ஓசியா 9

9
இஸ்ரயேலுக்குத் தண்டனை
1இஸ்ரயேலே, நீ மகிழ்ச்சிகொள்ளாதே;
மற்றைய நாடுகளைப் போல் கொண்டாட வேண்டாம்;
ஏனெனில் நீ உனது இறைவனுக்கு உண்மையற்று இருக்கின்றாய்.
தானியத்தைக் கதிரடிக்கும் அனைத்து களங்களிலும்
உன் முறைகேடான பாலுறவுக்கான கூலியைப் பெற நீ விரும்புகின்றாய்.
2கதிரடிக்கும் களங்களும் திராட்சை ஆலைகளும் மக்களுக்கு உணவளிக்காது;
புதுத் திராட்சைரசம் அவர்களுக்குக் கிடைக்காது.
3இஸ்ரயேலர்கள்#9:3 இஸ்ரயேலர்கள் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கர்த்தரின் நாட்டில்#9:3 நாட்டில் – பலஸ்தீனா நாட்டில் குடியிருக்க மாட்டார்கள்;
எப்பிராயீமியர், எகிப்துக்குத் திரும்பிப் போய்,
அசீரியாவில் அசுத்தமான உணவைச் சாப்பிடுவார்கள்.
4அவர்கள் கர்த்தருக்கு திராட்சைரசக் காணிக்கைகளைச் செலுத்த மாட்டார்கள்;
அவர்களுடைய பலிகள் அவரை மகிழ்விக்காது.
அத்தகைய பலிகள், அவர்களுக்கு துக்க வீட்டு உணவைப் போன்றவை;
அவற்றைச் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் அசுத்தமாயிருப்பார்கள்.
ஏனெனில், இந்த உணவு அவர்களுக்கானதாக மட்டுமே இருக்கும்;
அது கர்த்தரின் ஆலயத்துக்குள் வருவதில்லை.
5கர்த்தரின் பண்டிகை நாட்களிலும்,
நியமிக்கப்பட்ட உங்கள் கொண்டாட்ட நாட்களிலும்
நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
6உங்களில் சிலர் அழிவிலிருந்து தப்பி ஓடினாலும்கூட,
எகிப்து அவர்களை அழிவுக்கு ஒன்றுசேர்க்கும்;
மெம்பிஸ்#9:6 மெம்பிஸ் – இது பண்டைய எகிப்தின் வடக்கு தலைநகரம். அவர்களை அடக்கம் செய்யும்.
அவர்களுடைய வெள்ளியினாலான திரவியங்களை நெரிஞ்சில்கள் மூடும்;
அவர்களுடைய கூடாரத்தையும் முட்செடிகள் மூடும்.
7தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன;
கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன.
இதை இஸ்ரயேல் தெரிவுசெய்யட்டும்.
உனது பாவங்கள் அநேகமாயிருக்கின்றதனாலும்,
உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கின்றதனாலும்
இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான்.
இறைவனின் அகத்தூண்டல் பெற்றவன் புத்திபேதலித்தவனாய் எண்ணப்படுகிறான்.
8இறைவாக்கினன் என் இறைவனுடன்கூட
எப்பிராயீமுக்குக் காவலாளியாய் இருக்கின்றான்.
ஆயினும் அவனுடைய வழிகளிலெல்லாம் கண்ணிப்பொறிகள் காத்திருக்கின்றன;
அவனுடைய இறைவனின் ஆலயத்தில் பகைமை காத்திருக்கிறது.
9கிபெயாவில் நடந்தது போல்,#9:9 கிபெயா நகரில், ஒரு லேவியனின் மறுமனைவிக்கு நடந்த கொடுமையை ஓசியா இங்கு குறிப்பிடுகிறார். நியா. 19:22-30
அவர்கள் சீர்கேட்டில் மூழ்கியிருக்கிறார்கள்.
கர்த்தர் அவர்களின் கொடுமையை நினைவிற்கொண்டு,
அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
10நான் இஸ்ரயேலை முதன் முதல் கண்டபோது,
அது பாலைவனத்தில் திராட்சைப்பழங்களைக்
கண்டுபிடித்தது போல் எனக்கு இருந்தது;
நான் உனது முற்பிதாக்களைக் கண்டபோது,
அது அத்திமரத்தில் அதன் பருவகாலத்தின்
முதல் பழங்களைப் பார்ப்பது போல் இருந்தது.
ஆனால், அவர்கள் பாகால்-பேயோர் மலைக்கு வந்தபோது,
அருவருப்பான பாகால் விக்கிரகத்துக்கு தங்களை அர்ப்பணித்து,
தாங்கள் நேசித்த அந்த விக்கிரகத்தைப் போலவே கேவலமானவர்களானார்கள்.
11எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப் போல் பறந்தோடிவிடும்;
அவர்களுக்குள் பிறப்போ, கருவில் சுமப்பதோ,
அல்லது கருத்தரிப்பதோ இல்லை.
12அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும்கூட,
நான் அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்கள் இழக்கும்படியாக செய்வேன்.
நான் அவர்களைவிட்டு விலகும்போது,
அவர்களுக்கு ஐயோ பேரழிவு!
13இன்பமான இடத்தில் அமைந்திருக்கும் தீரு நாட்டைப் போல்,
நான் எப்பிராயீமைக் கண்டேன்.
ஆனால், எப்பிராயீம் தன் பிள்ளைகள்
கொலை செய்யப்படும்படியாக அவர்களை போருக்கு#9:13 போருக்கு – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அனுப்பி வைப்பான்.
14கர்த்தரே, அவர்களுக்கு எதைக் கொடுப்பீர்?
கருச்சிதைவு உண்டாகும் கர்ப்பப்பைகளையும்,
பால் சுரக்க முடியாத மார்பகங்களையும்
அவர்களுக்குக் கொடுப்பீராக!
15“கில்கால் நகரத்தில் அவர்கள் செய்த கொடுமைக்காக
அங்கே நான் அவர்களை வெறுத்தேன்.
அவர்களுடைய பாவச் செயல்களின் பொருட்டு,
நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன்.
நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்க மாட்டேன்,
அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள்.
16எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்,
அவர்களின் வேர் உலர்ந்து போயிற்று;
இனிமேல் அவர்கள் கனி கொடுப்பதில்லை.
அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,
அவர்களுடைய அருமையான சந்ததியினரை நான் கொன்றுவிடுவேன்.”
17என் இறைவன் அவர்களைத் தள்ளி விடுவார்,
ஏனெனில் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை;
அவர்கள் பிறநாடுகளுக்குள்ளே அலைந்து திரிகிறவர்களாயிருப்பார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஓசியா 9: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்