நியா 5
5
அத்தியாயம் 5
தெபொராளின் பாடல்
1அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:
2“#5:2 யெகோவா இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டியதற்காகவும் யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும்,
மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
3ராஜாக்களே, கேளுங்கள்;
அதிபதிகளே, செவிகொடுங்கள்;
நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன்.
4யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு,
ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது,
பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது,
மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
5யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது;
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
6ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும்,
யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள்
பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
7தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும்,
இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும்,
கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
8புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? 9மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த
இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது;
யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.
10வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே,
வழியில் நடக்கிறவர்களே,
இதைப் பற்றி யோசியுங்கள்.
11தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின்#5:11 சங்கீத பாடகர்கள் இரைச்சலுக்கு நீங்கினவர்கள்
அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும்,
அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த
நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்;
அதுமுதல் யெகோவாவின் மக்கள்
நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
12விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;
பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே,
உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
13மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்;
யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
14அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது;
உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்;
மாகீரிலிருந்து அதிபதிகளும்,
செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்;
பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும்
பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்;
ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க,
நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன?
ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
17கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்;
தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன?
ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி,
மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல்
மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
19ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்;
அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்;
அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று;
நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே,
அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே,
நீ பெலவான்களை மிதித்தாய்.
22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே,
பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
23மேரோசைச் சபியுங்கள்;
அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று
யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்;
அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை;
பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.
24பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்;
கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
25தண்ணீரைக் கேட்டான்,
பாலைக் கொடுத்தாள்;
ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
26தன்னுடைய கையால் ஆணியையும்,
தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து,
சிசெராவை அடித்தாள்;
அவனுடைய தலையில் உருவக்குத்தி,
அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.
27அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்;
அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.
28“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து:
அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன?
அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள்.
29அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
30அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ,
ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும்,
சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும்,
கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், #5:30 கொள்ளையிட்டவர்களின் என்
கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
31யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்;
அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.
اکنون انتخاب شده:
நியா 5: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.