யோசு 9
9
அத்தியாயம் 9
கிபியோனியர்களின் தந்திரம்
1யோர்தான் நதிக்கு மேற்கு திசையிலுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான மத்திய தரை சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, 2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள். 3எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, 4ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் தேச பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து,#9:4 தங்களுக்கு உணவு பொருட்களை ஆயுத்தம் பண்ணினார்கள் பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து, 5பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது. 6அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள். 7அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள். 8அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். 9அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும், 10அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். 11ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். 12உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. 13நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள். 14அப்பொழுது இஸ்ரவேலர்கள்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள். 15யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள். 16அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். 17இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள். 18சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள். 19அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது. 20கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம். 21பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள். 22பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்? 23இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான். 24அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம். 25இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள். 26அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான். 27இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.
اکنون انتخاب شده:
யோசு 9: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.