சங்கீதம் 104:24-35

சங்கீதம் 104:24-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும். நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, அவை சேகரித்துக்கொள்கின்றன; நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. நீர் உமது முகத்தை மறைக்கும்போது, அவை திகைக்கின்றன; நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. நீர் உமது ஆவியை அனுப்புகையில், அவை படைக்கப்படுகின்றன; நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர். யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன. நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள்.

சங்கீதம் 104:24-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு. அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும். நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர். யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார். அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும். நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; நான் யெகோவாவுக்குள் மகிழுவேன். பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, அல்லேலூயா.

சங்கீதம் 104:24-35 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம். சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன. நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன. தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன. தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர். தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும். நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். அவை சோர்ந்து மரிக்கும். அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும். ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர். கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்! கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும். கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும். அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும். என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன். நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன். பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.

சங்கீதம் 104:24-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது: அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு. அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. ஏற்றவேளையில் ஆகாரத்தைத்தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக் கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக் கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர். கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார். அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும். நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன். பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்