யாத்திராகமம் 28
28
மதகுருக்களின் ஆடைகள்
1“மதகுருக்களாக எனக்குப் பணிபுரியும்படி, உன் சகோதரன் ஆரோனையும், அவன் மகன்மாரான நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரையும் இஸ்ரயேலரிடையேயிருந்து உன்னிடம் அழைத்துக்கொள். 2உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மாண்பும், மதிப்பும், கொடுக்கும்படி அவனுக்குப் பரிசுத்த ஆடைகளைத் தயாரித்துக் கொள்வாயாக. 3இவ்வித காரியங்களில், நான் ஞானத்தைக் கொடுத்திருக்கும் அனைத்து கைவினைஞர்களிடமும் நீ பேசு. ஆரோன் மதகுருவாக எனக்கு ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்துவதற்காக அவனுக்கான ஆடைகளைத் தயாரித்துக் கொள்ளும்படி அவர்களுக்குச் சொல். 4அவர்கள் தயாரிக்க வேண்டிய ஆடைகள்: ஒரு மார்பணி, ஒரு ஏபோத், ஒரு மேலங்கி, ஒரு நெய்யப்பட்ட உள்ளங்கி, ஒரு தலைப்பாகை, ஒரு இடைப்பட்டி ஆகியவையே.#28:4 கர்த்தருக்குப் பணி செய்யும்போது தலைமை மதகுரு அணியவேண்டிய ஆடைகள் உன் சகோதரன் ஆரோனும், அவன் மகன்மாரும் எனக்கு மதகுருக்களாக ஊழியம் செய்யும்படி, இந்த பரிசுத்த ஆடைகளை அவர்கள் தயாரிக்க வேண்டும். 5இதற்கு அந்தக் கைவினைஞர்கள் தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு நூல்களை உபயோகிக்க வேண்டும்.
ஏபோத்
6“அவர்கள் ஏபோத்தை தங்கத்தையும், நீல நூலையும், ஊதா நூலையும், கருஞ்சிவப்பு நூலையும், திரிக்கப்பட்ட மென்பட்டையும்கொண்டு கைவினையான வேலைப்பாடாய் தயாரிக்கட்டும். 7அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரு முனைகளிலும் உள்ள தோள்பட்டிகள் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும். 8திறமையாக நெய்யப்பட்ட அதன் இடைப்பட்டியும் அதைப் போலவே இருக்கவேண்டும். அது ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றால் செய்யப்பட வேண்டும்.
9“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து அவற்றில் இஸ்ரயேலின் மகன்மாரின் பெயர்களைச் செதுக்கு. 10அவர்களின் பிறப்பின் வரிசைபடி ஆறு மகன்மாரின் பெயர்கள் ஒரு கல்லிலும், மற்றைய ஆறு மகன்மாரின் பெயர்கள் மறு கல்லிலும் செதுக்கப்பட வேண்டும். 11இரத்தினங்களில் முத்திரை வெட்டுச் செய்வது போல், அந்த இரு கற்களிலும் இஸ்ரயேலின் மகன்மாரின் பெயர்களைச் செதுக்கி வைப்பாயாக. பின்பு அக்கற்களை தங்கச் சரிகை வேலைப்பாடுகளில் பதிக்க வேண்டும். 12அவற்றை ஏபோத்தின் தோள்பட்டிகளில் பொருத்தி, அவற்றை இஸ்ரயேலின் மகன்மாரின் ஞாபகார்த்தக் கற்களாக வைப்பாயாக. ஆரோன் இந்தப் பெயர்களை#28:12 இந்தப் பெயர்களை – இஸ்ரயேலின் 12 மகன்மாரின் பெயர்களை கர்த்தருக்கு முன்பாக ஒரு ஞாபகார்த்தமாய் தன் தோள்களில் சுமக்க வேண்டும் 13தங்கச் சரிகை வேலைப்பாடுகளைச் செய்து, 14அத்துடன் சுத்தத் தங்கத்தினால் கயிற்றைப் போன்று பின்னப்பட்ட இரு சங்கிலிகளையும் செய்து, அவற்றை அச்சரிகை வேலைப்பாட்டுடன் தொடுத்துக்கொள்.
மார்பணி
15“திறமையான கைவினைஞனின் வேலைப்பாடாக தீர்மானங்கள் எடுப்பதற்கான ஒரு மார்பணியைச் செய்வாயாக. அதையும் ஏபோத்தைப் போலவே செய்வாயாக. தங்கம், நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அதைச் செய்யவேண்டும். 16அந்த மார்பணி ஒரு சாண்#28:16 ஒரு சாண் – 9 அங்குலம் அல்லது 23 சென்ரிமீற்றர் நீளம், ஒரு சாண் அகலம் கொண்ட ஒரு சதுரமாகவும், இரண்டாய் மடிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். 17அதன்மேல் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதிக்க வேண்டும். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம், 18இரண்டாம் வரிசையில் மரகதம், நீல மாணிக்கம், வைரம், 19மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி 20நான்காம் வரிசையில் புஷ்பராகம், கோமேதகம், யஸ்பி ஆகியன இருக்கும்படி, அவற்றைத் தங்கச் சரிகை வேலைப்பாடாகப் பதித்து வைப்பாயாக. 21இஸ்ரயேலின் மகன்மாரின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கல்லாக, பன்னிரண்டு கற்கள் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களின் ஒவ்வொரு பெயரும் முத்திரை போல் செதுக்கப்பட வேண்டும்.
22“மார்பணிக்கு சுத்தத் தங்கத்தாலான கயிற்றைப் போன்ற பின்னப்பட்ட சங்கிலிகளைச் சுத்தத் தங்கத்தினால் செய். 23அதற்காக இரண்டு தங்க வளையங்களைச் செய்து மார்பணியின் இரண்டு மூலைகளிலும் பொருத்து. 24அந்த இரு தங்கச் சங்கிலிகளையும் மார்பணியின் மூலைகளிலுள்ள இரு வளையங்களோடு தொடுத்து, 25சங்கிலிகளின் மற்றைய இரு முனைகளையும் ஏபோத்தின் முன்புறத்தில் உள்ள தோள்பட்டிகளுடன் இணைந்திருக்கும் சரிகை வேலைப்பாடுகளுடன் தொடுக்க வேண்டும். 26ஏபோத்துடன் ஒட்டியிருக்கும் மார்பணியின் உட்புற விளிம்புகளின் இரு மூலைகளையும் தொடுக்கும்படி இரண்டு தங்க வளையங்களைச் செய்வாயாக. 27ஏபோத்திலுள்ள இடைப்பட்டிக்கு மேலாக உள்ள இணைப்புக்குச் சமீபமாய், ஏபோத்தின் முன்புறத்தில் இருக்கின்ற தோள்பட்டிகளின் அடிப்பக்கத்தை தொடுக்கும்படி, வேறு இரு தங்க வளையங்களைச் செய்வாயாக. 28மார்பணி திறமையாக நெய்யப்பட்ட ஏபோத்தில் இருந்து விலகாதபடி, அதை இடைப்பட்டியுடன் இணைத்து, மார்பணியின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களுடன் நீல நிற நாடாவினால் இணைத்துக் கட்டவேண்டும்.
29“ஆரோன் பரிசுத்த இடத்துக்குள் போகும்போதெல்லாம், இஸ்ரயேலின் மகன்மாரின் பெயர்களை தன் இருதயத்துக்கு மேலுள்ள தீர்மானத்துக்கான மார்பணியின்மேல் நிரந்தரமான ஒரு ஞாபகச் சின்னமாக, கர்த்தருக்கு முன்பாக சுமப்பான். 30கர்த்தர் முன்பாக ஆரோன் வரும்போதெல்லாம், அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கும்படி ஊரீம், தும்மீம்#28:30 ஊரீம், தும்மீம் – அநேகமாக இவை கற்களாக இருக்கலாம். இறைவனின் விருப்பத்தை அறிந்துகொள்ள மதகுருக்கள் இதைப் பயன்படுத்தினர். ஆகியவற்றை அந்த மார்பணியில் வைக்கவேண்டும். இவ்வாறு ஆரோன் இஸ்ரயேலருக்கான தீர்மானங்களைச் செய்யும் சின்னங்களை எப்போதும் கர்த்தர் முன்னிலையில் தன் இருதயத்துக்கு மேல் சுமப்பான்.
