2 சாமு 16

16
அத்தியாயம் 16
தாவீதும் சீபாவும்
1தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது. 2ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான். 3அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான். 4அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
சீமேயி தாவீதை சபித்தல்
5தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து, 6எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான். 7சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. 8சவுலின் இடத்தில் ராஜாவான உன்மேல் யெகோவா சவுல் குடும்பத்தார்களின் இரத்தப்பழியைத் திரும்பச் செய்வார்; யெகோவா ராஜ்ஜியபாரத்தை உன்னுடைய மகனான அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன்னுடைய அக்கிரமத்தில் சிக்கிக்கொண்டாய்; நீ இரத்தப்பிரியனான மனிதன் என்றான். 9அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான். 10அதற்கு ராஜா: செருயாவின் மகன்களே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை சபிக்கட்டும்; தாவீதை சபிக்கவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பவன் யார் என்றான். 11பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 12ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான். 13அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான். 14ராஜாவும் அவனோடு இருந்த எல்லா மக்களும் களைத்தவர்களாக, தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
அகித்தோப்பேல் மற்றும் ஊசாயின் ஆலோசனை
15அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள். 16அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான். 17அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான். 18அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, யெகோவாவும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன். 19இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான். 20அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான். 21அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான். 22அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான். 23அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

اکنون انتخاب شده:

2 சாமு 16: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید