எண் 14
14
அத்தியாயம் 14
மக்கள் கலகம் செய்தல்
1அப்பொழுது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; மக்கள் அன்று இரவுமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். 2இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லோரும் அவர்களை நோக்கி: “எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாக இருக்கும்; இந்த வனாந்திரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். 3நாங்கள் பட்டயத்தால் மடியும்படியும், எங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படியும், யெகோவா எங்களை இந்த தேசத்திற்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்திற்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ” என்றார்கள். 4பின்பு அவர்கள்: “நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 5அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். 6தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, 7இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். 8யெகோவா நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். 9யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள். 10அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லோரும் சொன்னார்கள்; உடனே யெகோவாவுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது. 11யெகோவா மோசேயை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மக்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை நம்பாமலிருப்பீர்கள்? 12நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, கானானில் அவர்களுக்குரியதை வெளியே தள்ளி, அவர்களைவிட உன்னைப் பெரிதும் பலத்ததுமான தேசமாக்குவேன் என்றார். 13மோசே யெகோவாவை நோக்கி: “எகிப்தியர்கள் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த மக்களைக் கொண்டுவந்தீரே. 14யெகோவாவாகிய நீர் இந்த மக்களின் நடுவே இருக்கிறதையும், யெகோவாவாகிய நீர் முகமுகமாகத் தரிசனமாவதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்பதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன்பு செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். 15ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த மக்களையெல்லாம் நீர் கொன்று போட்டால், அப்பொழுது உம்முடைய புகழைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: 16யெகோவா அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. 17ஆகையால் யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, 18என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக. 19உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த மக்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த மக்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். 20அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன். 21பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 22என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும், 23அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். 24என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 25அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்திற்குப்போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பயணம்செய்யுங்கள்” என்றார். 26பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 27“எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன். 28நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார். 29இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். 30எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நுழைவதில்லை. 31கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்களுடைய குழந்தைகளையோ நான் அதில் நுழையச் செய்வேன்; நீங்கள் அசட்டைசெய்த தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். 32உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும். 33அவைகள் வனாந்திரத்திலே விழுந்து தீரும்வரை, உங்களுடைய பிள்ளைகள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே திரிந்து, நீங்கள் செய்த கலகங்களின் பலனைச் சுமப்பார்கள். 34நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். 35யெகோவாவாகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்திரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். 36அந்தத் தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்தத் தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, 37சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். 38தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள். 39மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னபோது, மக்கள் மிகவும் துக்கித்தார்கள். 40அதிகாலையில் அவர்கள் எழுந்து: “நாங்கள் பாவம்செய்தோம், யெகோவா வாக்குத்தத்தம்செய்த இடத்திற்கு நாங்கள் போவோம்” என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். 41மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படி யெகோவாவின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. 42நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாமலிருங்கள்; யெகோவா உங்களுடைய நடுவில் இருக்கமாட்டார். 43அமலேக்கியர்களும் கானானியர்களும் அங்கே உங்களுக்கு முன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் யெகோவா வை விட்டுப் பின்வாங்கினபடியால், யெகோவா உங்களோடு இருக்கமாட்டார்” என்றான். 44ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் முகாமை விட்டுப்போகவில்லை. 45அப்பொழுது அமலேக்கியர்களும் கானானியர்களும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறியடித்து, அவர்களை ஓர்மாவரை துரத்தினார்கள்.
اکنون انتخاب شده:
எண் 14: IRVTam
هایلایت
به اشتراک گذاشتن
مقایسه
کپی
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.