யோபு 5
5
அத்தியாயம் 5
1“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்?
பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
2கோபம் மூடனைக் கொல்லும்;
பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
3மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு
உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி,
காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
5பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்;
பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
6தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை;
வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,
மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
8ஆனாலும் நான் தேவனை நாடி,
என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத
அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து,
துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
11அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து,
வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க,
அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
13அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்;
தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
14அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி,
மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
15ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும்,
பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
16அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு;
தீமையானது தன் வாயை மூடும்.
17இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்;
ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
18அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்;
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்;
ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும்,
போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்;
அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
22அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்;
காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
23வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்;
வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
24உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்;
உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது
குறைவைக் காணமாட்டீர்.
25உம்முடைய சந்ததி பெருகி,
உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
26தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல,
முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்;
காரியம் இப்படியிருக்கிறது;
இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
اکنون انتخاب شده:
யோபு 5: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.