சகரியா 2

2
அளவுநூல் பிடித்த மனிதன்
1அதன் பின்னர் நான் பார்த்தபோது, தன் கையில் அளவுநூலைப் பிடித்த ஒரு இளைஞன் எனக்கு முன்பாக நின்றான். 2“நீ எங்கே போகின்றாய்?” என நான் அவனிடம் கேட்டேன்.
அதற்கு அவன், “எருசலேமின் நீளத்தையும் அகலத்தையும் அறிந்துகொள்வதற்காக அதை அளப்பதற்குப் போகின்றேன்” எனப் பதிலளித்தான்.
3அப்போது இதோ, என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் முன்னே வர, அவனைச் சந்திக்க வேறொரு தூதன் முன்னே வந்து, 4அந்தத் தூதனிடம், “நீ ஓடிப் போய் அந்த இளைஞனிடம் சொல்ல வேண்டியதாவது: ‘எருசலேம் பெருந்திரளான மக்களும் மந்தைகளும் நிறைந்த மதில்களற்ற பட்டணமாயிருக்கும். 5நானே அதைச் சூழ தீச் சுவராக இருந்து, நானே அதற்குள்ளே அதன் மகிமையாகவும் இருப்பேன்’ என கர்த்தர் அறிவிக்கின்றார்” என்றான்.
6“வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன் என்று கர்த்தர் கூறுகின்றார். இப்போது, வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டை விட்டுத் தப்பி வாருங்கள்” என்று கர்த்தர் கூறுகின்றார்.
7“இப்போது வா! பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, தப்பியோடி வா” 8சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “அவர் என்னை மகிமைப்படுத்திய பின்னர், உங்களைச் சூறையாடின பிற இனங்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கின்றார். ஏனெனில் உங்களைத் தொடுகின்றவன் அவருடைய கண்மணியைத் தொடுகின்றான். 9நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்போது சேனைகளின் கர்த்தரே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
10“சீயோன் மகளே, சத்தமிட்டு களிகூர்ந்திடுவாய்! இதோ, நான் வந்து உன் மத்தியில் வாழ்வேன்” என கர்த்தர் அறிவிக்கின்றார். 11“அந்நாளிலே அநேக பிற இனத்தவர்கள் கர்த்தரிடம் இணைந்துகொண்டு என் மக்களாவார்கள். நான் உன் நடுவில் வாழும்போது, சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை நீ அறிந்துகொள்வாய். 12கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவைத் தமது உரிமைப் பங்காக்கி, மீண்டும் எருசலேம் பட்டணத்தைத் தெரிவுசெய்வார். 13மனுக்குலத்தாரே, நீங்கள் யாவரும் கர்த்தர் முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தமது பரிசுத்த இருப்பிடத்திலிருந்து தன்னை எழுந்திருக்கச் செய்கின்றார்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சகரியா 2: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்