யோசுவா 22:1-5

யோசுவா 22:1-5 TCV

அதன்பின்பு யோசுவா ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரை வரவழைத்து, அவர்களிடம், “யெகோவாவின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியெல்லாம் நீங்கள் செய்து, நான் கட்டளையிட்ட எல்லாவற்றிலும், எனக்கும் கீழ்ப்படிந்தீர்கள். இன்றுவரை வெகுகாலமாக நீங்கள் உங்கள் சகோதரரை கைவிட்டுவிடவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த பணியை நீங்கள் செய்துமுடித்தீர்கள். இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா தாம் வாக்களித்தபடியே, உங்கள் சகோதரருக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே யெகோவாவின் அடியவனாகிய மோசே யோர்தானுக்கு அப்பால் உங்களுக்குக் கொடுத்த நாட்டில் இருக்கும் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போங்கள். ஆனால் யெகோவாவின் அடியவனாகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளையையும் சட்டத்தையும் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்: உங்கள் இறைவனாகிய யெகோவாவை நேசித்து, அவரின் வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருக்குச் சேவை செய்யக் கவனமாய் இருங்கள்” என்றான்.