எரேமியா 44:16-23

எரேமியா 44:16-23 TCV

“யெகோவாவின் பெயரால் நீ எங்களுக்குக் கூறிய செய்தியை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை. ஆனால் வான அரசிக்கு நாங்கள் தூபம் செலுத்துவதையும் பானபலிகள் வார்ப்பதையும் நிறுத்தியதிலிருந்து, நாங்கள் எல்லாவற்றிலும் குறைவடைந்தோம். வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கிறோம்” என்றார்கள். மேலும் அங்கிருந்த பெண்கள், “நாங்கள் வான அரசிக்குத் தூபங்காட்டி, அவளுக்கு பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் அவளுடைய உருவமுள்ள அப்பங்களைச் சுட்டதையும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றியதையும் எங்கள் கணவன்மார் அறியாமலா இருந்தார்கள்?” என்று கேட்டார்கள். அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும், “யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் தெருக்களிலும், நீங்களும், உங்கள் தந்தையரும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், நாட்டு மக்களும் தூபங்காட்டியதைப் பற்றி யெகோவா தெரியாமலிருந்தாரா? உங்கள் கொடிய செயல்களையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும் யெகோவாவினால் சகிக்க முடியாமல் போயிற்று. அதனால்தான் யெகோவா உங்கள் நாட்டை இன்று இருப்பதுபோல் குடியில்லாமல் பாழடையச் செய்து, சாபத்திற்குள்ளாக்கினார். நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களையோ அவரது ஒழுங்குவிதிகளையோ அவர் சொன்னவற்றையோ கைக்கொள்ளாமலும் விட்டீர்கள். ஆகையால் இன்று நீங்கள் காணும் பேராபத்து உங்கள்மேல் வந்திருக்கிறது” என்றான்.

எரேமியா 44:16-23 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்