சங் 59
59
சங்கீதம் 59
இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
1என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து,
இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
3இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்;
யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும்,
பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.
4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும்,
ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்;
எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
5சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்;
வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
6அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது,
கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8ஆனாலும் யெகோவாவே,
நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்;
அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்;
தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்;
தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே;
எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து,
அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது;
அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால்
தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி,
அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்;
இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)
14அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு,
ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல்,
முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
اکنون انتخاب شده:
சங் 59: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.