யாத் 38
38
அத்தியாயம் 38
தகனபலிபீடம் செய்யப்பட்டது. யாத். 27:1-8.
1தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழநீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது. 2அதின் நான்கு மூலைகளிலும் அதனோடு ஒன்றாக அதின் நான்கு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி, 3அந்தப் பீடத்தின் எல்லா பணிப்பொருட்களாகிய சாம்பல் எடுக்கும் சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தினால் செய்தான். 4வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கும்படியாக வைத்து, 5அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நான்கு வளையங்களை வார்ப்பித்து, 6அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி, 7பலிபீடத்தை அவைகளால் சுமக்கும்படியாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளால் செய்தான்.
8ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாகக் கூடின பெண்கள் கண்ணாடியாக பயன்படுத்தின வெண்கலத்தாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
ஆசரிப்பு கூடாரத்தின் பிராகாரம் உண்டாக்கப்பட்டது. யாத்திராகமம். 27:9-19.
9பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான். 10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. 11வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி. 12மேற்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. 13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம். 14ஒருபுறத்துத் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. 15பிராகாரவாசலின் ஒருபுறத்திற்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. 16சுற்றுபிராகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது. 17தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், கம்பிகளும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிக்கம்பிகள் போடப்பட்டவைகளுமாக இருந்தது. 18பிராகாரத்தின் வாசலின் தொங்கு திரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட சித்திரத்தையல் வேலையாக இருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்கு திரைகளைப்போல ஐந்து முழம். 19அவைகளின் தூண்கள் நான்கு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நான்கு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. 20ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலும் இருந்த ஆப்புகளெல்லாம் வெண்கலம்.
ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்கள்.
21மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் கையிலே லேவியர்களின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்களின் தொகை இதுவே. 22யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான். 23அவனுடன் தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல் வேலை செய்கிறவனுமாக இருந்தான்.
24பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் எல்லாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல்#38:24 ஏறக்குறைய 1,050 கிலோ பொன். நிறையுமாக இருந்தது.
25சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல்#38:25 சேக்கலின்படி 19.5 கிராம் 1 தாலந்து 35 கிலோ எடை. நிறையுமாக இருந்தது. 26எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது. 27அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்க்கப்பட்டது; பாதத்திற்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவானது. 28அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குக் கொக்கிகளைச்செய்து, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குக் கம்பிகளை உண்டாக்கினான். 29காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது. 30அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் எல்லாப் பணிப்பொருட்களையும், 31சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.
اکنون انتخاب شده:
யாத் 38: IRVTam
هایلایت
به اشتراک گذاشتن
مقایسه
کپی
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.