்படுத்த விரும்புகிறார். உன்னைச் சுற்றியுள்ளவர்களால் நீ "இடிமுழக்கத்தின் மகன்/மகள்" என்று அறியப்படாமல், ஆண்டவரின் பிள்ளையாக அறியப்படுவாய்! :-)

நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Kinh Thánh

Thông tin về Kế hoạch

The Chosen - தமிழில் (பாகம் 3)

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch

More