ஓசியா 5
5
இஸ்ரயேலுக்கு எதிராக இறைவனின் நியாயத்தீர்ப்பு
1“மதகுருக்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்;
இஸ்ரயேல் வீட்டாரே கவனியுங்கள்;
அரச குடும்பத்தாரே, செவிசாயுங்கள்;
இந்த நியாயத்தீர்ப்பு உங்களுக்கெதிரானதே.
ஏனெனில் நீங்கள் மிஸ்பாவிலே கண்ணிப்பொறியாகவும்,
தாபோர் மலையிலே விரிக்கப்பட்ட வலையாகவும்#5:1 வலையாகவும் – மக்களை பாவத்தில் சிக்கவைப்பதற்கான வலையாக. இருக்கின்றீர்கள்.
2கலகக்காரர்கள் கொலை செய்வதில் வேரூன்றி இருக்கின்றார்கள்.
நான் அவர்கள் எல்லோரையும் தண்டித்துத் திருத்துவேன்.
3எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்;
இஸ்ரயேலும் என்னிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
ஏனெனில் எப்பிராயீமே, நீ இப்போது தகாத உறவுக்குத் திரும்பிவிட்டாய்;
இஸ்ரயேல் கறைப்பட்டிருக்கிறது.
4“அவர்களுடைய செயல்கள்
அவர்களுடைய இறைவனிடம் அவர்கள் திரும்புவதற்கு விடாதிருக்கின்றன.
தகாத உறவின் ஆவி அவர்களின் இருதயத்தில் இருக்கின்றது;
கர்த்தரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
5இஸ்ரயேலின் அகந்தை அவர்களுக்கெதிராக சாட்சி கூறுகிறது;
இஸ்ரயேலும் எப்பிராயீமும் தங்கள் பாவத்தில் இடறி விழுகிறார்கள்;
அவர்களுடன் யூதாவும் இடறி விழுகிறது.
6அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும்
கர்த்தரைத் தேடிப் பலியிட வருவார்கள்;
ஆனால் அவர்கள் அவரைக் காண மாட்டார்கள்;
ஏனெனில் அவர் அவர்களைவிட்டு விலகினார்.
7அவர்கள் கர்த்தருக்கு நம்பகமற்றவர்களாய் இருந்து
அந்நிய பிள்ளைகளைப் பெற்றார்கள்.
இப்போதும் அவர்களுடைய மாதப்பிறப்புக் கொண்டாட்டங்கள்
அவர்களையும் அவர்களுடைய வயல்களையும் விழுங்கிவிடும்.
8“கிபெயா நகரத்தில் எக்காளத்தையும்,
ராமா நகரத்தில் கொம்பு வாத்தியத்தையும் ஊதுங்கள்.
பெத்-ஆவென் நகரத்தில் போர் முழக்கமிடுங்கள்;
பென்யமீனே, நீ முன்னேசெல்.
9தண்டனை வழங்கப்படும் நாளில்
எப்பிராயீம் பாழாய் விடப்படும்.
நிச்சயமாய் நடக்கப் போகின்றதையே,
நான் இஸ்ரயேல் கோத்திரங்கள் மத்தியில் பிரசித்தப்படுத்துகிறேன்.
10யூதாவின் தலைவர்கள்
எல்லைக் கற்களை நகர்த்துகிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
என் கோபத்தை வெள்ளத்தைப் போல்
அவர்கள்மீது ஊற்றுவேன்.
11எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு,
நியாயத்தீர்ப்பில் நசுக்கப்படுவான்.
ஏனெனில் அவன் விக்கிரகங்களைப் பின்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறான்.
12அதனால் நான் எப்பிராயீமுக்கு அந்துப்பூச்சியைப் போலவும்,
யூதாவின் வீட்டாருக்கு அழுகல் நோயைப் போலவும் இருப்பேன்.
13“எப்பிராயீம் தன் வியாதியையும்,
யூதா தன் புண்களையும் கண்டபோது,
எப்பிராயீம் அசீரியாவின் பக்கம் திரும்பி,
அதன் பேரரசனிடம் உதவி கேட்டனுப்பினான்.
ஆனால் உன்னைக் குணமாக்கவும்
உனது புண்களை ஆற்றவும் அவனால் முடியாது.
14ஏனெனில் எப்பிராயீமுக்கு நான் சிங்கத்தைப் போலவும்,
யூதாவுக்கு பெருஞ்சிங்கத்தைப் போலவும் இருப்பேன்.
நான் அவர்களை துண்டுகளாகக் கிழித்து தூக்கிக்கொண்டு போவேன்;
ஒருவரும் அவர்களைத் தப்புவிக்க மாட்டார்கள்.
15எனவே அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு,
என் முகத்தைத் தேடும் வரை
நான் என்னுடைய இருப்பிடத்துக்குத் திரும்பிப் போவேன்.
அவர்கள் தங்கள் அவலத்தில்
என்னை வாஞ்சையாய்த் தேடுவார்கள்.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஓசியா 5: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.