2 கொரி 12:14-21

2 கொரி 12:14-21 IRVTAM

இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா? தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா? நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம். ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்; மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.