யோவேல் 3
3
1இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
2நான் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,
3அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண் குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக்கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
4தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன்.
5நீங்கள் என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்து, இன்பமும் உச்சிதமுமான என் பொருள்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய்,
6யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.
7இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரப்பண்ணி, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து,
8உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
9இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
10உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
11சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.
12ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
13பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.
14நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.
15சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.
16 கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.
17என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக் கடந்துபோவதில்லை.
18அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும்; ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்,
19யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்தரமாகும்.
20ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
21நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
اکنون انتخاب شده:
யோவேல் 3: TAOVBSI
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.