சங் 107
107
சங்கீதம் 107
1யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள
பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள்,
அப்படிச் சொல்வார்களாக.
4அவர்கள் வாழும் ஊரைக்காணாமல்,
வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
5பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும்
அலைந்து திரிந்தார்கள்.
6தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
7வாழும் ஊருக்குப்போய்ச்சேர,
அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
8தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,
பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
9அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து,
உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
11காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,
ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
12அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;
உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
13தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
14காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து,
அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
15யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து,
இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
16அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
17புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும்
தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
18அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது,
அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
19தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்;
அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி,
அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
21அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
22நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
23கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
24அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும்,
ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி,
அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
26அவர்கள் வானத்தில் ஏறி,
ஆழங்களில் இறங்குகிறார்கள்,
அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
27குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்;
அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
28அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
30அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்;
தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
31அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
32மக்களின் சபையிலே அவரை உயர்த்தி,
மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
33அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
34குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
35அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும்,
வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்;
அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,
அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
38அவர்களை ஆசீர்வதிக்கிறார்,
மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும்,
துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
40அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,
வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
41எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,
உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து,
அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்;
நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;
ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
اکنون انتخاب شده:
சங் 107: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.