1 தீமோ 2:1-8
1 தீமோ 2:1-8 IRVTAM
நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது. எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன். அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.


