யாத்திராகமம் 10
10
எட்டாம் வாதையாகிய வெட்டுக்கிளி
1அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் என்னுடைய இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காக அவன் இருதயத்தையும், அவன் அலுவலர்களுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன். 2மேலும், நான் எவ்வாறு எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எவ்வாறு என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லி, நானே கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படி இப்படிச் செய்தேன்” என்றார்.
3எனவே, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் அவனிடம், “எபிரேயரின் இறைவனாகிய கர்த்தர் சொல்வது இதுவே: நீ எவ்வளவு காலத்துக்கு எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போக விடு. 4நீ அவர்களைப் போகவிட மறுத்தால், நாளைக்கு உன் நாட்டுக்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டுவருவேன். 5அவை நிலம் தெரியாதபடி தரையின் மேற்பரப்பு முழுவதையும் மூடும். அவை ஆலங்கட்டிக்குத் தப்பியிருக்கும் தாவரங்களையும், வயல்வெளியில் முளைக்கும் அனைத்து மரங்களையும் தின்றுவிடும். 6அவை, உன் தந்தையரும் முற்பிதாக்களும் இங்கு குடியேறிய காலத்திலிருந்து இன்றுவரை ஒருபோதும் கண்டிராதவாறு, உன் வீடுகளையும், உன் அலுவலர்களின் வீடுகளையும், எகிப்தியருடைய அனைத்து வீடுகளையும் நிரப்பும்” என்றார். அதன் பின்னர் மோசே பார்வோனைவிட்டுத் திரும்பிப் போனார்.
7பார்வோனின் அலுவலர்கள் அவனிடம், “எதுவரை இந்த மனிதன் எமக்குக் கண்ணிப்பொறியாய் இருப்பான்? தங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு வழிபாடு செய்ய அந்த மக்களைப் போக விடும். எகிப்து நாடு பாழாகிப் போனதை நீர் இன்னும் உணரவில்லையா?” என்றார்கள்.
8எனவே மோசேயும் ஆரோனும் திரும்பவும் பார்வோனிடம் அழைத்து வரப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “போங்கள், உங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால் போகின்றவர்கள் யார்?” என்று கேட்டான்.
9அதற்கு மோசே, “எங்கள் வாலிபரோடும், முதியோரோடும், எங்கள் மகன்மாரோடும், மகள்மாரோடும் எங்கள் ஆட்டு மந்தைகளோடும், மாட்டு மந்தைகளோடும் நாங்கள் போவோம். ஏனெனில் நாங்கள் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாட வேண்டும்” என்றார்.
10அதற்குப் பார்வோன் அவனிடம், “என்ன! உங்கள் பெண்களோடும், பிள்ளைகளோடும் உங்களைப் போகவிட்டு, ‘கர்த்தர் உங்களோடுகூட இருப்பாராக’ என்று சொல்வேனா? நிச்சயமாக நீ தீயநோக்கம் கொண்டுள்ளாய். 11இல்லை; ஆண்கள் மட்டும் போய் கர்த்தரை வழிபடட்டும். அதைத்தானே நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்” என்றான். பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து துரத்தி விடப்பட்டார்கள்.
12அப்போது கர்த்தர் மோசேயிடம், “எகிப்தின்மீது உன் கையை நீட்டு. அப்போது நாட்டின்மீது வெட்டுக்கிளிக் கூட்டம் வந்து ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய, வயல்வெளியில் உள்ள எல்லாவற்றையும் தின்றுவிடும்” என்றார்.
13மோசே தன் கோலை எகிப்தின்மீது நீட்டினார். அப்போது கர்த்தர், அன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் கொண்டல் காற்றை கிழக்கிலிருந்து நாட்டின் மேலாக வீசச் செய்தார். காலையில் அக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. 14அவை எகிப்தின்மீது படையாக வந்து, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெருந்தொகையாக தங்கியது. வெட்டுக்கிளிகளினால் உண்டான இத்தகைய வாதை இதற்கு முன் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை. 15அவை நாட்டின் மேற்பரப்பு முழுவதையும் மூடியதனால் நிலம் இருளடைந்தது. ஆலங்கட்டி மழைக்குப் பின்னர் எஞ்சிய எல்லாப் பயிர்களையும், மரங்களிலுள்ள பழங்களையும் அவை தின்றதால், எகிப்து நாடு முழுவதிலும் உள்ள மரங்களிலோ செடிகளிலோ பசுமையானதாக ஒன்றும் எஞ்சியிருக்கவில்லை.
16அப்போது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாய் அழைப்பித்து, அவர்களிடம், “நான் உங்கள் இறைவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். 17ஆகையால் இன்னொரு முறை என் பாவத்தை மன்னித்து, இந்த மரண வாதையை என்னைவிட்டு அகற்றும்படி உங்கள் இறைவனாகிய கர்த்தரிடம் மன்றாடுங்கள்” என்றான்.
18அப்போது மோசே பார்வோனை விட்டுப் போய், கர்த்தரிடம் மன்றாடினார். 19கர்த்தர் காற்றைப் பலத்த மேல்காற்றாக வீசச் செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிக் கொண்டுபோய் செங்கடலுக்குள் சேர்த்தது. எகிப்தின் எல்லைக்குள் ஒரு வெட்டுக்கிளியேனும் எஞ்சியிருக்கவில்லை. 20ஆனாலும் கர்த்தர் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைப் போக விடவில்லை.
ஒன்பதாம் வாதையாகிய இருள்
21அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை ஆகாயத்துக்கு நேராக நீட்டு. அப்போது எல்லோரும் உணரக்கூடிய காரிருள் எகிப்தின்மீது பரவும்” என்றார். 22மோசே தன் கையை ஆகாயத்தை நோக்கி நீட்டினான். அப்போது மூன்று நாட்கள் முழுமையான காரிருள் எகிப்து முழுவதையும் மூடியது. 23மூன்று நாட்களுக்கு எவரும் வேறொருவரைப் பார்க்கவோ, அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆயினும் அனைத்து இஸ்ரயேலருக்கும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் வெளிச்சம் இருந்தது.
24அப்போது பார்வோன் மோசேயை அழைப்பித்து அவனிடம், “போங்கள், கர்த்தருக்கு வழிபாடு செய்யுங்கள். உங்களுடன் உங்கள் பெண்களும், பிள்ளைகளும் போகலாம். ஆனால் ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இங்கே இருக்கட்டும்” என்றான்.
25அதற்கு மோசே, “எங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு பலிகளோடும், தகனபலிகளோடும் செல்ல நீர் எங்களை அனுமதிக்க வேண்டும். 26எங்கள் மிருகங்களும் எங்களோடு வரவேண்டும். ஒரு மிருகத்தையாவது விட்டுச் செல்ல முடியாது. எங்கள் இறைவனாகிய கர்த்தரை வழிபடுவதற்கு அவற்றிலிருந்து சிலவற்றை எடுக்க வேண்டும். நாங்கள் எதைக்கொண்டு கர்த்தரை வழிபடுவோம் என்று, அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது” என்றார்.
27கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை. 28பார்வோன் மோசேயிடம், “நீ என் கண் முன் நில்லாதே, போ! திரும்பவும் என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு! நீ என் முகத்தைப் பார்க்கும் நாளில் மரணிப்பாய்” என்றான்.
29அதற்கு மோசே, “நீர் சொன்னது சரி! இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப் போவதில்லை” என்றார்.
Currently Selected:
யாத்திராகமம் 10: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.