யோசு 3

3
அத்தியாயம் 3
யோர்தானைக் கடந்துபோகுதல்
1அதிகாலையிலே யோசுவா எழுந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சித்தீமிலிருந்து பயணம்செய்து, யோர்தான்வரைக்கும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இரவு தங்கினார்கள். 2மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய், 3மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள். 4உங்களுக்கும் அதற்கும் 3,000 அடிகள் தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். 5யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் யெகோவா உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். 6பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள். 7யெகோவா யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். 8உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தான் நதியில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். 9யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய யெகோவாடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். 10பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: 11இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. 12இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். 13சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். 14மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள். 15யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, 16மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். 17எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.

اکنون انتخاب شده:

யோசு 3: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید