புலம்பல் 2:1-6
புலம்பல் 2:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்; இஸ்ரயேலின் சீர்சிறப்பை வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்; அவர் தமது கோபத்தின் நாளில் தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை. யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; யூதா மகளின் கோட்டைகளை தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். அரசுகளையும், அதன் இளவரசர்களையும் அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார். அவருடைய கோபத்தினால் இஸ்ரயேலின் முழு பலத்தையும் இல்லாமல் பண்ணினார். அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். அவர் யாக்கோபின் நாட்டில், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார். அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது. அவர் பகைவனைப்போல கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்; சீயோன் மகளின் கூடாரத்தில் தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார். ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்; அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி, அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார். யூதாவின் மகளுக்கு புலம்பலையும், துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார். அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார். யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும், ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்; தமது கடுங்கோபத்தில் அரசனையும், ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார்.
புலம்பல் 2:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார். ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார். பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார். தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்; யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து, தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.
புலம்பல் 2:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் சீயோன் குமாரத்தியை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார். அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார். கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை. கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார். அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார். அவர் அவரது கோபத்தில் யூதா குமாரத்தியின் கோட்டைகளை அழித்தார். கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும் அதன் ராஜாக்களையும் தரையில் தூக்கி எறிந்தார். அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார். கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார். அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார். பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார். அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரிந்தார். அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற நெருப்பைப் போன்று இருந்தார். கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார். அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார். அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார். கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார். கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார். அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார். கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார். அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார். அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார். அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார். அவர் யூதா குமாரத்தியின் மரித்த ஜனங்களுக்காக மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார். கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார். ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார். கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும், ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார். கர்த்தர் ராஜா மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார். அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
புலம்பல் 2:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார். ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜூவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார். பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார். ஆண்டவர் பகைஞன் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரமனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார். தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.