லேவி 11
11
அத்தியாயம் 11
அனுமதிக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட உணவுகள்
1யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2“நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்: 3மிருகங்களில் விரிகுளம்புள்ளதாக இருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிற அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம். 4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். 5குழிமுயலானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். 6முயலானது அசைபோடுகிறதாக இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். 7பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாக இருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். 8இவைகளின் மாம்சத்தைச் சாப்பிடவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 9தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம். 10ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 11அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக. 12தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 13“பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், 14பருந்தும், சகலவித வல்லூறும், 15சகலவித காகங்களும், 16தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், 17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும், 18நாரையும், கூழக்கடாவும், குருகும், 19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே. 20“பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 21ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே, 22வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம். 23பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 24“அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 25அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
அசுத்தமான மிருகங்கள்
26விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான். 27நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 28அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 29“தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும், 30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே. 31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 32அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும். 33அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும். 34சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும். 35அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 36ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான். 37மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது. 38அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 39“உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 40அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 41“தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது. 42தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள். 43ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள். 44நான் உங்கள் தேவனாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக. 45நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக. 46சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், சாப்பிடத்தக்க உயிரினங்களுக்கும் சாப்பிடத்தகாத உயிரினங்களுக்கும் வித்தியாசம் உண்டாக்குவதற்காக, 47மிருகத்திற்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.
اکنون انتخاب شده:
லேவி 11: IRVTam
هایلایت
به اشتراک گذاشتن
مقایسه
کپی
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.