ஓசியா 10
10
1இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி,
அது தனக்கென கனி கொடுக்கின்றது.
அவனுடைய கனிகள் பெருகியபோது,
அதற்கேற்றபடி மிகுதியான பலிபீடங்களை தெய்வங்களுக்காகக் கட்டினான்.
அவனுடைய நாடு செழித்தபோது,
தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான்.
2அவர்களின் இருதயம் வஞ்சனையுள்ளது.
இப்போது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.
கர்த்தர் அவர்களுடைய பலிபீடங்களை இடித்து,
புனிதக் கற்களை அழித்துப் போடுவார்.
3அப்போது அவர்கள், “நாங்கள் கர்த்தரிடம் பயபக்தியாய் இராதபடியால்,
எங்களுக்கு அரசன் இல்லை;
அரசன் இருந்தாலும்
அவனால் எங்களுக்காக என்ன செய்ய முடியும்?”
எனச் சொல்லிக்கொள்வார்கள்.
4அவர்கள் அநேக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றார்கள்,
பொய்யான ஆணைகளையும்
ஒப்பந்தங்களையும் செய்கின்றார்கள்;
எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப் போல்
வழக்குகள் தோன்றுகின்றன.
5சமாரியா பட்டணத்தில் வாழ்கிற மக்கள்,
பெத்-ஆவெனில் இருக்கின்ற கன்று விக்கிரகத்துக்குப் பயப்படுகிறார்கள்.
அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு
நாடுகடத்தப்படும்.
அதன் மக்கள் அதற்காகத் துக்கம் அனுஷ்டிப்பார்கள்;
அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கம் அனுஷ்டிப்பார்கள்.
6அந்த விக்கிரகம் அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக
அங்கு கொண்டுபோகப்படும்.
அதைக் குறித்து எப்பிராயீம் அவமானமடையும்.
இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.
7சமாரியாவும் அதன் அரசனும்
தண்ணீரில் மிதக்கும் குச்சியைப் போல் அள்ளுண்டு போவார்கள்.
8இஸ்ரயேலர் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட உயரமான இடங்கள் அழிக்கப்படும்;
இதுவே இஸ்ரயேலின் பாவம்#10:8 அல்லது இஸ்ரயேலர்கள் ஆவெனில் விக்கிரகங்களை வழிபட்டு, பாவம் செய்த, பிற தெய்வ வழிபாட்டு தளங்கள் அழிக்கப்படும்..
முட்செடிகளும் நெருஞ்சிகளும் வளர்ந்து
அதன் பலிபீடங்களை மூடும்.
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும்,
குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள்.
9இஸ்ரயேலே, கிபெயாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்;
அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய்.
கிபெயாவிலே தீமை செய்தவர்கள்மீது
யுத்தம் வரவில்லையோ?
10ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்;
உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென,
பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும்.
11எப்பிராயீம் கதிரடிக்க விரும்புகின்ற
பயிற்றுவிக்கப்பட்ட இளம் பசு.
நான் அதன் கழுத்தின்மீது சுமையை வைக்கவில்லை.
ஆனால் இப்போது நான் அதன் அழகான கழுத்தின்மீது ஒரு நுகத்தை வைப்பேன்.
நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்;
யூதாவும் நிலத்தை உழவேண்டும்,
யாக்கோபின் அனைத்து மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்க வேண்டும்.
12உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல் போல் கடினமாயிருக்கிறதே;
ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள்,
நிலையான அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள்.
உழவு செய்யப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள்,
ஏனெனில் கர்த்தர் வந்து உங்கள்மீது நியாயத்தை பொழியும் வரைக்கும்
இது கர்த்தரைத் தேடும் காலமாயிருக்கிறது.
13ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள்,
தீமையை அறுவடை செய்தீர்கள்,
வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள்.
ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பலத்திலும்,
உங்கள் அநேக போர்வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள்.
14அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்,
உங்கள் கோட்டைகளெல்லாம் அழிக்கப்படும்.
பெத்-ஆபேல் பட்டணத்தை சல்மான் அரசன் யுத்தத்தில் அழித்தபோது,
தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் தரையில் மோதி அடிக்கப்பட்டார்கள்;
அதைப் போன்றே இதுவும் இருக்கும்.
15பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால்
உனக்கு இவ்வாறு நடக்கும்.
அந்தநாள் உதயமாகின்றபோது,
இஸ்ரயேலின் அரசன் முற்றிலும் அழிக்கப்படுவான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஓசியா 10: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.