எண்ணாகமம் 18:21-27
எண்ணாகமம் 18:21-27 TCV
“லேவியர் சபைக் கூடாரத்தில் பணிசெய்கையில் அவர்கள் செய்யும் வேலைக்குக் கைமாறாக, இஸ்ரயேலிலுள்ள பத்தில் ஒன்றான காணிக்கைகளையெல்லாம் சொத்தாகக் கொடுக்கிறேன். இஸ்ரயேலர் இனிமேல் சபைக் கூடாரத்திற்கு அருகே போகக்கூடாது. மீறினால், தங்கள் பாவத்தின் விளைவுகளைத் தாங்களே அனுபவித்துச் சாவார்கள். சபைக் வேலைகளை லேவியர் மட்டுமே செய்யவேண்டும். அவ்வேலையில் ஏற்படும் குற்றங்களுக்கும் அவர்கள் பொறுப்பாளியாவார்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாய் இருக்கும். இஸ்ரயேலருக்குள்ளும் லேவியர் உரிமைச்சொத்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் பத்தில் ஒரு பங்கை, நான் லேவியரின் உரிமைச்சொத்தாக அவர்களுக்குக் கொடுப்பேன். அதனால்தான் நான் ‘இஸ்ரயேலர் மத்தியில் அவர்களுக்கு நிரந்தரமான உரிமைச்சொத்து இருக்காது என்று அவர்களைக் குறித்துச் சொன்னேன்’ ” என்றார். பின்பு யெகோவா மோசேயிடம், “நீ லேவியருடன் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கை நீங்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெறும்போதெல்லாம் அந்த பத்தில் ஒரு பங்கில், பத்தில் ஒரு பங்கை, யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். நீங்கள் கொடுக்கும் காணிக்கை சூடடிக்கும் களத்தில் பெறப்படும் தானியம்போல் அல்லது திராட்சை ஆலையிலிருந்து வரும் திராட்சை இரசம்போல் உங்களுக்குக் கருதப்படும்.