மற்றைய குருத்துவ உடைகள்
31“ஏபோத்தின் அங்கியை#28:31 ஏபோத்தின் அங்கியை – ஏபோத்தின் உள்ளே அணியும் அங்கி நீல நிறத் துணியினால் தயாரிப்பாயாக. 32அதன் நடுப்பகுதியில் தலை நுழைவதற்கான திறப்பு இருக்கவேண்டும். அத்திறப்பு கிழிந்து போகாதபடி, அதைச் சுற்றிலும் பட்டியைப் போன்ற ஒரு நெய்யப்பட்ட ஓரம் இருக்கவேண்டும். 33அங்கியின் கீழ் ஓரத்தைச் சுற்றிலும் நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் மாதுளம் பழங்களைச் செய்து, அவற்றுக்கு இடையிடையே தங்க மணிகளைத் தொங்கவிட்டு, 34அங்கியின் கீழ் ஓரத்தைச் சுற்றிலும் தங்க மணியும், மாதுளம் பழமுமாக மாறிமாறித் தொங்கவிட வேண்டும். 35ஆரோன் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்த இடத்துக்குள் போகும்போதும் அங்கிருந்து வரும்போதும், அவன் மரணிக்காதபடி தன் குருத்துவ ஊழியத்தின்போது, மணியின் சத்தம் கேட்கும்படி இந்த அங்கியை அணிந்திருக்க வேண்டும்.
36“சுத்தத் தங்கத்தினால் ஒரு தகட்டை நீ செய்து அதில்,
‘கர்த்தருக்குப் பரிசுத்தம்’
என்று ஒரு அடையாள முத்திரை போல் செதுக்க வேண்டும்.
37அது தலைப்பாகையின் முன் பக்கத்தில் இருக்கும்படி, அதைத் தலைப்பாகையோடு நீல நிற நாடாவினால் இணைப்பாயாக. 38அது ஆரோனுடைய நெற்றியில் இருக்கவேண்டும். இஸ்ரயேலர் அர்ப்பணிக்கும் பரிசுத்த கொடைகள் எதுவானாலும், அத்துடன் தொடர்புள்ள குற்றத்தை அவன் சுமப்பான். அக்கொடைகள் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அந்தத் தகடு அவனுடைய நெற்றியின்மேல் எப்பொழுதும் காணப்படும்.
39“மென்பட்டு நூலினால் உள் அங்கியை நெய்து, மென்பட்டினால் தலைப்பாகையையும் தயாரித்துக் கொள்வாயாக. இடைப்பட்டி ஊசியால் செய்யப்பட்ட பூத் தையல் வேலையாக இருக்கவேண்டும். 40ஆரோனுடைய மகன்மாருக்கு மாண்பையும் மதிப்பையும் கொடுப்பதற்கு அவர்களுக்கும் உள் அங்கிகளையும், இடைப்பட்டிகளையும், அத்துடன் தலைப்பாகைளையும் தயாரித்துக் கொள்வாயாக. 41நீ அந்த உடைகளை உன் சகோதரன் ஆரோனுக்கும், அவன் மகன்மாருக்கும் அணிவித்தபின், அவர்களை அபிஷேகித்து நியமனம் செய்வாயாக. அவர்கள் எனக்கு மதகுருக்களாக ஊழியம் செய்யும்படி, அவர்களை பரிசுத்தப்படுத்து.
42“அவர்களுடைய உடலை மூடுவதற்கான உள்ளாடைகளை மென்பட்டினால் தயாரித்துக் கொள்வாயாக. அவை இடுப்பிலிருந்து தொடைவரை இருக்கவேண்டும். 43ஆரோனும், அவன் மகன்மாரும் இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் போகும்போதோ, அல்லது பரிசுத்த இடத்தில் குருத்துவ ஊழியம் செய்யும்படி பலிபீடத்தை நெருங்கும்போதோ, குற்றம் உள்ளவர்களாகி மரணிக்காதபடி, அவற்றை அணிந்திருக்க வேண்டும்.
“இது ஆரோனுக்கும், அவன் பின்னால் வரும் அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யாத்திராகமம் 28: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.