யாத் 8
8
அத்தியாயம் 8
2 வது-தவளைகளின் வாதை
1அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: “எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. 2நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன். 3நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும். 4அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்” என்றார். 5மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார். 6அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது. 7மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள். 8பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “அந்தத் தவளைகள் என்னையும் என்னுடைய மக்களையும்விட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; யெகோவாவுக்குப் பலியிடும்படி மக்களைப் போகவிடுவேன்” என்றான். 9அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: “தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக” என்றான். 10அதற்கு அவன்: “நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: “எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும். 11தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும்” என்றான். 12மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு எதிராக வரச்செய்த தவளைகளினால் மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான். 13யெகோவா மோசேயின் சொற்படிச் செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போனது. 14அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது. 15இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; யெகோவா சொல்லியிருந்தபடியே ஆனது.
3 வது-பேன்களின் வாதை
16அப்பொழுது யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: “உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல்” என்றார். 17அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன்னுடைய கையில் இருந்த தன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள்மேலும், மிருகஜீவன்கள்மேலும், எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களானது. 18மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது. 19அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
4. வது-வண்டுகளின் வாதை
20அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு. 21என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும். 22பூமியின் நடுவில் நானே யெகோவா என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி, 23என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். 24அப்படியே யெகோவா செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது. 25அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு இந்த தேசத்திலேயே பலியிடுங்கள்” என்றான். 26அதற்கு மோசே: “அப்படிச் செய்யக்கூடாது; எங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் எகிப்தியர்களுடைய அருவருப்பைப் பலியிடுகிறதாக இருக்குமே, எகிப்தியர்களுடைய அருவருப்பை நாங்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா? 27நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணமாக போய், எங்களுடைய தேவனாகிய யெகோவா எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம்” என்றான். 28அப்பொழுது பார்வோன்: “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு வனாந்திரத்தில் பலியிடும்படி, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாகப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்” என்றான். 29அதற்கு மோசே: “நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின்பு, நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவருடைய வேலைக்காரர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும்படி, நான் யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், யெகோவாவுக்குப் பலியிடுகிறதற்கு மக்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி ஏமாற்றாதிருப்பாராக” என்றான். 30மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவா நோக்கி வேண்டுதல் செய்தான். 31அப்பொழுது யெகோவா மோசேயின் சொற்படி, வண்டுவகைகள் பார்வோனையும் அவனுடைய வேலைக்காரர்களையும், மக்களையும்விட்டு நீங்கும்படிச் செய்தார்; ஒன்றுகூட மீதியாக இருக்கவில்லை. 32பார்வோனோ, இந்த முறையும் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, மக்களைப் போகவிடாமல் இருந்தான்.
اکنون انتخاب شده:
யாத் 8: IRVTam
هایلایت
به اشتراک گذاشتن
مقایسه
کپی
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.