நீதி 4
4
அத்தியாயம் 4
ஞானமே பிரதானம்
1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,
புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்;
என் உபதேசத்தை விடாதிருங்கள்.
3நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும்,
என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது:
உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக;
என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி;
என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்;
அதின்மேல் பிரியமாக இரு,
அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
9அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்;
அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்;
செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை;
நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள்,
அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே;
தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
15அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே;
அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
16தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது;
அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு,
கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும்
அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்;
தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
20என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி;
என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
21அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும்,
அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
24வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி,
உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக;
உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
26உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்;
உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே;
உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.
اکنون انتخاب شده:
நீதி 4: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.