2 சாமு 15
15
அத்தியாயம் 15
அப்சலோமின் சதி
1இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன்பாக ஓட ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான். 2மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, யாராவது தன்னிடம் இருக்கிற வழக்குக்காக ராஜாவிடம் நியாயம் கேட்பதற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றின், இந்த ஊரைச் சேர்ந்தவன் என்று சொன்னால், 3அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன்னுடைய வழக்கு நேர்மையும் நியாயமுமாக இருக்கிறது; ஆனாலும் ராஜாவிடம் உன்னுடைய வழக்கை விசாரிப்பவர்கள் ஒருவரும் இல்லை என்பான். 4பின்னும் அப்சலோம்: சிக்கலான வழக்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படி, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாக இருக்கும் என்பான். 5யாராவது ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தழுவி முத்தம் செய்வான். 6இப்படியாக அப்சலோம், ராஜாவிடம் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதர்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான். 7நாற்பது வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் யெகோவாவுக்கு செய்த என்னுடைய பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படி நான் போக அனுமதிகொடும். 8யெகோவா என்னை எருசலேமிற்குத் திரும்பி வரச்செய்தால், யெகோவாவுக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கெசூரில் குடியிருக்கும்போது, பொருத்தனை செய்தேன் என்றான். 9அதற்கு ராஜா, சமாதானத்தோடு போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான். 10அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் உளவாளிகளை அனுப்பி, நீங்கள் எக்காளச் சத்தத்தைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான். 11எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட 200 பேர் அப்சலோமோடு போனார்கள்; அவர்கள் வஞ்சகம் இல்லாமல் ஒன்றும் அறியாமற்போனார்கள்.
தாவீது பயந்தோடுதல்
12அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனான அகித்தோப்பேல் என்னும் கிலோனியனையும் அவன் ஊரான கீலோவிலிருந்து வரவழைத்தான்; அப்படியே கட்டுப்பாடு பெலத்து, மக்கள் அப்சலோமிடம் திரளாக வந்து கூடினார்கள். 13அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதிடம் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைச் சார்ந்துப்போகிறது என்றான். 14அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்தில் உள்ள தன்னுடைய எல்லா வேலைக்காரர்களையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் விரைவாக நம்மிடம் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் தீங்கு வரச்செய்து, நகரத்தைக் கூர்மையான பட்டயத்தால் அழிக்காதபடி விரைவாகப் புறப்படுங்கள் என்றான். 15ராஜாவின் வேலைக்காரர்கள் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவான எங்கள் ஆண்டவன் கட்டளைகளை எல்லாம் செய்ய உமது அடியார்களான நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்கள். 16அப்படியே ராஜாவும் அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் கால்நடையாகப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளான பத்து பெண்களை வைத்தான். 17ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள். 18அவனுடைய வேலைக்காரர்கள் எல்லாரும், கிரேத்தியர்கள் யாவரும், பிலேத்தியர்கள் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாக வந்த அறுநூறுபேர்களான கித்தியர்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள். 19அப்பொழுது ராஜா, கித்தியனான ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடன் ஏன் வருகிறாய்? நீ திரும்பிப்போய், ராஜாவுடன் இரு; நீ அந்நிய தேசத்தை சேர்ந்தவன்; நீ உன்னுடைய இடத்திற்குத் திரும்பிப் போகலாம். 20நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடு நடந்துவரும்படி அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகவேண்டிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன்னுடைய சகோதரர்களையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடு இருப்பதாக என்றான். 21ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக: ராஜாவான என்னுடைய ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று யெகோவாவுடைய ஜீவனையும் ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான். 22அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனான ஈத்தாயும் அவனுடைய எல்லா மனிதர்களும் அவனோடு இருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள். 23அனைத்து மக்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார்கள் எல்லோரும் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; மக்கள் எல்லோரும் வனாந்திரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள். 24சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடு இருந்து சுமக்கிற எல்லா லேவியர்களும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; மக்கள் எல்லோரும் நகரத்திலிருந்து கடந்துபோகும்வரை, அபியத்தார் அங்கேயே இருந்தான். 25ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; யெகோவாவுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார். 26அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்று சொன்னால், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான். 27பின்னும் ராஜா ஆசாரியனான சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடு நகரத்திற்குத் திரும்பு; உன்னுடைய மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமான உங்கள் மகன்கள் இரண்டுபேர்களும் உங்களோடு திரும்பிப் போகட்டும். 28எனக்கு அறிவிப்பதற்கு உங்களிடமிருந்து செய்தி வரும்வரை, நான் வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கியிருப்பேன் என்றான். 29அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள். 30தாவீது தன்னுடைய முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடு இருந்த எல்லா மக்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள். 31அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான். 32தாவீது மலையின் உச்சிவரை வந்து, அங்கே தேவனைத் தொழுதுகொண்டபோது, இதோ, அற்கியனான ஊசாய் தன்னுடைய ஆடையைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாக அவனுக்கு எதிராக வந்தான். 33தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடு நடந்துவந்தால் எனக்குப் பாரமாக இருப்பாய். 34நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய வேலைக்காரனாக இருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு வேலைக்காரனாக இருந்தேன்; இப்போது நான் உமக்கு வேலைக்காரன் என்று சொன்னால், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை பயனற்றுப் போகும்படிச் செய்வாய். 35உன்னோடு அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ஏதேனும் செய்தியை கேள்விப்பட்டால், அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு தெரியப்படுத்து. 36அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்களுடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் மூலமாக எனக்கு அனுப்புங்கள் என்றான். 37அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் எருசலேமுக்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான்.
اکنون انتخاب شده:
2 சாமு 15: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.