லூக் 10:25-42

லூக் 10:25-42 IRVTAM

அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான். இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி, அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார். பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

லூக் 10:25-42 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்