யோபு 6

6
அத்தியாயம் 6
யோபுவின் வார்த்தைகள்
1யோபு மறுமொழியாக:
2“என் பிரச்சனைகளும்,
துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும்.
3அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்;
ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது;
அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது;
தேவனால் உண்டாகும் பயங்கரங்கள்
எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.
5புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ?
தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ?
முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
7உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது;
அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது.
8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு,
நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து,
9தேவன் என்னை நொறுக்க விரும்பி,
தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்.
10அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே;
அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால்
உணர்வில்லாமல் இருப்பேன்;
பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை,
அவர் என்னைக் கைவிடமாட்டார்.
11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்?
என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது?
12என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ?
உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே.
14உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்;
அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
15என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,
அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
17வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி,
சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன.
18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்;
அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும்.
19தேமாவின் பயணக்காரர் தேடி,
சேபாவின் பயணக்கூட்டங்கள்
அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்;
அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள்.
21அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்;
என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
22எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும்,
உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;
23அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள்,
கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
24எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்;
நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
25உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு?
உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து,
நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து,
உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
28இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்;
அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
29நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்;
அநீதி காணப்படாதிருக்கும்;
திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
30என் நாவிலே அநீதி உண்டோ?
என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?

اکنون انتخاب شده:

யோபு 6: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید