சகரியா 11

11
1ஓ! லெபனோனே,
நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கும்படியாக
உன் கதவுகளைத் திறந்துவிடு.
2கேதுரு மரங்கள் வீழ்ந்ததால்,
தேவதாரு மரங்களே, நீங்கள் புலம்பியழுங்கள்.
அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டு அதிசிறந்த மரங்கள் அழிக்கப்பட்டதால்,
பாசான் பிரதேசத்தின் கர்வாலி மரங்களே, நீங்கள் புலம்பியழுங்கள்.
3மேய்ப்பர்களின் புலம்பலைக் கேளுங்கள்,
ஏனெனில் அவர்களின் செழிப்பு ஒழிந்தது.
சிங்கங்களின் கர்ச்சனையைக் கேளுங்கள்,
ஏனெனில் யோர்தான் பள்ளத்தாக்கின் அடர்ந்த புதர் அழிந்தது.
இரண்டு மேய்ப்பர்கள்
4என் இறைவனாகிய கர்த்தர் எனக்கு சொல்வது இதுவே: “கொல்லப்படுவதற்கு நியமிக்கப்பட்ட மந்தையை மேய்ப்பாயாக. 5அவற்றை வாங்குவோர் அவற்றைக் கொலைசெய்து, தண்டனைக்குத் தப்புகிறார்கள். விற்பனை செய்பவர்கள், ‘கர்த்தருக்குத் துதி; நான் செல்வந்தன்’ என்று சொல்கின்றார்கள். அவற்றின் சொந்த மேய்ப்பர்களோ அவற்றுக்கு இரக்கம் காட்டவில்லை. 6ஆகையால் நான் இந்நாட்டு#11:6 இந்நாட்டு யூதாவின் மக்கள் மக்கள்மீது இனி ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார். “நான் அவர்கள் ஒவ்வொருவனையும், அவனது அயலவனின் கையிலும், அரசனின் கையிலும் ஒப்படைப்பேன். அவர்கள் நாட்டை ஒடுக்குவார்கள். நான் அவர்களின் கைகளிலிருந்து இவர்களைத் தப்புவிக்க மாட்டேன்.”
7எனவே கொல்லப்படுவதற்கென நியமிக்கப்பட்ட மந்தையை நான் மேய்த்தேன். முக்கியமாக மந்தையில் ஒடுக்கப்பட்டதை நான் பராமரித்தேன். அப்போது மேய்ப்பனின் இரண்டு கோல்களை எடுத்து ஒன்றுக்கு தயவு என்றும், மற்றொன்றுக்கு ஐக்கியம் என்றும் பெயரிட்டு, மந்தைகளை அவற்றைக்கொண்டு மேய்த்தேன். 8ஒரே மாதத்தில் மூன்று பயனற்ற மேய்ப்பர்களை அகற்றினேன்.
ஆனால் அந்த மந்தையும் என்னை வெறுத்ததால் நான் அவற்றைக் குறித்து சலிப்படைந்து, 9“நான் உங்கள் மேய்ப்பனாயிருக்க மாட்டேன். இறப்பது இறக்கட்டும், அழிகிறது அழியட்டும். மீதியாயிருப்பவை ஒன்றின் சதையை மற்றொன்று விழுங்கட்டும்” என்று சொன்னேன்.
10பின்னர் நான் தயவு என்கிற என் கோலை எடுத்து முறித்துப் போட்டேன். அதனால் பல்லின மக்களுடன் நான் செய்துகொண்ட உடன்படிக்கை ரத்துச் செய்யப்பட்டது. 11அந்தநாளிலே அந்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்பட்டது, எனவே என்னை கவனித்துக் கொண்டிருந்த மந்தையில் ஒடுக்கப்பட்டவர்கள், இது கர்த்தருடைய வார்த்தை என்பதை அறிந்துகொண்டார்கள்.
12அப்போது நான் அவர்களிடம், “அது நல்லது என நீங்கள் கருதினால் எனது கூலியைக் கொடுங்கள்; இல்லையெனில் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்றேன். அப்போது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக் காசுகளை#11:12 முப்பது வெள்ளிக் காசுகளை – அந்நாட்களில் தொழிலாளியின் ஒரு மாதக் கூலி நிறுத்தார்கள்.
13அதன் பின்னர் கர்த்தர் என்னிடம், “அதை மட்பாண்டத் தொழிலாளியிடம்#11:13 மட்பாண்டத் தொழிலாளியிடம் – அல்லது ஆலய திரவியசாலை வீசியெறிந்து விடு. இது அவர்கள் எனக்கென மதிப்பிட்ட மேன்மையான விலை!” என்று சொன்னார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளை எடுத்து கர்த்தரின் ஆலயத்திலிருந்த மட்பாண்டத் தொழிலாளியிடத்தில் வீசியெறிந்து விட்டேன்.
14பின்பு நான் ஐக்கியம் என்னும் எனது இரண்டாவது கோலையும் முறித்து, யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தைக் குலைத்துப் போட்டேன்.
15அதன் பின்னர் கர்த்தர் எனக்குக் கூறியது இதுவே, “மறுபடியும் நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுக்குரிய கருவிகளை எடுத்துக்கொள். 16ஏனெனில் இதோ பார்! நான் இந்த நாட்டின்மீது ஒரு மேய்ப்பனை எழுப்பப் போகிறேன். அவன் அழிந்துபோனதைக் குறித்துக் கவலைப்படவோ, குட்டிகளைத் தேடவோ, காயமுற்றதைக் குணமாக்கவோ, நலமானவற்றுக்கு உணவளிக்கவோ மாட்டான். ஆனால் கொழுத்த ஆடுகளின் குளம்புகளைக் கிழித்து அதன் இறைச்சியை உண்ணுவான்.
17“மந்தையைக் கைவிடுகின்ற
பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ பேரழிவு!
அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும்.
அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும்.
அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சகரியா 11: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்